எப்படி மறப்பேன் ?
………………
அன்பும் அறிவும் பண்புடன் பாசமும்
ஒன்றுக்கு ஒன்று குறையாமல்
என்றும் உன் மாணவன் வாழ்வில் இருக்க
அன்றே வழி காட்டிய ஆசான் அய்யா நீ !
எப்படி மறப்பேன் நீ காட்டிய வழியை நான் ?
பள்ளி கணக்கில் கூட்டலும் கழித்தலும் உண்டு
ஆனால் நன்னெறி வாழ்க்கைக் கணக்கில் கூட்டலும்
பெருக்கலும் மட்டுமே என்று சொன்னவன் அய்யா நீ !
உன் மாணவன் நான் …இன்றும் உன் மாணவன்தான் !
எப்படி மறப்பேன் உன் பாடத்தை நான் ?
தமிழ் செய்யுள் பாடம் படிக்கும் நேரம் …செய்ய முடியும்
செய்யுள் ஒன்று உன்னாலும் என்று சொல்லி நாலடி
கவிதை பல என்னை எழுத வைத்து நீயும் நல்ல கவிஞன் ஆவாய்
ஒருநாள் என்று நீ சொன்ன சமயம் விண்ணில் பறந்தேனே நான் !
எப்படி மறப்பேன் உன்னை நான் இன்று ?
தினம் ஒரு திருக்குறள் கரும்பலகையில் எழுதி வாழ்க்கையின்
நியதி என்னவென்று உன் மாணவர்கள் மனதில் பதிய வைத்த
ஒரு நல்ல ஆசிரியர் நீ …இன்றும் அதுவே என் வாழ்வின் மந்திரம் !
எப்படி மறப்பேன் நான் என் வாழ்வை சிறக்க வைத்த உன்னை ?
Natarajan
My Kavithai published in http://www.dinamani.com on 27th June 2016