புது வசந்தம்
கத்தி இல்லை ரத்தம் இல்லை
யுத்தம் ஒன்று பார்த்து விட்டோம்
இன்று ! இதுதான் மூன்றாம்
உலகப் போரா !
அவன் பெரியவன் இவன் சிறியவன்
என்னும் பேதம் இல்லை உனக்கு !
கண்ணுக்கு தெரியவில்லை நீ யார்
என்று உலகுக்கு !
உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டாய்
இயற்கையை மீட்டு எடுத்து விட்டாய்
மாசு இல்லா நீல வானம் …தெளிந்த
நீர் ஓடை … மனிதன் சுவாசிக்க
மாசில்லா நல்ல காற்று ! நினைத்துப்
பார்த்தால் இது ஒரு அதிசயமே !
பறவைகளின் இனிய கீதம் …அந்த காலம்
அந்த காலம் என்று சொல்வோமே அந்த
வசந்த காலம் மீண்டும் புது வசந்தமாய்
மலர ஒரு தூசு நீதானே காரணம் !
தூசு தட்டி எழுப்பிவிட்டாய் புது உலகை !
மாசு படிந்த மனித மனமும் ஓசையின்றி
வேற்றுமையில் ஒற்றுமை கீதம் இசைக்கும்
இந்த நேரம் தூசு நீ வந்த வேலை முடிந்தது
என்று ஓசை இல்லாமல் கிளம்பி விடு !
சராசரி மனிதன் எனக்கும் புது உலக அழகைப்
பார்க்க ஆசை !சிறகடித்துப் பறக்கும்
பறவையின் இன்னிசை கீதம் கேட்க ஆசை !
கந்தசாமி நடராஜன்