வாரம் ஒரு கவிதை

விடுதலை எப்போது எனக்கு ?

என் வீட்டு தோட்டப் பறவை நோட்டம் 
பாக்குது என்னை தினமும் !
அதன் கூட்டுக்குள் இருந்து ஒரு பாட்டு 
பட்டென்று பறந்து விடுது கூட்டை விட்டு !
என் வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்தது 
என் வீட்டை இன்று !
என்ன பயம் உனக்கு என்னைப் பார்த்து 
உன் வீட்டுக் கூட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாய் 
மனிதா நீ …கேட்டது பறவை ! 
பயம் உன்னைப் பார்த்து இல்லை …கண்ணுக்கு 
தெரியா ஒரு கிருமி முடக்கி விட்டது என்னை என் கூட்டுக்குள்ளே !
சொன்னேன் பதில் நான் !
என்னையும் எல்லோரையும் கூண்டில் அடைத்துத்தானே 
பழக்கம் உனக்கு … ஒரு கிருமி உன்னை கூண்டில் 
அடைத்து விட்டதா … புரியலையே எனக்கு !
பறவை உனக்கு மட்டுமா புரியவில்லை 
மனிதன் எனக்கும் இன்னும் புரியவில்லையே 
அந்த கிருமியின் பலம் என்ன என்று ! விடை 
தெரியாமலே அடங்கி விட்டேன் என் வீட்டுக்குள் 
விடுதலை எப்போது எனக்கு ? 
தெரிந்தால் சொல்லு எனக்கு பறவையே !

கந்தசாமி நடராஜன்

Leave a comment