வாரம் ஒரு கவிதை !

அடக்கி வாசி மனிதா நீ !

++++++++++++++++++++

நீ அங்கு செல்லாதே …நீ  இங்கு 
வராதே ! … சொல்லாமல் 
கொள்ளாமல் பரவும்  வைரஸால் 
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !

என் கையில் எல்லாமே அடக்கம் 
என்னை மீறி என்ன நடக்கும் 
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !

இயற்கை இன்று போட்டு விட்டது 
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை 
தன் கோபத்தை ! 

புரிந்து நடந்து கொள்  மனிதா 
உன் எல்லைக்கோடு என்ன என்று 
தெரிந்து நடந்து கொள் !

இயற்கையின் எல்லைக் கோட்டை நீ 
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக் 
கோடும் கூட மூடப்படும் உனக்கு !

இயற்கையின் சீற்றத்தின்  ஒரு சிறு 
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

மனித நேயம் என்னும் மருந்து 


கண்ணுக்குத் தெரியாமல் பரவுவது 
வைரஸ் …புதுப் புதுப் பெயருடன் !
கண்ணுக்குத் தெரிந்தே பரவுவது 
வாட்ஸாப் வைரல் !

தெரியாமல் பரவும் வைரஸை விட 
தெரிந்தே பரவும் வைரலின் 
வேகமும் தாக்கமும் கொடுமை !

தெரியாமல் வளரும் வைரஸை 
தடுக்க முடியாது நம்மால்..ஆனால் 
தெரிந்தே பரப்ப விடும் வதந்தி 
என்னும் வைரலைத் தடுக்க 
முடியும் நம்மால் !…மனித 
நேயம் என்னும் மருந்து கொண்டு !
வதந்தி என்னும் வைரலைத் தடுப்போம் நாம் 
எடுப்போம் ஒரு சபதம் இன்று அதைத் தடுக்க 
மனித நேயத்தின் பெயரில் ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

அது அந்த காலம் !!!+++++++++++++++++

அரச மரம் சுற்றி அடி  வயிற்றைத் 
தொட்டுப் பார்த்த பெண்கள் காலம் 
ஒரு காலம் ! அது அந்த காலம் !

அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு 
அருகம் புல் ஜூஸ் குடித்து முடித்த
கையோடு அடி வயிறு தொட்டு தொந்தி

கரைந்து விட்டதா என்று ஆண்கள் பார்ப்பது 
இந்த காலம் !!!

கந்தசாமி நடராஜன்

கேள்வி எங்கே ?

கேள்வி எங்கே ? 

கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் 
தலைப்பு கொடுத்தால் ஒரு 
கவிதை பிறக்கும் தன்னால் !
இரண்டுமே இல்லை என்றால் 
வறண்டு விடும் கவிதை கிணறு !
முரண்டு பிடிக்கிறேன் என்று 
நினைக்க வேண்டாம் !
பிறக்க வேண்டும் என்னுள் ஒரு 
கவிதை மீண்டும் ! 
கேளுங்க ஒரு கேள்வி என்னை 
கேட்டு மகிழுங்க என் பதிலை 
ஒரு கவிதை வடிவில் ! 

கந்தசாமி நடராஜன்

எங்கே என் கை பேசி ?


வீட்டுக்கு ஓரே ஒரு தொலைபேசி 
ராஜா மாதிரி அமர்ந்திருக்கும் அதன் 
சிம்மாசனத்தில் …அது ஒரு காலம் !

அது சிணுங்கினால் அவ்வளவு பேரும் 
ஓடுவார் அதன் சிம்மாசனத்துக்கு !
ராஜ மரியாதை அதற்கு !

ஒரு வீட்டில் எல்லோர் கையிலும் 
ஒரு கை பேசி இப்போது ! 
எங்கே என் கை பேசி…ஒரு 
தேடல் காலையில் எழுந்தவுடனே !

எங்கேயும் விழுந்து கிடக்கும் வீட்டின் 
ஒரு மூலையில் … எங்கே என் கை 
பேசி ..எங்கே என் கை பேசி 
தேடும் வேட்டை தொடரும் நாள் முழுதும் !

கை பேசி இப்போது குழந்தை மாதிரி 
எடுப்பார் கை பிள்ளையாக !
அது சிணுங்காவிட்டாலும் அதைத் 
தட்டிக் கொடுக்க வேண்டும் …தடவிக் 
கொடுக்கவேண்டும் ….கையில் 
இல்லாத சமயம் தேட வேண்டும் எங்கே 
என் கை பேசி என்று ! கை பேசி இல்லாத
கை ஆயிரத்தில் ஒன்று இன்று !

கந்தசாமி நடராஜன்

22/01/2020

வாரம் ஒரு கவிதை …பொங்கல் வாழ்த்து

 

 

       
 


வண்ண வண்ண அட்டைகள் 
எண்ணங்களின் சிதறல்கள் 
வாழ்த்து பரிமாற்றம் அன்பு உள்ளங்களுக்கு 
பொங்கலுக்கு பொங்கல் ! 

ஒரு இல்லத்துக்கு அட்டை எத்தனை 
வரவு என்று கணக்கு வேறு ! 
பொங்கல் வாழ்த்து அட்டைக்கு நன்றி 
நவில அஞ்சல் அட்டையும் உண்டு !

கை பட எழுதிய இரண்டு அட்டைகளும் 
இன்று தேடினாலும்  கிடைக்காத பொக்கிஷம் !
அது ஒரு கனாக் காலம் !

காலத்தின் கோலம் இன்று ” ஹாப்பி 
பொங்கல் ” என்று  எந்திர மயமான 
குறும் செய்தி எல்லோருக்கும் அலைபேசியில் !

மனம் திறந்து சொல்கிறேன் நான் இன்று 
நெஞ்சம்  நிறைந்த வாழ்த்துக்களை தொலைத்து 
விட்டு நிற்கிறோம் என்று ! 

சொல்லுவோம் வாழ்த்துக்களை மனம் 
நிறைய …மின் அஞ்சல் மூலமாவது !
வாழ்த்து பெறுபவரின் நெஞ்சம் குளிரும் 
வாழ்த்தும் நம் மனமும் நிறையும் !

பொங்கலோ பொங்கல் ! 

கந்தசாமி நடராஜன்

 

வாரம் ஒரு கவிதை …” புத்தாண்டு சபதம் “

புத்தாண்டு சபதம்
++++++++++++++++
சபதம் எதுவும் எடுக்க மாட்டேன்  இந்த வருடம்
இதுவே எனது சபதம் இந்த வருடம் !
அதைக் கிழிப்பேன் இதைக் கிழிப்பேன்
என்று நினைத்தேன் சென்ற ஆண்டு !
எதையும் உருப்படியாய் செய்து கிழிக்கவில்லை
நான் சென்ற ஆண்டு !  தவறாமல் நான்
கிழித்தது தினசரி  நாட்காட்டி தாளை
மட்டுமே !
பிறகு எதற்கு புதிய சபதம் என்று ஒன்று ?
கந்தசாமி  நடராஜன்
06/01/2020

வாரம் ஒரு கவிதை …” சத்தம் போடும் சட்டம் “

சத்தம் போடும் ஒரு  சட்டம்

+++++++++++++++++++++++

குடியுரிமை திருத்த சட்டம் …இந்த சட்டம்
போடும் சத்தம் அதிகம் இன்று !
வாதம் விவாதம் தினம் தினம் இந்த
சட்டம் பற்றி !
குடியுரிமை கொடுக்கும் சட்டமா இல்லை
உரிமை பறிக்கும் சட்டமா என்று —
வாதம் விவாதம் தாண்டி விதண்டா வாதமும்
ஒரு தனி ஆவர்த்தனம் இந்த சட்ட திருத்தத்துக்கு !
இந்த சட்டம் போடும் சத்தத்தில் நம்ம
ஊர் “குடிமகன்” ஒருவர் சத்தம் போட்டு
கேட்கிறார் …என் “குடி” உரிமையை
இந்த சட்டம்  பறித்து விட்டதாம்
என் ” குடி  ” உரிமை கேட்டு நானும்
போராடுவேன் …என் உரிமைக்கு
குரல் கொடுப்பேன் என்கிறார் அந்த
“குடி” மகன் !

கந்தசாமி  நடராஜன்

22/12/2019

 

 

வாரம் ஒரு கவிதை …” மீண்டும் சந்திப்போம் “

மீண்டும் சந்திப்போம்
+++++++++++++++++++
பிரிவின் முடிவில் சொல்லும் வார்த்தை
மீண்டும் சந்திப்போம் !
நம்பிக்கை அது …எதுவும் நம் கையில்
இல்லா விட்டாலும் !
பள்ளி வாழ்க்கை …கல்லூரி வாழ்க்கை
பிரிந்தோம் அன்று!
மீண்டும் சந்திப்போம்  என்ற நம்பிக்கையுடன் !
நம்பிக்கையும் பொய்க்கவில்லை  நம் வாழ்வில் !
மீண்டும் சந்தித்தோம் நாம் மலரும் நினைவுகளுடன் !
பொன் விழா சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பமே
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித்தானே
விடை பெற்றோம் அன்றும் !
சிந்திப்போமா எங்கே எப்படி என்று மீண்டும்
சந்திப்பு என்று !
மீண்டும் சந்திப்போம் விரைவில் !
கந்தசாமி  நடராஜன்
14/12/2019

வாரம் ஒரு கவிதை …” அப்பாவின் நாற்காலி “

அப்பாவின் நாற்காலி
++++++++++++++++++++++
எனக்கு அது வேண்டும் …எனக்கு இது வேண்டும்
அப்பாவின் நினைவாக ….பிள்ளைகள் கேட்கின்றார்கள்
அப்பாவின் ஆஸ்தி ஒவ் வொன்றாக   …அப்பாவின்
அஸ்தி கடலில் கரைத்தவுடன் !
ஓரு பிள்ளை மட்டும் கேட்டான் அப்பாவின் நாற்காலி
மட்டும் போதும் தனக்கு என்று !
அவனுக்குத் தெரியும் அவன் அப்பாவின் கட்சிப்
பதவி நாற்காலியின் மதிப்பு என்ன என்று !
kandasami natarajan
in http://www.dinamni.com dated  11/12/2019