வாரம் ஒரு கவிதை….” ஒரு முறையேனும் ….”

ஒரு முறையேனும் …
………………..
அலை பேசி , கை பேசி எதுவும்
இல்லாமல் தனி ஒருவனாய்
என்னை மறந்து ,இந்த உலகை
மறந்து , வலையின் மாயையில்
இன்னும் சிக்காத ஒரு மண்ணின்
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில
வேண்டும் ஒரு நாள் முழுதும் !
அந்த மண்ணின் மரத்தில்
குடியிருக்கும் குயிலின் பாட்டு
பாட்டு மட்டும் கேட்க வேண்டும்
ஒரு நாள் முழுதும் நான் !
இது என் தீராத ஆசை !  என்
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில்
ஒரு முறையேனும் ?
Natarajan
in http://www.dinamani.com dated 25th June 2018

வாரம் ஒரு கவிதை….” மிச்சத்தை மீட்போம் …”

மிச்சத்தை  மீட்போம்
———————-
அடுக்கு மாடி கட்டிட மாயையில்
விளை நிலம் விலை போனது !
விரல் சொடுக்கி வீட்டில் இருந்தே
குரல் கொடுத்து அதன் விலை
என்ன என்றே தெரியாமல்
“ஆன் லைன்” வர்த்தகம் செய்வதில்
நமக்கு ஒரு பெருமை !
எது வாங்குகிறோம் ,எதற்கு
வாங்கு கிறோம்,  கொடுக்கும் விலை
சரிதானா அதற்கு … பார்க்க
நேரமில்லை நமக்கு!.
பட்டியல் இட்டு கணினியில் தெரியும்
மொத்த பணத்துக்கும் ஒரு அட்டை
எண் மட்டும் தேவை நமக்கு !
அயல் நாட்டு வர்த்தக மோகத்தில்
நம் நாட்டின் சிறு ,குறு வர்த்தகம்
சீர் குலைய வழி காட்டி விட்டோம் நாம் !
நம் நாட்டின் பாரம்பரிய அருமையும்
தெரியவில்லை நமக்கு …சொல்லியும்
தரவில்லை நாம் அதை  நம் பிள்ளைகளுக்கு !
யோகா முதல் பிள்ளையாருக்கு போடும்
தோப்புக்கரணம் வரை அதன் அருமை
பெருமை என்ன என்றே நமக்கு தெரியாது
வேறு ஒரு நாட்டுக்காரன் அதன் அருமை பெருமை
என்ன என்று நமக்கு சொல்லும் வரை !
தொலைத்து விட்டோம் நம் நாட்டின்
மாணிக்க கற்களை  வெறும் கற்கள்
என்று நினைத்து !
எஞ்சி இருப்பதை ஒரு துச்சமாக
நினைக்காமல் மிச்சம் இருப்பதையாவது
மதித்து மீட்டு எடுத்து கொடுப்போம்
நம் பிள்ளைகளுக்கு மறக்காமல் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  18th June 2018

வாரம் ஓரு கவிதை…. ” வெல்லும் சொல் “

வெல்லும் சொல் …
——————-
சொல்லலாம் எதையும் …சொல்வதை
செய்து காட்டவும் வேண்டும் தம்பி !
வெல்லலாம் எவரையும் வெறும்
வாய்ப் பேச்சால் என்று நினைப்பது
மணலில் வீடு கட்டி அதை விற்க
நினைப்பது போல !
செய்வதை மட்டும்  நீ சொல் …தம்பி !
சொன்னதை செய்தும்  காட்டு, உன் சொல்லை
நம்பும் உன் ஊருக்கு !
உன் சொல்வாக்கு …அதுவே
உன் செல்வாக்காக  இருக்க வேண்டும்
தம்பி !
நீ வெல்லலாம் …இல்லை  தோற்கலாம் !
கேள்வி அதுவல்ல !
வெல்வது என்றும் உன் சொல்லாக
இருக்க வேண்டும் தம்பி !
வெல்லும் உன் சொல், வெல்லும்
மற்றவர் இதயத்தையும் என்றும் !
மறவாதே இதை நீ … தம்பி !
நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
வெல்லும் சொல்லாக தன்னால்
மாறும் அப்போது !
K.Natarajan
in http://www.dinamani.com dated 11th June 2018

வாரம் ஒரு கவிதை….” வாழ்க்கையெனும் போர்க்களம் “

வாழ்க்கையெனும் போர்க்களம்
………………………..
குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில்
ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !
குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும்
தருணம் விளையாட்டு தளம் ஒன்று
உருவாகுது அதே வீட்டில் !
விளையாட்டு போல நாட்கள் கடந்து
அந்த குழந்தைக்கும் ஓரு குழந்தை
பிறக்கும் நேரம் மீண்டும் அதே
அமர்க்களம் அந்த வீட்டில் !
அமர்க்களமாக ஆரம்பிக்கும் ஒரு
“குழந்தையின்” வாழ்க்கை என்றுமே
ஒரு விளையாட்டுதான் …விதி என்று
ஒன்று நடுவில் விளையாடாமல் இருந்தால் !
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும்
சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும்
வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு
ஒரு படி கல்லே என்ற உண்மையும்
தன்னால் புரியும் எந்த ” குழந்தைக்கும் ” !
வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று
புரிந்தால் போர்க்களம் ஆகாது வாழ்க்கை
K.Natarajan
in http://www.dinamani.com dated 2nd June 2018

வாரம் ஒரு கவிதை ….: ” என்றும் என் இதயத்தில் ….”

என்றும் என் இதயத்தில் …
————————-
என் இதயம் வலித்தது …ரொம்ப
வலிக்கிறதா மகனே …கேட்டாள்
என் அம்மா என் இதயத்தில் உள்ளே
இருந்து !
இல்லை அம்மா …பரவாயில்லை
இப்போ …சொன்னேன்  நான் !
இல்லை …இல்லை … வலி நீ
பொறுக்க  மாட்டாய் !..உடனே
செய்து கொள் இதய அறுவை சிகிச்சை
மகனே !  நான் இருப்பேன் உன் கூட
என்றாள்  என் அம்மா !
இல்லை அம்மா … இதய அறுவை
சிகிச்சை வேண்டாம் எனக்கு !
நீ குடி இருக்கும் என்   இதயத்தை அறுக்க
விட மாட்டேன்  நான் ! சொன்னேன் நான் !
என்றும் என் இதயத்தில் அம்மா  நீ
இருக்கும் போது எனக்கு என்ன
கவலை அம்மா ?
எதையும் தாங்கும் இதயம் எனக்கு
நீ கொடுத்த பரிசு அம்மா ! இந்த
வலி மட்டும் அல்ல … வேறு எந்த
வலியையும் நீ குடி இருக்கும் என்
இதயம் தாங்கும்  அம்மா !
என்றும் என் இதயத்தில் அம்மா நீ
இருந்தால் அது போதும் எனக்கு
அம்மா !
Natarajan  in http://www.dinamani.com dated  27th May  2018
Natarajan

வாரம் ஒரு கவிதை ….” யார் இட்ட சாபம் …? “

யார் இட்ட சாபம் …?
——————–
இதோ வந்து விட்டது புதிய விடியல்
பிறந்து விட்டது புதிய  பாரதம் !
புதுமை பல காண்போம் நாம் !
நமக்கு நாமே இனிமேல் !
சுதந்திர இந்திய விடியலில் என்
தாத்தாவும்  அப்பாவும் கேட்ட
முழக்கம் இது ! நான் பிறக்கவே
இல்லை அப்போது !
ஒரு அப்பாவாக , தாத்தாவாக நான்
இன்றும் கேட்கிறேன் அதே முழக்கம் !
ஆட்சியும் மாறுது ….காட்சியும் மாறுது !
புதிய விடியல் , புதிய பாரதம் முழக்கம்
மட்டும் மாறவே இல்லையே !
பழகி விட்டேன் நானும் இந்த முழக்கம்
தினம் தினம் கேட்டு !
புது விடியல் மட்டும் நான் காண
முடியவில்லையே இன்னும் !
இது யார் இட்ட சாபம் ?
K.Natarajan
http://www.dinamani.com  dated  21st May 2018

வாரம் ஒரு கவிதை ….” கருவில் தொலைந்த குழந்தை “

கருவில் தொலைந்த குழந்தை
——————————
கவிதை ஒன்று  எழுத நல்ல
கரு ஒன்று தேடினேன் நான்
சுறு சுறுப்பாக !
விறு விறு என்று எழுதி தள்ளினேன்
பக்கம் பக்கமாக !
ஒரு கரு அல்ல ..ஒரு நூறு
கரு என் கவிதைக்கு போட்டது
அடித்தளம் !
எதுகையும் மோனையும் கோர்த்ததா
கை என் கவிதையில் ? இல்லையே !
என் கவிதை எனக்கே புரியாத
விடுகதை ஆனதே !
தேடித் தேடி கருவை விதைத்தும்
உருவாகவில்லையே ஒரு நல்ல
கவிதை!
கருவிலே தொலைந்த குழந்தை
போல ஆனதே என் கவிதை !
நல்ல கரு ஒன்று தேடுகிறேன்
மீண்டும் நான் ! கருவிலே தொலையாமல்
இந்த  புது கவிதை என் மடியில் கொஞ்சி
விளையாட வேண்டும் ஒரு குழந்தை போல !
Natarajan
7th May 2018

வாரம் ஒரு கவிதை ….” நீ கண் சிமிட்டினால் …”

நீ கண் சிமிட்டினால் …
———————-
கண் சிமிட்டும் நேரத்தில் மின்னஞ்சல் பறக்கிறது
கண்டம் விட்டு கண்டம் ! கண்சிமிட்டும் நேரத்தில்
பணப் பரிமாற்றம் நம்  வீட்டிலிருந்தே ! கை பேசி
செய்யுது மாயம் எல்லாம் ! இல்லை என்று
சொல்லவில்லை நான் !
கை பேசி உன்னை கையில் வைத்து வேலை ஏதும்
இல்லாமல் கண் சிமிட்டாமல் உன்னையே
வெறித்து பார்க்குதே  ஒரு கூட்டம் !
அவர் வீட்டு குழந்தை அவரைப் பார்த்து
கண் சிமிட்டி சிரிக்கும் சமயம் கூட
இல்லையே சிரிப்பு அவர் முகத்தில் !
ஆனால் கைபேசி நீ கண் சிமிட்டினால் மட்டும்
வருதே சிரிப்பு அவர் முகத்தில் !
அது என்ன மாயம் ? !!!
Natarajan
in http://www.dinamani.com dated  30th April  2018

வாரம் ஒரு கவிதை …” சமூக குற்றம் “

 

சமூக குற்றம்
————–
அடுக்கடுக்காய் அதிர்வலைகள் … நெஞ்சத்தை
நொறுக்கும் தொடர்கதைகள் … தினம் தினம் !
காஷ்மீரத்துக் குட்டி தேவதை அவள் வீட்டு
தோட்டத்தில் விளையாடும் நேரம்  அவளை வளைத்து
வதைத்து ,சிதைத்து விட்டதே ஒரு வெறி நாய் கூட்டம் !
பதறுதே மனம் அந்த பிஞ்சு முகம் பார்த்து !
குற்றப் பதிவும் விசாரணையும் தேவையா
அந்த கயவர்  செயலுக்கு ?
மனிதன் செய்யும் தவறுக்குதான் விசாரணையும்
தண்டனையும் நீதி மன்றத்தில் !
ஏதும் அறிய ஒரு இளம் பிஞ்சை வதைத்து
சிதைத்த இந்த மிருக கும்பலுக்கு எதற்கு
மனித விசாரணை ?
அடைக்க வேண்டாமா  அந்த கும்பலை
உயிருடன் ஒரு மிருகத்தின் கூண்டுக்குள் ?
அடி பட்டு வதை பட்டு  சிதைய வேண்டாமா
அந்த வெறி நாய் கூட்டம் ?
சரியான தண்டனை அதுதான் அந்த மிருகக்
கூட்டம் செய்த குற்றத்துக்கு !  அப்படி ஒரு
சட்டம் வேண்டும் என்று நாம் குரல் கொடுப்போம்
இன்று … வந்து விட்டது அதற்கும்  நேரம் !
குரல் கொடுக்க இப்போது நாம் மறந்தால் ,
மறுத்தால் … குற்றவாளிதான் நாமும் !
“சமூக குற்றவாளி” …!
நம் குழந்தைகளும் மன்னிக்க மாட்டார்
சமூக குற்றவாளி நம்மை !
Natarajan
in http://www.dinamani.com  dated  22nd April 2018

வாரம் ஒரு கவிதை …. ” நதிக்கரையின் நினைவலைகள் “

நதிக்கரையின்  நினைவலைகள்
…………………………
ஆடி மாதம்… கரை புரண்டு ஓடும் காவிரி
வெள்ளப் பெருக்கில் உள்ளம் கொள்ளை
போனது ஒரு காலம் !
காவிரி  நதிக்கரையில் ஆடி பதினெட்டாம்
நாள் மணல் வீடு கட்டி மஞ்சள் பிள்ளையார்
சாட்சியாக  நடக்கும் “புது மனை புகு விழா “!
காதோலை கருகுமணி அணிந்து காவிரி
தாயும் கரை கடந்து வருவாள் புது வீட்டில்
நடை பயில ! தடை ஏதும் இருக்காது
கூடி இருக்கும் குழந்தைகளின் பாட்டுக்கும்
ஆட்டத்துக்கும் !
அது ஒரு காலம் …கனாக் காலம் !
கரை புரண்ட காவிரி நீ  இன்று என் மண்ணில்
தடம் பதிக்கவே  மறந்தது ஏன் ?
உன் கரையில் நின்று உன் அலை வேகம்
பார்த்த நான் இன்று நதி நீ எங்கே என்று
தேடுகிறேன்…இங்கும் அங்கும் ஓடுகிறேன்
நான் உன்னைத் தேடி !
என் மனதில் மட்டும் நீ இன்னும் ஓடுகிறாய்
ஒரு இனிய நினைவலையாக !
நினைவலையாக என் மனதில் ஓடும் நீ முத்தமிட
வேண்டும் என் மண்ணையும் மீண்டும் !
தாய் உனக்கு தெரியாதா உன் பிள்ளையின்
தேவை என்ன என்று ?
Natarajan …in http://www.dinamani.com dated 16th April 2018
Natarajan