வாரம் ஒரு கவிதை ….” அப்பாவின் நாற்காலி “‘

அப்பாவின் நாற்காலி
+++++++++++++++++++++
அப்பா இல்லை இப்போது அவர் நாற்காலி
மட்டும் வீட்டில் !
நடக்க முடியாமல் இருந்தவருக்கு அவர்
நாற்காலிதான் அலுவலகம் !
வீட்டில் இருந்தபடியே எல்லா வேலையும்
செய்து முடிப்பார் எல்லோருக்கும் !
அது அவர் தனித்துவம் !
எல்லோருக்கும் இரண்டு கால் என்றால்
அப்பாவுக்கு நாலு கால் !
அப்பாவின் நாற்காலி கேட்கிறது இன்று
நான் என் கால் இழந்து நிற்கிறேன்
எங்கே என் சொந்தக்காரர் என்று ?
Kandasami Natarajan
in http://www.dinamani.com dated 11/12/2019

வாரம் ஒரு கவிதை …மௌன சிறை 2

மௌன சிறை
++++++++++++++
உனக்கு என்று ஒரு  கடமையும் உண்டு
உரிமையும் உண்டு தம்பி !
உன் உரிமை பறிக்கப் படும் போது
ஏன் எதற்கு என்று தட்டிக் கேட்க வேண்டும்
நீ தம்பி !
உண்மை விலை பேசப்படும் போதும்
சும்மா இருக்காமல் நீ கேள்வி கேட்க வேண்டும்
தம்பி !
 கண் முன்னால் அநீதி உனக்கு மட்டும் அல்ல
வேறு யாருக்கு இழைக்கப்பட்டாலும் அநியாயம்
அநியாயமே !தட்டிக் கேட்க வேண்டிய நீ வாய் மூடி
மௌனம் காத்தால் அந்த மௌனமே உனக்கு
சிறை தண்டனை !
தேவையா உனக்கு மௌன சிறைவாசம்
வேறு  ஒருவர் செய்யும் தவறுக்கு ?
கந்தசாமி  நடராஜன்
30/11/2019

வாரம் ஒரு கவிதை ” மௌன சிறை : 1

மௌன சிறை
++++++++++++++
பேச்சு வாக்கில் வாக்கு வாதம் முற்றும்
கணவன் மனைவிக்கு இடையில் !
நீ பேச வேண்டாம் இனிமேல் என்னுடன்
நானும் பேச மாட்டேன் உன்னுடன் இனி !
இது இடைக்கால தீர்வு !
மௌனம் காப்பர்  இருவரும் …யார்
முதலில் பேசுவது என்னும் தயக்கம்
ஒரு பக்கம் !  யார் பெரியவர் என்னும்
அஹங்காரம் மறு  பக்கம் !
மௌன மொழியால் இருவருக்குமே
சங்கடம் …சலிப்பு!
யார் முதலில் கண் சிமிட்டுவது என்னும்
குழப்பம் !
சத்தம்  போட்டு பேசிய இருவருக்கும்
” சட்டப்படி ”   சிறை தண்டனை …மௌன
சிறை !
குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டுமா இருக்காது?
சத்தமும் இருக்காது ஒரே வீட்டில் !
குற்றம் சற்றே மறந்து மௌனம் கலைத்தால்
கிடைக்கும் இருவருக்கும் விடுதலை
மௌன சிறைவாசத்தில் இருந்து !
கந்தசாமி  நடராஜன்
30/11/2019

வாரம் ஒரு கவிதை …” தூரத்து உறவுகள் “

தூரத்து உறவுகள்
++++++++++++++++++
உறவுகள் என்றும் உறவுகளே
பக்கத்து உறவுகள் என்ன
தூரத்து உறவுகள் என்ன !
தொலைக்காத உறவு எல்லாம்
நெருங்கிய உறவுகள்தான் !
நடைமுறையில் இன்று  பேரன் பேத்திகள்
தாத்தா பாட்டி  பக்கத்திலா உள்ளார்கள் ?
சொந்த தாத்தா பாட்டியே  இன்று தூரத்து
சொந்தம் என்று மாறும் நிலைமை !
இனி வரும் நாளில்  பக்கத்து சொந்தம்
தூரத்து சொந்தம் இரண்டுக்கும் ஒரு
புது அர்த்தம் தேட வேண்டிய கட்டாயம்
ஒன்று நிச்சயம் உருவாகும் !
பக்கத்தில் இருந்தால் மட்டும் சொந்தம் என்று
இல்லை !  தூரத்தில் இருந்தாலும் தாத்தா
பாட்டி தூரத்து சொந்தம் இல்லை என்று
பிள்ளைகளுக்கு சொல்லும் ஓர் காலம் வரும்
கண்டிப்பாக !
கந்தசாமி  நடராஜன்
 in http://www.dinamani.com  dated   20/11/2019

வாரம் ஒரு கவிதை …” பெண்ணென்று சொல்வேன் …”

பெண்ணென்று சொல்வேன்
+++++++++++++++++++++++++
எந்த பதவியில் இல்லை இன்று ஒரு பெண் ?
மண்ணில் மட்டும் அல்ல விண்ணிலும்
பறந்து வெற்றிக்கொடி நாட்டி அவள் பிறந்த
மண்ணுக்கு பெருமை தேடி தரவில்லையா பெண் ?
எல்லை காக்கும் புனிதப் பணியிலும் சரி ,
காவல் பணியிலும் சரி, தீ அணைப்பு பணியிலும்
சரி …எதில் இல்லை நம் பெண்கள் இன்று ?
யாருக்கும்  சளைத்தவர்கள் இல்லை நம் பெண்கள் !
இந்த நேரத்தில் முதன்மையாய்  நிற்கும் பெண்கள்
பின்னால் தெரியுது அவர்கள் அம்மாவின் முகம் !
நிலைக்கண்ணாடியில் உங்கள் முகம் பார்க்கும்
நேரம் உங்கள் அம்மாவின் முகத்தையும் பாருங்கள்
பெண்களே !  புரியும் உங்களுக்கு தன்னால்
உங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் என்று !
பெண்ணே  நீ வெற்றிப்  பெண்  என்றால்
உன் அம்மா உன்னைப் பெற்ற அதிசயப்
பெண்ணென்று நான் சொல்வேன் !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 13/011/2019

வாரம் ஒரு கவிதை …” இந்த நாள் இனிய நாள் “

இந்த நாள் இனிய நாள்
+++++++++++++++++++++
இந்த நாள் இனிய நாள் …நாம்
வந்த  நாள் முதல் எந்த நாளும்
இனிய நாளே ! மனதில் மகிழ்ச்சி
இருக்கும் நாள் இனிய நாள் ! மனதை
இறுக்கும் உணர்வு  இருக்கும் ஒரு
நாள் இனிய நாள் இல்லை   நமக்கு !
நாள் என்றும் ஒன்றுதான் !…இனிப்பும்
கசப்பும் நம் மனநிலை சார்ந்ததே !
இன்பமும் துன்பமும் சேர்ந்தே வாழ்க்கை !
இந்த நாள் மிக நல்ல நாள் …நாளை
இதை விட நல்ல நாள் என மனதில்
கொண்டால்  வாழ்வில் இந்த நாள்
மட்டுமல்ல எந்த நாளும் ஒரு இனிய நாளே !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 06/11/2019

வாரம் ஓரு கவிதை …”தீபம் “

தீபம்
+++++
இருள்  அகற்ற ஒரு தீபம் போதும்
பல தீபம் ஏற்றிட பொங்கிடும் ஒளி
வெள்ளம் ! தீபத்தின் ஒளியில்
ஒளிரும்  தீபாவளி !
அகத்தின் இருள் நீக்கிட தேவை
ஒரே ஒரு தீபம் ! ” நான் ” எனது “
என்னும் அகந்தை அழிய ஒரு சிறு
தீபம் ! உன்னை நீ யார் என்று புரிய
வைக்கும் ஆன்மிக தீபம் !
அகத்தின் இருள் மறைந்தால் இந்த
ஜெகமே மிளிரும்  ஒரே ஒரு தீப
ஒளியால் !
அகந்தைப் பிசாசை அழித்து ஒழிக்க
அகத்தில் ஏற்றுவோம் ஆன்மிக தீபம் முதலில் !
அதுவே உண்மையில் தீபாவளி நம் வாழ்வில் !
K.Natarajan
27/10/2019

வாரம் ஒரு கவிதை …” யார் மனிதன் ” ?

 

யார் மனிதன் ?
++++++++++++++
மனிதன் கையில் இருக்கும் கை பேசி
தனி ஒரு பலமாக ஆட்டி வைக்கிறது
மனிதனை அவன் என்ன செய்ய வேண்டும்
ஒரு நாளில் என்று !
மனிதனுக்கு அடங்க வேண்டிய கை
பேசியும்  வலை நுட்பமும் இப்போது
விரித்து விட்டது மாய வலை மனிதனுக்கு !
வலைக்குள் சிக்கிய மனிதன் முழிக்கிறான்
வெளியே வரும் வழி தெரியாமல் !
ஆறறிவு படைத்த மனிதன்  நான்
மனிதன் நான் மனிதன் என்கிறான் !
ஆறறிவைப் பின்னுக்குத் தள்ளிய
வலை நுட்பம் கேட்கிறது இன்று
யார் மனிதன்  யார் மனிதன் என்று !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com  dated  23/10/2019

வாரம் ஒரு கவிதை ….” மதுரை “

 

மதுரை
+++++++
சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில்தான்
மதுரை தமிழ் இன்றும் மதுரத் தமிழே !
மாட வீதியும் சிகரம் தொடும் கோபுரங்களும்
கூடல்  நகருக்கு ஒரு தனி முகவரி !
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பரமேஸ்வரன்  பொற்பாதம் பட்ட இடம்
மதுரை !
அண்ணல் காந்தி அவர் முழு ஆடை துறந்து
கதர் ஆடைக்கு மாறிய நகரும் மதுரையே !
தேமதுரத் தமிழ் ஓசை அன்றும் இன்றும்
ஒலிக்கும்  நகரும் மதுரையே !
மதுரையின் மதுரம் எல்லாம் மறந்து
மதுரை என்றாலே அடிதடி, வெட்டு குத்து ,
அடாவடி அரசியல் , போக்கிரித்தனம்
என்று வரிந்து கட்டி  மதுரையைப்
படம் பிடித்துக் காட்டும் தமிழ் திரை
உலகத்துக்கு அப்படி என்ன வெறுப்பு
நம்ம  மதுரை மீது ?
Kandaswamy Natarajan  in http://www.dinamani.com  dated 17th oct 2019

வாரம் ஒரு கவிதை ….” சாம்பலாய் முடியும் உடல் “

சாம்பலாய் முடியும் உடல்
++++++++++++++++++++++++++
ஆஸ்தி எத்தனை சேர்த்தாலும் மனிதனின்
அஸ்தி அடக்கம் ஒரு சிறு மண் குடுவையிலே !
அதற்குள்  எத்தனை எத்தனை குஸ்தி
உறவுக்குள் இது என் ஆஸ்தி ,உன் ஆஸ்தி
என்று !
ஆட்டம் முடிந்து ஆறு அடி நிலத்தில்
அடக்கம் ….இல்லை  அரையடி மண் குடுவையில்
உடலின் சாம்பல் அடக்கம் !
இந்த வாழ்வின்  முடிவு  தெரிந்தும், முடிவும்
சாம்பலும் அடுத்தவருக்கே …எனக்கு இல்லை
எப்போதும் என்னும்  மாயையில் வலம் வரும்
மனிதர் பலர் உண்டே இங்கே !
மடிந்த பின் மண்ணோடு மண்ணாகி வெறும்
சாம்பலாக மாறிய பின்னர் மீண்டும்
உயிர்த்து எழ மனிதன் என்ன பீனிக்ஸ் பறவையா ?
கந்தசாமி  நடராஜன்      in http://www.dinamani.com dated  09/10/2019