வாரம் ஒரு கவிதை ….” பொங்கலோ பொங்கல் ….”

பொங்கலோ பொங்கல் …
=====================
பொங்கலோ பொங்கல் …பொங்கல் வாழ்த்துக்கள்
பரிமாற்றம் ஓவ்வொரு ஆண்டும் …மாற்றம் இல்லை
எதுவும் இதில் !
பொங்கல் சிறப்பு  பட்டி மன்றம், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
பொங்கல் சிறப்பு சினிமா ,தொலைக்காட்சியில் !
பொங்கல்  திரைப்படமும் ஆட்டம் ஆர்ப்பாட்டம்
பால் அபிஷேகத்துடன் திரை அரங்கில் !
மாற்றம் இல்லை இதிலும் !
நம் வீட்டில் தங்கு தடை இன்றி பொங்கல் பொங்க
அரிசியும் கரும்பும்  இஞ்சியும் மஞ்சளும் வஞ்சனை ஏதும்
இன்றி நமக்கு கொடுக்கிறானே ஒரு மனிதன்
விவசாயி என்னும் மாமனிதன் ஆண்டு தவறாமல் !
யோசிக்க வேண்டும் நாம் இன்று …அந்த மாமனிதன்
வாழ்வில் மாற்றம் என்ன இருக்கு ஏற்றம் என்ன
அவனுக்கு என்று …ஏமாற்றம் ஒன்றே மிச்சம்
அவனுக்கு பொங்கல் நாளிலும் !
அவன் பெயர் சொல்லி நாம் வாழ்த்திக்கொள்கிறோம்
நம்மை நாமே பொங்கல் நன்னாளில் !
ஏமாற்றம் இல்லாத  நல்ல ஒரு மாற்றம் வேண்டுமா
வேண்டாமா அவனுக்கும் ?
பொங்கல் நம் வீட்டில் பொங்கும் நேரம் சொல்லவேண்டும்
நன்றி அவனுக்கு  நாம் !
அன்னமிடும் அவன் கைகள் என்றும் ஓங்கியே இருக்க
வேண்டும் !
அவன் கை  தாழ்ந்தால் தகர்ந்து தடுமாறும் அவன்
நம்பிக்கை ! கூடவே தடம் புரளும் நம் நகரத்து
சொகுசு பயணம் !
நமக்கு அன்னமிடும் அவனுக்கு நாமும் கை கொடுத்து
அவன் வாழ்விலும் ஏற்றமிகு மாற்றம் ஒன்று காண ஒரு
பாதை அமைத்துக் கொடுக்க வேண்டாமா நாம் ?
முதல் பொங்கல் வாழ்த்து அவனுக்கு நாம் சொல்லும்
வாழ்த்தாக இருக்கட்டும் ஐயா !
பொங்கலோ பொங்கல் என்று அவனும் மனம்
நிறைந்து நம்மை வாழ்த்த வேண்டும் அய்யா !
அவன் நம்மை வாழ்த்தும் வாழ்த்துதான் உண்மையான
பொங்கல் வாழ்த்து நமக்கு அய்யா !
நடராஜன்.K
12/01/2019

வாரம் ஒரு கவிதை ….” உன் விழிகளில் …”

உன் விழிகளில் …
==================
வாய் மொழி சொல்லாத வார்த்தைகள் மலரும்
உன் விழிகளில்
நான் சிரித்தால் ஒரு புன்சிரிப்பு தெரியும்
உன் விழிகளில்
நான் அழுதால் நீர் வழியும் உன் விழிகளில்
பசிக்கிறது எனக்கு …புசிக்க வேண்டும் நான்
என்று உனக்கு புரிந்தவுடன் பாசமுடன் நேசமுடன்
அமுது கொடுக்கும் பரிவு தெரியும் உன் விழிகளில்
எனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் நான் எப்போதும்
உனக்கு சேய் என்னும் பாசம் தெரியும் உன் விழியில்
அம்மா …உன் விழிகள் என்றும் என் முகம் பார்க்கும்
கண்ணாடி …! என் எண்ண ஓட்டம் என்ன என்று
அழகாக கணிக்கும் கணினியும் உன் விழிகளே !
அம்மா நீ மறைந்தாலும் உன் விழிகள் இருக்குது
உயிருடன் ! உன் விழி வழி, பார்க்கிறார் இன்றும்
ஒருவர் இந்த உலகை ! வழி மேல் விழி வைத்து
தேடுகிறேன் நானும் உயிருடன் இருக்கும் உன்
விழிகளை தினமும் !
ஒரு நாள் பார்ப்பேன் உன் விழிகளை மீண்டும்
நான் அம்மா !  உன் விழிகள் இருக்கும் இடம்
வேறாக இருந்தாலும் நான் இருப்பேன் நிச்சயம்
உன் விழிகளில் !
விழிமொழி மட்டுமே தேவை எனக்கு உன் விழிகளில்
மீண்டும் என் முகம் பார்த்து உன்னுடன் பேச !
Natarajan.K
07/01/2019

வாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “

 

என் கையில் தவழும் குழந்தை
===========================
கருவில் உதித்து ஒரு உரு எடுத்து
பெருமையுடன் உரிமை கொண்டாடி
என் கையில் தவழ்கிறாய் நீ இன்று !
பெயர் இல்லாமல் நீ பிறக்கவில்லை
நீ பிறந்த பின் உனக்கு பெயர் வைக்க
அவசியம் இல்லை !
ஒரு பெயருடன் நீ பிறந்து விட்டாய்
உன்னைப் பெற்ற எனக்கு பெருமை
உன்னால் !
ஓரு பெயருடன் பிறந்த நீ  எனக்கு ஒரு
நல்ல பெயரையும் வாங்கித்  தந்து விட்டாய்
நீ பிறந்த அன்றே…. என் அருமை புத்தகமே !
வரிக்கு வரி உன்னைப் படிக்கும் அன்பர்
அனைவருக்கும் பிடித்துப் போகவேண்டும்
உன்னை !
படித்து ரசிக்கும் அன்பர்களிடம்  , குழந்தை நீ வாழ்த்துகள்
பெற்றால் , உன்னைப் பெற்ற எனக்கு பெருமை
பெருமையே !
K.Natarajan
29/12/2018

வாரம் ஒரு கவிதை……புத்தாண்டு வாழ்த்துக்கள் …

புத்தாண்டு வாழ்த்துக்கள்
=======================
புது வருடம் பிறக்கிறது புத்தாண்டு வாழ்த்துக்களும்
பறக்கிறது எல்லோருக்கும் எல்லா வழியிலும் !
புத்தாண்டை வரவேற்க  புத்தாண்டுக் கொண்டாட்டமும்
களை கட்டுது முதல் நாள் இரவிலிருந்தே !
தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ
ஹாப்பி நியூ இயர் …ஹாப்பி நியூ இயர்
என்று கீறல் விளைந்த இசைத் தட்டு போல
புது வருடத்தின் முதல் நாள் ஒலிக்குது
ஹாப்பி நியூ இயர் மந்திரம் நாள் முழுதும் !
சென்ற வருட தவறு திருத்தி சுற்றத்தின் குற்றம்
மறந்து புது வருடத்தில் புதியதாய் பிறக்க வேண்டாமா
நாம் ? பழைய கணக்கை மறந்து விட்டு புதுக் கணக்கு
தொடங்கவேண்டாமா கரும்புள்ளி எதுவும் இல்லாமல்
புது வருட ஆண்டு முதல் நாளில் நாம் ?
புதியதாய் நாம் பிறக்காமல் புத்தாண்டு வாழ்த்து
மட்டும் வெறும் வாயளவில் சொல்வதானால் என்ன
பயன் யாருக்கும்?
வரும் புத்தாண்டில் புதியதாய் பிறப்போம் நாம் !
புதிய பாரத விடியலுக்கு புது வழியும் காட்டுவோம்
நாம் !
காலையில் மலர்ந்து அந்திக் கருக்கலில் கருகாத
மலராக ஆண்டின் ஓவ்வொரு நாளும் மணம்
பரப்பும் புது மலராக இருக்க வேண்டும் நாம் சொல்லும்
வாழ்த்துக்கள்  !
கே.நடராஜன்
24/12/2018

வாரம் ஒரு கவிதை ….”தேநீர்ப் பொழுதுகள் “

தேநீர்ப் பொழுதுகள்
===================
காலை பொழுது மலர்ந்ததும் வேண்டும் தேநீர் சிலருக்கு
மாலையில் ஒரு “நொறுக்குடன் ” தேவை தேநீர் சிலருக்கு !
தேநீர் நேரம் என்று ஒன்று  பணிநேரத்தில் இருந்தாலும்
தேநீர் ஒன்றே தலையாய பணியாக மாறும் சிலருக்கு !
தேநீர் பொழுதை  ஒரு விருந்தாக மாற்றி வணிகம்
வர்த்தகம் செய்யும் வித்தகர்களும் உண்டு உலகில் !
தேநீரும் ஒரு “பொறையும்” மட்டுமே  உணவாக
மாறும் மூன்று வேளையும் ஒரு உழைப்பாளிக்கு !
தேநீர் பொழுது அவனுக்கு ஒரு பொழுது போக்கு
அல்ல ! தன் பொழுதை வீணாகப் போக்குபவனும்
அவன் இல்லை !
K.Natarajan
15/12/2018

வாரம் ஒரு கவிதை….” பதில் இங்கே ….கேள்வி எங்கே ? “

பதில் இங்கே …கேள்வி எங்கே ?
==============================
கேள்வி கேட்டால்தானே  கிடைக்கும் பதில்
எந்த கேள்விக்கும் இருக்குமே  ஒரு பதில்
தகவல் அறியும் சட்டம் இருக்கு இப்போ
கைவசம்…உனக்கு என்ன தகவல்
தேவை …சொல்லு தம்பி !கிடைக்கும்
உனக்கு நிச்சயம் ஒரு பதில் !
கேள்வி நான் கேட்கமாட்டேன் என்று
நீ ஒதுங்கினால் கேட்பதற்கு ஆள் இல்லை
நான் வைத்ததுதான்  சட்டம் என்று ஆட்டம்
போடுமே ஒரு பெரிய கூட்டம் !
கேட்பது உன் உரிமை மட்டும் அல்ல
கடமையும் கூட ! நீ கேட்க நினைப்பதை
கேட்டு விடு …உன் கேள்விக்கு பதிலும்
வாங்கி விடு ! இன்று நீ கேள்வி
கேட்காவிட்டால் , ஏன் கேட்கவில்லை அப்போதே கேள்வி
நீ என்று உன்னையே கேள்விக்குறியாக
மாற்றி ஒரு கூட்டம் சரமாரி கேள்விக்கணை
தொடுக்கும் உன் மேல் !
மறக்காதே கேள்வி கேட்க …விட்டுக்கொடுக்காதே
உன் கேள்வி கேட்கும் உரிமையை !
K.Natarajan
11/12/2018

வாரம் ஒரு கவிதை ….” வன வாசம் “

 

வனவாசம்
=========
வனவாசம் சென்றான் ராமன் ஒரு சொல்லுக்கு
கட்டுப்பட்டு அன்று ! வனவாசம் ராமனுக்கு
ஆண்டு பதினான்கு !
இருக்கும் வனத்தை நாசம் செய்கிறான் மனிதன்
தினமும் இன்று …யார் சொல்லியும் கேட்காமல் !
வனம் எல்லாம் பாலைவனம் ஆகுது நம்
கண்  முன்னே ! வசிக்கும் இடம்  எல்லாம்
அடுக்குமாடி வனமாக மாறுது ஒரு நொடியில் !
வனத்தை அழித்து விட்டு வான் உயர
கட்டிடங்கள் கட்டி விட்டு மனிதன்
திட்டுகிறன் வானத்தைப் பார்த்து
ஏன் பொய்த்தாய் வானமே என்று !
பண வாசம் ஒன்று மட்டும் நுகரும்
மனிதனுக்கு  இந்த  மண்ணின் வாசமும்
வனத்தின் நேசமும் புரிய  எத்தனை ஆண்டு
தேவை அவனுக்கு  வனவாசம் ?
Natarajan
07/12/2018

வாரம் ஒரு கவிதை…..” தொலையாத வார்த்தைகள் “

தொலையாத வார்த்தைகள்
========================
தொல்லைகள் பல என் மண்ணின் விவசாயிக்கு
மழையே இல்லாமல் வாடும் அவன் பயிர்
ஒரு நேரம் ! சொல்லாமல் கொள்ளாமல்
கொட்டி தீர்க்கும் பெரு மழை ஒருநேரம் !
பெரு மழையுடன் ஊரையும் அவன் பயிரையும்
புரட்டிப் போட்டுவிடும் ஒரு சூறைக் காற்று
சில நேரம் !
பயிருக்கு உயிரான மழையே அவன் விளை
நிலத்துக்கு எமனாகவும் மாறும் ! வெட்டி
சாய்க்கும் மரங்களையும் …என் விவசாயி
கனவையும் சேர்த்து !
ஊருக்கே உணவு கொடுக்கும் என் விவசாயி
அவன் அடுத்த வேளை உணவுக்கு வரிசையில்
நிற்கும் அவல நிலை இன்று அவன்
குடும்பத்துடன் ஒரு நிவாரண முகாமில் !
இழந்தது அவன் பயிரை மட்டும் ..ஆனால்
தொலைக்கவில்லை ” மீண்டும் எழுவேன் நான்”
என்னும் நம்பிக்கையை !
அவன் தவிக்கும் இந்த நேரம் உதவிக் கரம்
நீட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லவும்
மறப்பதில்லை அவன் !
எல்லாவற்றையும் தொலைத்து விட்டாலும் என்
மண்ணின் விவசாயி தொலைக்கவில்லை அவன்
நன்றி சொல்லும்  பண்பை !
மலை அளவோ திணை  அளவோ …நீட்டும்
உதவி கரங்கள் அத்தனைக்கும் தான்  ஒரு இளநீராவது
கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானே இன்றும்
அவன் !
நன்றியும், உலகுக்கு உணவு அளிக்கும் பண்பும்
அவன் அகராதியில் என்றும்  நிலைத்து நிற்கும்
தொலையாத வார்த்தைகளோ !
Natarajan
in http://www.dinamani.com dated  25/11/2018

வாரம் ஒரு கவிதை …” மெய் உறக்கம் “

மெய் உறக்கம்
==============
மெய் மறந்த உறக்கம் இறக்கி வைக்கும்
இறுக்கம்  எதுவாயினும் மனதில் இருந்து
மெய் மறந்து உறங்குபவன் விழித்துக்
கொள்வான் அவனை எழுப்பினால் !
ஆனால் பொய் தூக்கம் போடுபவனை
எழுப்ப முடியுமா தட்டி ?
மெய்யுடன் பொய் சரிக்கு சரி நின்று
சண்டை இடும் இந்த காலத்தில்
வாய்மையே வெல்லும் என்று வசனம்
பேசி நீ மெய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டால்
வாய் மெய்யை வெல்லும் நிலைமை
வந்து விடும் தம்பி ! மெய் உறக்கத்திலும்
விழிப்புடன் இருக்க வேண்டும் நீ தம்பி !
மெய் மறந்த உன் உறக்கத்தில் உண்மையை
உறங்க விட்டு விடாதே நீ தம்பி !
K.Natarajan
in http://www.dinamanai.com dated 18/11/2018

வாரம் ஒரு கவிதை …” இரண்டாவது கோப்பை “

இரண்டாவது  கோப்பை
======================
காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை
காப்பி …பின்னர் காலாற ஒரு பொடி
நடை வீட்டை சுற்றி சுற்றி !
தன் முகாமுக்கு திரும்பும் ஒரு படை
வீரன் துணிவுடன் எடுப்பேன் நான்
அன்றைய செய்தித்  தாளை தினமும்
என் நடைபயிற்சி முடிந்தவுடன் !
எத்தனை அதிர்வு செய்தி, எத்தனை
குற்ற செய்தி தினமும் ! அத்தனையும்
படிக்க மனதில் உறுதி வேண்டும் !
இரண்டாவது கோப்பை “ஸ்ட்ராங்” காப்பியும்
கையில் இருக்க வேண்டும் அப்போது !
இரண்டாவது கோப்பை காப்பிக்கு என்ன
அத்தனை சக்தி ! எதையும் தாங்கும்
என் இதயம் இரண்டாவது கோப்பை
காப்பி மட்டும் என் கையில் இருந்தால் !
முதல் கோப்பையில் இல்லாத தரமும்
சுவையும் இரண்டாவது கோப்பை காப்பியில்
எப்படி சாத்தியம் ?  அது என்ன ரகஸ்யம் ?
கேட்டேன் நான் என் சகதர்மிணியை !
பட்டென கிடைத்தது விடை என் கேள்விக்கு
முதல் கோப்பை காப்பி “நீங்களே   தயாரிக்கும்
காப்பி அவசரக் கோலத்தில் விடிந்தும் விடியாமலும் “!
இரண்டாவது கோப்பை காப்பி உருவாகுவது
என் மனைவியின் முதல் தர இயக்கத்தில் !
புரிந்து கொண்டேன்  நான் இரண்டாவது
கோப்பை காப்பியில்தான் முதல் தர
காப்பியை ருசிக்கிறேன் தினமும் என்று !
கோப்பை இரண்டாவதாக இருக்கலாம் ஆனால்
அதில் கிடைக்கும் காப்பி முதல் தரமாயிற்றே !
இந்த இரண்டாவது கோப்பை உண்மையில்
இருக்க வேண்டிய இடம் இரண்டாவது இடத்தில் அல்ல !
K.Natarajan
in http://www.dinamani.com dated 11/11/2018