வாரம் ஒரு கவிதை… ” நீ என்ன சொல்வது …நான் என்ன கேட்பது …” ?

நீ என்ன சொல்வது …நான் என்ன  கேட்பது  ?
=======================—–==============
உனக்கு சர்க்கரை வியாதி ஆரம்பம்
சர்க்கரை வேண்டாம் உன் உணவில்
இனிமேல் …மருத்துவர் சொன்னார்
சொன்னது யாருக்காக ? சர்க்கரை
நீ சாப்பிடக் கூடாது என்பது அவர்
ஆசையா என்ன ! உன்  நலனுக்கு தானே
சொன்னார் மருத்துவர் !
சொன்ன மருத்துவரை நீ  திட்டினால்
யாருக்கு வேதனை கூடும் ?
புரிய வேண்டும் உனக்கு !
பட்டாசு அதிகம் வெடித்தால் மாசு
படும் நீ சுவாசிக்கும் காற்று !
அளவோடு வெடிக்க வேண்டும் நீ
பட்டாசு என்று சொன்னால் ஏன்
சொன்னார்கள் என்று புரியவில்லையா
உனக்கு ? அவர் என்ன சொல்வது
நான் என்ன கேட்பது என்று விதண்டாவாதம்
நீ செய்தால் வேதனையும் சோதனையும் யாருக்கு ?
உனக்குதானே !
மாசில்லா வானம் வேண்டும், காசு கொடுக்காமல்
காற்று சுவாசிக்கும் காலம் தொடர வேண்டும்
என்றால் வெட்டி ஜம்பத்தை எட்டி உதைத்து விட்டு
மாசு நீக்கும் மருத்துவர் சத்தம்  போட்டு
சொன்ன சட்டம் ஏன் என்று புரிந்து கொள் நீ !
கண் கெட்ட பின் செய்யலாம் சூர்ய நமஸ்காரம்
என்னும் எண்ணத்தை தள்ளு பின்னுக்கு  நீ !
சொன்னதை நீ செய்யா விட்டால் சூரியன் எங்கே
வானத்தில் என்று நீயும் உன் பிள்ளையும் தேடும்
காலமும் நேரமும் நீ பார்க்க நேரிடும் காலம் வெகு
தொலைவில் இல்லை தம்பி !
மதித்து நடந்து கொள் சட்டத்தை …சட்டத்தை
மிதித்து  சத்தத்துடன் வெடி வெடித்தால் நீ மீறுவது
சட்டத்தை மட்டும் அல்ல ! உன் வாழ்வின் பயண
கோட்டையும் சேர்த்துதான் ! உன் செயல் உன்னைக்
கொண்டு சேர்க்கும் உன் வாழ்வின் இறுதிக்
கோட்டுக்கு நீ நினைத்ததற்கு முன்னரே !
வேகம் என்றும் விவேகம் அல்ல தம்பி !
புரிந்து நடந்து கொள் தம்பி !
Natarajan.K.
07/11/2018

வாரம் ஒரு கவிதை …” நாட் குறிப்பு எழுதிய நாட்கள் “

நாட் குறிப்பு எழுதிய நாட்கள்
==========================
நாட்குறிப்பு  நான்  எழுதியதில்லை ஒரு நாளும் !
பின் குறிப்பு மட்டும் இருக்கும் அவசியம் என்
கடிதத்தில் ! அது ஏன் என்று இன்று வரை
தெரியவில்லை  எனக்கு ! …ஆனால்
நாட்காட்டி தாள் தினம் தினம் காலையில் நான்
கிழிக்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன் ,நான்
கிழிந்த தாள் சொல்லும் குறிப்பு புரிந்து கொண்டு !
ஆம் … புது விடியல் தினமும்  நான் காண
துணை நிற்கும் அந்த ஆண்டவனுக்கு நான்
சொல்ல வேண்டும் நன்றி ஒரு ஆயிரம் !
நாட்காட்டியில் நான் கிழித்தது ஒரு தாளை
மட்டும் அல்ல … என் வாழ்வில் முடிந்து போன
ஒரு நாளையும் சேர்த்துதான் !
நாட்குறிப்பு நான் எழுதா விட்டாலும் என் நாட்காட்டி
சுட்டிக் காட்டுதே என் வாழ்வின் அர்த்தம் என்ன
என்று தினம் தினம் !
என் நாட்காட்டிதான் ஒரு வேளை நான்
எழுதாத என் நாட்குறிப்போ !
K.Natarajan
05/11/2018

வாரம் ஒரு கவிதை ….” மன்னிப்பாயா …”

 

மன்னிப்பாயா …
================
நான் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்பேன் வறுமையை
என்று சொன்னார் ஒருவர்!  நான் ஆட்சிக்கு
வந்தால் நதி நீரை இணைப்பேன் என்றார்
இன்னொருவர் !
நீதியும் தர்மமும் நிலை நாட்டுவேன் நான்
என்றார் மற்றொருவர் !
பாரினிலே நல்ல நாடாக மாறும் நம் பாரத
நாடு என்று சபதம் செய்தார் வேறு ஒருவர் !
சொன்னதை செய்வேன் ..செய்வதை சொல்வேன்
என்னும் ஒரே ஒரு   வாக்குறுதி  நம்பி என் வாக்கு
யாருக்கு என்று எடுத்தேன் முடிவு அன்று !
ஏமாந்து நிற்கிறேன் இன்று நான் ! மாத சீட்டு
கட்டி, கையில் இருந்த பணத்தையும் முழுதாக
தொலைத்து விட்ட ஒரு சராசரி மனிதனாக !
நண்பா ! நீ அன்றே சொன்னாய் …இலவசத்தில்
மயங்கி உன் வசம் இருப்பதையும் இழந்து
விடாதே நீ என்று !
கேட்டேனா நான் ? இல்லையே ! நான்
கேட்காமலே பல வித அட்டைகள் என்
கையில் இன்று ! கடன்  அட்டைகளும்
என் சட்டைப் பையில் காசுக்கு பதிலாக !
உன் சொல் அன்று கேட்காதது  என்
தப்புதான் …நண்பா !
மன்னிப்பாயா நண்பா  என்னை இன்று ?
Natarajan.K
in http://www.dinamani.com  dated 28/10/2018

வாரம் ஒரு கவிதை ….” காதலின் வானிலை “

காதலின் வானிலை
==================
வானம் பார்த்து  நிலவு  பார்த்து
இரவில் மின்னும் நட்சத்திரக் கூட்டம்
கண்டு களித்து நான் கொண்ட காதல் அந்த
நீல வானம் மீதுதான் அன்றும் இன்றும்!
ஒரு நாள் கறுக்கும் ,  இடிக்கும், கண்ணீரும்
வடிக்கும்! கோபத்தில் கொந்தளித்து வெள்ளமாய்
உருவெடுத்து தத்தளிக்கவும் வைக்கும்!
மறுநாளே கதிரவன் புன்சிரிப்போடு கரு
மேகத்துக்கு விடை கொடுத்து விரிக்கும்
எனக்கு ஒரு சிகப்பு கம்பளம் நான் ஓடி
விளையாட !
என் தாய் மடியில் அமர்ந்து நான் பார்த்து
ரசித்த அதே நீல வானத்தை நான் இன்று
காட்டுகிறேன் என் பேரனுக்கும் !  அதே
நீல வானம் , அதே நிலவு , அதே விண்மீன்கள் !
முதுமை எனக்கு மட்டுமே … என்  நீல வானக்
காதலிக்கு இல்லை! அந்த நீல வானம் என்றும்
நீல வண்ண முகத்துடனே சிரிக்க வேண்டும்
முதுமையின் சாயல் அதன்மேல் படாமல் !
என் பேரனிடம் சொல்கிறேன் நான் இன்று
இதே நீல மேகத்தை நீ உன் பேரனுக்கும்
காட்டி கதை சொல்லி மகிழ வேண்டும் என்று !
குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்து விட்டோம்
பாவிகள் நாங்கள் ! சுவாசிக்கும் காற்றுக்கும்
ஒரு விலை கொடுக்கும் அவலம் நேர வேண்டாம்
உன் காலத்தில் ! பார்த்து நடந்து கொள் தம்பி நீ !
நீல வானம் நீல வானமாகவே இருக்க நான்
உனக்கு தரும்  வானிலை முன் எச்சரிக்கை
இது தம்பி !
Natarajan
in http://www.dinamani.com dated  21/10/2018

வாரம் ஒரு கவிதை…. ” இடைவெளி “

இடைவெளி
============
இணையத்தின் துணையால் இந்த உலகே
இடைவெளி இல்லா ஒரே சமவெளி ஆனதே !
ஆயிரம் ஆயிரம் மைலுக்கு அப்பால்
இருந்தாலும் இணையத்தின் இணைப்பு
இணைக்குது   பல உறவுகளை இடைவெளி
தெரியாமல் !
இருக்கும் இடத்தில் பாச உறவுகளை
மறக்க வைத்து இடைவேளை  என்று
ஒன்று இல்லாமல் ஒரு சிலரை தன்
வலையில் சிக்க வைத்து வேடிக்கை
பார்ப்பதும் அதே இணையம்தான் !
இணையம் தேவை நமக்கு நம் உறவுகளின்
உறவை மேலும் மேலும் வலுப்படுத்த !
இணையத்தால் நம் உறவுகள் முறிந்து
இடைவெளி முளைக்கும் என்றால்  வேருடன்
களைவோம் நம் இணைய உறவை இன்றே !
Natarajan .K   in http://www.dinamani.com
dated 14/10/2018

வாரம் ஒரு கவிதை …” பால்ய வீதியில் …”

பால்ய வீதியில்
================
பால பருவத்தில், வீதியில் துளிர்த்து
படித்த பள்ளியில் அரும்பி , கல்லூரியிலும்
மலர்ந்து செழித்தது எங்கள் நட்பு !
நானும் அவனும் பால்ய நண்பர்கள்
என்னும் ஒரே ஒரு பிணைப்பு
இணைத்து விட்டதே  எங்களை
இன்று வரை !
வீதியில் விளையாட்டாய் துளிர்த்த  நட்பு
வாடவில்லையே இன்னும் !மணக்குதே
இன்றும்! காரணம் என்ன ?
என் வாழ்க்கை வீதியில் முளைத்த பிற
நட்புகள் பல வெறும் “ரயில் நட்பாய் “
மாறிய காரணம் என்ன ?
இனம் ,மதம் ,குலம்  மறந்து என்  நண்பனுடன்
கை கோர்த்து ஓடி  விளையாடிய
அந்த பால்ய வீதியை இன்று தேடுகிறேன்
நான் !  என் கேள்விக்கு விடை தேட !
K.நடராஜன்
07/10/2018

வாரம் ஒரு கவிதை ….” பாதியில் முறிந்த பயணம் ” 2

பாதியில் முறிந்த பயணம்
==========================
அயல் நாட்டில் வேலை கணவனுக்கும்
மனைவிக்கும் …கை நிறைய காசு !
கூடவே தலைக்கு மேலே கடன் !
முடியாத பயணம் இது ….என்றும்
தொடரும் இந்த சொகுசு வாழ்வு !
கனவு கண்டது பல குடும்பம் !
“ஒரு மண்ணின் மைந்தன்” கொள்கை
வேற்று மண்ணின் கிளையை விழுதுடன்
வேரறுக்கத் துடிக்குதே இன்று!
இது பாதியில் முறிந்து முடியும்
பயணமா ? இல்லை…அவர் வாழ்வின்
பாதையை திசை மாற்றி அவரவர்  தாய்
நாட்டில் மீண்டும் கால் பதித்து பாதியில் முறிந்த
பயணம் விடாமல்  தொடர இறைவன் அவருக்கு
கொடுக்கும் ஒரு அருமையான வாய்ப்பா ?
K.Natarajan
01/10/2018

வாரம் ஒரு கவிதை …” பாதியில் முறிந்த பயணம் “

பாதியில் முறிந்த பயணம்
============================
இருமனம் இணைந்து ஒருமனம்
உருவாகியது திருமண உறவில் !
அருமையான  வாழ்க்கைப் பயணம் ஆரம்பம்
அந்த இருவருக்கும் !
இனிதே தொடங்கிய ஒரு பயணம்
முடிந்ததே  ஒரே  நாளில் ! ஒரு சாலையில் !
காரணம் ஆயிரம் சொன்னார் சுற்றமும் நட்பும் !
குறை பல சொன்னார் மற்றவர் மீது !
உரைக்கவில்லயே இன்னும் ஒரு உண்மை
உறவினருக்கு ! தலைக் கவசம் அணிவது
ஒரு உயிருக்கு கவசம் என்னும் உண்மை !
கவசம் இருவரும் அணிந்து இருந்தால்
பாதியில், ஒரு பாதையில் முறிந்து
முடிந்து இருக்குமா அந்த இருவரின்
வாழ்க்கைப் பயணம் ?
சற்றே சிந்திக்க வேண்டும்… இரு சக்கர
வாகனம் ஓட்டும் அனைவரும் ! காவலர்
கேட்டாலும் கேட்காவிட்டாலும் , அந்த
தலை கவசம்தான் உங்கள் உயிர் கவசம் !
கவசம் எத்தனை நீங்கள் படித்தாலும்
மறக்க வேண்டாம் இந்த கவசத்தையும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/10/2018

வாரம் ஒரு கவிதை …” சொற்கள் “

 

சொற்கள்
———
எண்ணங்கள் உருமாறும் எழுத்தாக!
எழுத்து வடிவெடுக்கும் ஒரு கதையாக ,
ஒரு கவிதையாக ,ஒரு புத்தகமாக ,
கற்பனை கல்லில்  செதுக்கிய
ஒரு நல்ல சிற்பமாக !
சிற்பமே  சொல்லும், அதை வடித்த சிற்பி யார்
என்று !
சொற்களும் எண்ணத்தின் சிதறல்தான்
ஆனால் நம்மில் பலர்  சிதறும் சொற்கள்
கற்களாக மாறி காயப்படுத்துதே அடுத்தவர்
உள்ளத்தை !
கற்றுக் கொள்வோம் நாம் ஒரு நல்ல  பாடம்.. நம்
சொற்கள் வடிக்கத் தேவையில்லை ஒரு சிற்பம் !
கற்கள் ஆக மட்டும் உருமாற வேண்டாம்
என்றும் எப்போதும் நாம் சொல்லும் சொற்கள் !
K.Natarajan   in http://www.dinamani.com dated 21/09/2018

வாரம் ஒரு கவிதை…. “அன்பின் வழியது “

அன்பின் வழியது …
—————-
ஐந்தறிவு உயிரினம் பதறி தவிக்குது
தன் குட்டிகளைக் காப்பாற்ற !
அதன் கண்ணில் வழியும் நீர் வெறும்
தண்ணீர் அல்ல அந்த நேரம் … வாய் பேச
முடியாமல் தவித்து அதன் விழி
வழி வரும் நீர்  ரத்தக்கண்ணீர் !
சாவின் பிடியிலிருந்து மீட்டு  தன்
குழந்தைகளை அந்த தாய் உச்சி
முகர்ந்து வருடும் நேரம், வழியும்
ஆனந்தக் கண்ணீர் அதன் விழியில் !
அன்பின் வழி எது  என்று அது
பாடம் கற்றதா என்ன ?
சகலமும் கற்று ஆறு அறிவும்  உள்ள
பெற்ற தாய் ஒருத்தி தன் பிஞ்சுக்
குழந்தைக்கே நஞ்சு வைக்கும் அவலம்
பார்த்து ஐந்தறிவு ஜீவன் எல்லாம்
நடு நடுங்கி ஒதுங்கி நிக்குதாம்
இன்று ஒரு ஓரத்தில் !
ஆறு அறிவு காட்டிய  வழியில்
மறந்தும் தன் ஐந்து அறிவு இனம்
பயணித்து விடக் கூடாது  என்னும்
அதன் நிலையில் மேலும் உறுதியாய்
தன் இனத்தை வழி நடத்துதாம்
அந்த ஐந்தறிவு தாய் இனம் !
Natarajan
13/09/2018