பெல்ட்
இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,”நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,”ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,”உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,”முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,”தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.”
இரவல்
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,”என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,”உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,”என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,”என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.”
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,”ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?”ஷா சொன்னார்,”என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!”
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,”ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,”நேதாஜி சொன்னார்,”உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.”
இயல்புதானே?
பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,”எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,”என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,”இயல்பாக என்ன இப்போது நடந்தது?”என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,”எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?”ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.
திருநாள்
ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,”நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?”என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,”யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.”என்றார். ஹிட்லர் உடனே,”யூதர்களின் திருநாள் எப்போது வரும்?”என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,”தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.”ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?
பிடித்த மதம்
மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,”ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்…..”என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,”எனக்குப் பிடித்த மதம் தாமதம்,”என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.
வரவேற்பு
காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,”என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,” என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,”அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?”என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.
மும்மணிகள்
ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,”இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,”என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,”வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,”என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.
பேசும் எந்திரம்
பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,”பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,”என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,”நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.”
சீனிவாசன்
பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,”திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!”என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,”அடடே,எறும்பு இருக்கிறது,”என்றார். செட்டியார் சொன்னார்,”எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்”என்றார்.