மாற்றி யோசிக்கும் குழந்தைகள் !!!!!!

இக்காலத்தில் சில குழந்தைகளின், “ஐக்யூ’ பிரமிக்க வைக்கும்படி
இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம்
செய்து வைத்தார் நண்பர் ஒருவர். சென்னை திருவெற்றியூரில் உள்ள தனியார்
பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாராம். அவர் சொன்னது:

சாதாரணமாக தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத ஒரு மொழியாகத் தான்
பார்ப்பர்; ஒதுக்கியும் வைப்பர் சார்… ஆனால், நான் பணிபுரியும் பள்ளி
கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு. யூ.கே.ஜி.,
படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துக்
கொண்டிருந்தேன்…

ஆலமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே
மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, “ஸ்வாகா’ செய்து வருவதையும், பாம்பை
பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே
கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று,
முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன்
பிரச்னையில்இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி
விளக்கிக் கூறினேன். தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை
ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, “இது என்ன கதை மிஸ்?’
என்றது. “ம்… நீதிக் கதை’ என்றேன். “இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?’
என கேட்டது. “தன்னை விட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி
சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்…’ என்றேன். “அதுக்காக காகம்
என்ன செஞ்சது?’ என்றது. “ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து
பாம்போட பொந்துக்குள்ள போட்டது…’ என்றேன்.

உடனே, அக்குழந்தை, “ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம
எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு?’ என்றது. “திருட்டு…’ என்றேன்.
“அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது
தப்பு தானே?’ எனக் கேட்டது.

குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை…

“திருதிரு’ வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது… “என்ன தான்
காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை பண்றது
தப்பில்லையா மிஸ்… பாம்பும் ஒரு உயிர் தானே!’ என்றது.

நான், “தப்பு தான்!’ என்றேன். உடனே, “இந்தக் கதையில திருடுறதையும், கொலை
பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ்… இது
நீதிக் கதையா?’ எனக் கேட்டது.

வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை
திரைப்படங்களில் மட்டும் தான், நான் பார்த்திருக்கிறேன்; அன்று நேரில்
பார்த்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும்
படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப்
பார்த்திருக்கிறோமா? குழந்தை தொடர்ந்தது… “காக்காவோட முட்டைகளும்
பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக்கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி
ஏதும் தோணலியா மிஸ்?’ எனக் கேட்டது. “தோணலியே ராஜா…’ என்று என்
தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக்கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு
குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில், எதுவும் ஐடியா
இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, “வேற எதாவது வழி இருக்கா?’
என்றேன்.

உடனே அது, “இருக்கே!’ என்றது. “எங்கே சொல்லு, கேட்போம்…’ என நான்
கூறியதும், “காகம் சாது. பாம்பு துஷ்டன். “துஷ்டனை கண்டா தூர விலகு’ன்னு
சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா
கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும்
சாகாது இல்லையா?’ எனக் கேட்டது.

உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் யாருமே,
ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என்று நினைத்தேன்…’ எனக் கூறி
முடித்தார் அந்த இளம் ஆசிரியை.

நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை,
“பிளைண்ட்’டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்த காலத்து பிள்ளைகள், துணிந்து
கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்… வரவேற்கத்தக்க
முன்னேற்றம் தான் என எண்ணினேன்.

source:::: unknown…. input from one of my contacts ….

Natarajan

One thought on “மாற்றி யோசிக்கும் குழந்தைகள் !!!!!!

  1. GIRI.K's avatar GIRI.K September 22, 2012 / 8:49 am

    பாம்பு பிடிப்பதை விட்டு காக்கா பிடி
    GIRIDHARAN.K

Leave a comment