ஒரு முறை பெரியவாள் மதுரை அருகே முகாமிட்டிருந்த சமயம். மகானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நாராயணசாமி என்றொரு பக்தர், தன நண்பருடன், நடமாடும் தெய்வத்தை தரிசிக்க போயிருந்தார். கையில் அவ்வளவு பண வசதியில்லாதவர் அவர். கொஞ்சமாகத்தான் பணத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தார்.
அவர் ஒரு சம்சாரி. எந்த செலவு என்றாலும், அளவோடுதான் செலவு செய்ய முடியும். மகானை தரிசிக்க வந்ததில், நண்பருக்கும், அவருக்கும், பஸ் கட்டணத்துக்கே பணம் சரியாக போய்விட்டது. மகானை தரிசித்தோம் என்ற ஆனந்தத்திற்கு பதிலாக, திரும்பவும் ஊர போய் சேர, கையில் காசில்லையே என்கிற கவலைதான் அவரை அதிகமாக ஆட்கொண்டது.
மகானிடம் உத்தரவு வாங்கிகொண்டு, எப்படி ஊர திரும்புவது என்று விசனத்தோடு அவர் வெளியே வெகுதூரம் வந்துவிட்டார். அவரது பின்னால் ஓடி வந்த ஒருவர், அவரை மகான் திரும்ப அழைப்பதாகச் சொன்னார். நாராயணசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய பக்தர் கூட்டத்தில் , தன்னை மட்டும் மகான் குறிப்பிட்டு அழைப்பானேன்? மனதில் குழப்பத்துடன் பெரியவாள் முன் நின்றார்.
“பாவம், நீ சம்சாரி. இதை வச்சுக்கோ”, என்று ஐந்து ரூபாயை மகான் கொடுத்தபோது, சாட்சாத் சுந்தரேஸ்வரரே தன கஷ்ட நிவர்த்திக்கு பணம் கொடுத்து அருளுவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களை படிக்க அந்த மகானால் முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இதை போன்ற அருள் சுரக்கும் பரமேஸ்வரரை தரிசித்து வணங்கினால், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவது சாத்தியமே!
source:::: kanchiperivaa forum
natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3153#ixzz2GQdZ0Uxr