படித்ததில் பிடித்தது ….தோப்புக்கரணம் எதற்காக ?…

விஷ்ணு காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அந்தச் சக்கரத்தை ஒரு போரில் ஏவ, அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணு, வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு, சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார். மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொரு முறை ஜலந்தாசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சக்கரப் படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார்.

விஷ்ணுவின் கையிலிருந்த சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக்கொண்டார். அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இரு காதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டார். இந்தச் செயல் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது அவர் வாயில் இருந்த சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் எனப் போற்றப்படுகிறார். இவர் காஞ்சி

புரம் கோயிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள்புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

 

source ::::Dinamani …Tamil daily

natarajan

Leave a comment