நம் நினைவில் நிலைத்திருக்கும் வாரியார் !!!!

கிருபானந்த வாரியார் அவர்களின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.

‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” எனபது விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்க்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.

கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.

வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?

தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா,முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா? ”
source:::: input from my friend.
natarajan

One thought on “நம் நினைவில் நிலைத்திருக்கும் வாரியார் !!!!

  1. Giridar N's avatar Giridar N April 9, 2017 / 8:43 pm

    திரு வாரியார் அவர்கள் அருளிய அரிய தகவல்களை பதிவு செய்ததற்கு என் பணிவான நன்றி!

Leave a comment