உலகிலேயே உயர்ந்த நாமம் ராமநாமம். “ஸ்ரீராமஜெயம்’ என ஒருமுறை சொன்னால் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. எல்லா வானரங்களும் கற்களை தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின்மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தபணியை மேற் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்தவானரங்களுடன் இணைந்து கல்லை தூக்கிப்போட்டால் என்ன என கருதியபடியே, ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின்மீது அமரவில்லை. அலை அடித்து சென்றுவிட்டது. ராமபிரானுக்கு வருத்தம்.
“இந்த குரங்குகள் போடும் கற்கள்கூட சரியாக மற்றொரு கல்லின்மீது அமர்ந்துவிட்டதே. நமது கல்லை அலைஅடித்து சென்றுவிட்டதே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்” என வருத்தப்பட்டார். ஆஞ்சநேயர் ராமனின் அருகில் வந்தார். அவர் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.
“ஆஞ்சநேயா! நான் செய்ததை நீ பார்த்துவிட்டாயா? எனக்கு ஒரு கல்லை போடக்கூட தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது” என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர், “ஸ்ரீராமா! மற்ற குரங்குகள் எல்லாம் “ஸ்ரீராமஜெயம்’ என்ற உன் நாமத்தை சொல்லிக்கொண்டே கற்களை தூக்கிப்போட்டன. அவை சரியாக அமர்ந்தது. நீ ராமனாகவே இருந்தாலும் ராமஜெயம் சொல்லிக்கொண்டே போட்டிருந்தால் அது சரியாக அமர்ந்திருக்கும்” என்றாராம்.
ராம நாமத்தின் மகிமை அத்தகையது.

source::::input from a friend of mine..
Natarajan