
ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, “அல்லம் போக்கும் விநாயகர்’ வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் “ஆழத்துப்பிள்ளையார்’ என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.
வள்ளலாக விளங்குகிறார்:மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு “கள்ளவாரணப்பிள்ளையார்’ என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.
ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார். ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.
source :::::Dinamalar Tamil Daily
natarajan