படித்து ரசித்த கவிதை….” அவதாரம் ஒன்று நான் எடுத்து பாவம் களைதல் எவ்வாறு …” ?

 

புதியபூமி

சிறகு முளைக்க வில்லையை
பிறகு எப்படி சாத்தியமிது

உயர உயரப் பறக்கிறேனே
பயம் சிறிதுகூட இல்லாமல்

நொடிப் போதில் விண்வெளியில்
நீண்ட தூரம் பயணிக்கிறேன்

நீலபூமியின் அழகு கண்டு மகிழ
நீள்விழி இரண்டு போதவில்லை

சுற்றும் கோள்கள் தாண்டி
சற்றும் களைப்பில்லாது ஏகினேன்.

சூரிய மண்டலம் கடந்து – பல
அரிய காட்சிகள் கண்டு

இன்னமும் மேலே மேலேயென
மின்னல் வேகத்தில் பயணித்தேன்.

ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
ரயில் பயண மரமாய் மறைய

மேக க் கூட்டமொன்று கண்டு
வேகம் குறைந்தது பயணம்

குழந்தை போல் சிரித்திரிந்த
அழகியதோர் புதியபூமி கண்டு

காணக்கண் கோடி இல்லையே
கவலை கொண்டேன் இப்படி.

மெதுவாய்த் தரையிரங்கி அந்தப்
புது பூமியில் கால்பதித்தேன்

பூமரங்கள் இருபுறமும் நின்றாடி
சாமரங்கள் வீச நடக்கலானேன்.

ஒரு கோடி சூரியப்பிரகாசம்
உருவமில்லா உருவமாய் ஆங்கு

திருவருளாய் நிற்கக் கண்டு
உருகிய உள்ளம் கசிந்தேன்.

“வருக வருக பக்தா இப்படி
அருகில் வா, கேள் கேள்வியை

காண வேண்டுமென நீதானே
காலம் பல தவமிருந்தய்”

ஆண்டவனின் வாக்கு கேட்டு
அடிபணிந்து எழுந்தேன் நான்

” கொடுமைகள் கோலோச்சினால்
எடுப்பீர்கள் அவதாரம் பூமியில்

நெடுங்காலமாய் கொடுமை ஆடித்திரிய
எடுக்கவில்லையே பிறப்பு ஏன் “

கேட்க நினைத்ததை எப்படியோ
தட்டுத்தடுமாறி கேட்டு வைத்தேன்

கெடுமதியோர் சிலர்தானென்றால்
எடுக்கலாம் அவதாரம் வரை அழித்திட.

பிறந்தோரெல்லாம் பிழை செய்தோராகி
அறம் வீழ்ந்து கிடக்கும் பூமியில்

அவதாரம் ஒன்று எடுத்து நான்
பாவம் களைந்திடல் எவ்வாறு ?

தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும்
தனிக்குணம் தந்தேன் மனிதனுக்கு

தனக்குள் இருக்கும் என்னை அவன்
கண்டுகொள்ளுவான் என எண்ணி.

இத்தேடல் விடுத்து பணம் தேட
அத்தன பாவமும் அளவில்லாது செய்து

பொன்னானபூமியையும் தன் இனத்தையும்
சின்னாபின்னமாக்கி அழிக்கிறான் அவன்

படைப்பினிலே தவறு செய்தேனப்பா
பாழாய்ப்போன மனிதனைப் படைத்து.

எத்தனை முறை அவதாரம் எடுத்தாலும்
அத்தனையும் வீண் என உணர்ந்தேன்

இப்புது உலகில் மனிதனைப் படைக்கும்
தப்பு செய்யாது தனியே இருக்கிறேன்.

எனக்கு அப்பூமியில் இனி இல்லை வேலை
உனக்குச் சொன்னேன் என் பதிலை”

எல்லாம் வல்லவன் சொல்கேட்டு
உள்ளம் நொந்து திடுக்கிட்டு

பட்டென்று விழித்துப்பார்த்தால்
கட்டிலின் கீழே வீழ்ந்து கிடந்தேன்.!!!
Source and Input…. Shri Sadasivam , Coimbatore
Natarajan

Leave a comment