படித்ததில் பிடித்தது …. “பெருமாளை துணைக்கு அழைப்பது ஏன் ?”

புரிந்தது  …..தெளிந்தது !!!

 

 
ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார்.
ஒரு குடும்பஸ்தர் வந்தார்.
“”சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்…” என்று கேட்டார்.
“”அப்பனே! இதுவிதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி; கஷ்டங்களைக் குறைக்கலாம்,” என்றார் துறவி.
வந்தவர் விரக்தியாய் கேட்டார்.
“”உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை
சொல்லுவானேன்!”.
குரு சிரித்தார்.
“”மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ஆனால், அதர்மத்தை நடக்க விட்டதும், பெரும் துன்பப் போராட்டத்திற்குப் பின், தர்மத்தை வெல்லச் செய்ததும். விதியின் வலிமையை உணர்த்துவதற்காகத் தான்! காய்ச்சல் வந்தால், மருந்து சாப்பிட்டு அதைக் குறைப்பது போலத்தான் விதியின் பாதை. அந்தப் பாதையை மாற்ற முடியாது. ஆனால், அதன் கடுமையை குறைக்கவே கடவுளிடம் வேண்டுகிறோம், புரிகிறதா!” என்றார்.
வந்தவருக்கு நன்றாய் புரிந்தது, மனம் தெளிந்தது

 

ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வேங்கடவன் அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே, வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம்.
தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர். பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது. ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம். மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.
“”சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது. ஏழையாய் பிறந்த பாவத்தால் என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக வாங்க முடியவில்லை,”. அவன் பரிதாபமாக சொன்னது கேட்டு, குரு சிரித்தார். அமைதியாய் பேசினார், “”மகனே! அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் துளிக்கூட உண்ண இயலாது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா! தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா?
பிறருக்கு பகிர்ந்தளித்தல் தான்! அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது.
திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது. இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும். இறைவனின் கருணையும் அப்படித்தான்.
அவனது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.
உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறு துண்டை, நீ எடுத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே வந்து விடுவான்,” என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.

source ::::Dinamalar …Tamil Daily

natarajan

Leave a comment