” என்ன காப்பி சாப்பிட்டாச்சா …. !!!!”

 

மஹான் கொடுத்த காப்பி



காஞ்சிமாமுனிவர் கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற ஊரில் முகாமிட்டிருந்த சமயம். அப்போது அங்கே வேதத்திற்கான ஆய்வு சபையை அவர் கூட்டி இருந்தார். விஷ்ணுபுரம் வேதபண்டிதர் ஒருவரும் அந்த சபைக்காக அங்கே அழைக்கப்பட்டு இருந்தார்.

மடத்தில் அன்புக்கட்டளையின்படி, காப்பி என்பது தவிர்க்கப்பட்ட பானமாக இருந்தது. உடலின் நன்மைக்காகவும் மற்றும் ஏதோ ஒரு தெய்வ சூட்சுமத்தை அறிந்ததாலோ என்னவோ மடத்து சிப்பந்திகளும் காப்பி தயாரிப்பதையோ, அருந்துவதையோ தடை செய்து, மிகவும் கடுமையான நியமமாக மஹான் ஸ்ரீமடத்தில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் காப்பி பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தொடர்ந்து பல வருடங்களாக அந்தப் பானத்தை அருந்துபவர்களுக்கு, குறித்த நேரத்தில் அது கிடைக்காமல் போனால் தாங்க முடியாத தாபம் ஏற்படுவதுண்டு. இதே நிலையில் தான், விஷ்ணுபுரம் பண்டிதரும் அந்த அதிகாலை காப்பிக்காக ஸ்ரீமடத்தில் தவித்துக்கொண்டிருந்தார்.

அப்போது யாரோ ஒரு அன்பர், அவரை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் சென்று, இவர் கேட்காமலேயே சூடாகக் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்தார். பண்டிதருக்கு ஒரே ஆனந்தம். போன உயிர் வந்தது போல் மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் வேத சபை கூடியது. மஹான் சபைக்கு வந்ததும் அவரை நமஸ்கரித்துவிட்டு இந்த பண்டிதர் அவர் அருகில் சென்றார்.

“என்ன காப்பி சாப்பிட்டாச்சா?” பெரியவா தனக்கே உரிய தெய்வீகப் புன்சிரிப்போடு கேட்டதும், ஆடிப்போய் விட்டார் பெரியவர். யாருக்குமே தெரியாதென்று தான் செய்த காரியத்தை, மஹான் தன் தவறை சுட்டிக்காட்டுவது போல் கேட்டதும், அவருக்கு மனதில் பயம் தோன்றிவிட்டது.

“வந்து வந்து ஏதோ கொடுத்தான்” என்று பட்டும்படாமலும் , பளிச்சென்று சொல்லாமலும் குற்ற உணர்வோடு இருந்தார்.

“நான் தான் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னேன்” என்று சிரித்துக்கொண்டே மஹான் சொன்னபோது, தன் மீதுள்ள கரிசனத்தை அறிந்த அந்த முதிய பண்டிதர் ஆடித்தான் போய்விட்டார். மடத்தில் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வெளியே இருந்து இங்கே வருபவர்கள் ஏன் தங்களின் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்? இதை நன்றாக அறிந்த மஹான் தான் விஷ்ணுபுரம் வேதபண்டிதருக்கு, விதிவிலக்கு அளித்திருந்தார். 

இப்படி வேண்டியதை வேண்டியவாறு எல்லோருக்கும் அருளும் மாபெரும் தெய்வமான காஞ்சி மஹானை நாம் சரணடைய வேண்டாமா?  

 

source:::: http://www.periva.proboards.com

natarajan

Leave a comment