ஒரு கவிதையின் டைரி
…………………
என் கவிதை சொன்னது …இது என் டைரி என்று !
ஒரு டைரியில் கதை இருக்கும் …கவிதையும் இருக்கும்
கவிதைக்கே ஒரு டைரியா ? ! …. வியந்தேன் நான் !
உன் கதை என்ன ….படிக்கலாமா உன் டைரி நான் ?
கேட்டேன் கவிதையை !…. படிக்கணும் நீ கட்டாயம் …அது
என் கதை அல்ல …உன் கதை…உன் முதல் கவிதை !
சொன்னது என் கவிதை !..பிரித்தேன்…படித்தேன் …என்
கவிதை டைரியை !… என் முதல் கவிதை அதில் முதல் பக்கத்தில் !
படித்துப் படித்துப் பார்த்தேன் …தேன் என இனித்தது என்
கவிதை…விண்ணில் பறந்தேன் நான் … இந்த மண்ணில்
இல்லை என் கால் ! .. என்னுள் ஒரு பாரதியும் கம்பனுமே !
சிரித்தது கவிதை … என் டைரி குறிப்பையும் மறக்காமல்
படி இப்போது …சொன்னது என் கவிதை ! படித்தேன்
அதன் குறிப்பை …” என்ன அய்யா கவிதை இது ? எதுகை
இல்லை …மோனை இல்லை … ஒரு கவிதைக்கு சொந்தம்
சொல்ல சந்தமும் இல்லை .. இது என்ன கவிதை ? கவிதை
விதை விதைக்காத ஒரு கதை அய்யா இது” அதிர்ந்தேன் நான்!
இது கவிதை …அது கவிதை என்னும் நாளில் என்
புதுக் கவிதை இதை இதுவா கவிதை என கேக்குதே என்
கவிதையே தன் டைரியில் !…. இது என்ன டைரியா ?
இல்லை கம்பன் வீட்டுக் கட்டுத் தறியா ? !!!
நடராஜன்
8 june 2016