காஞ்சி மஹானின் கருணை உள்ளத்திற்கு இது தான் அளவென்று சொல்ல முடியாது. பக்தர்களை இனம் பிரித்துப் பார்ப்பது அவருக்குப் பிடிக்காத காரியம். நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதையெல்லாம் அவரவர்களின் செயல்பாடுகளின் மூலம் அறியக்கூடியவர் அவர்.
1980ஆம் வருட வாக்கில் பெரியவா வடக்கே பாத யாத்திரை செய்யக் கிளம்பிய சமயம், ஆந்திராவில் ஒரு பெளர்ணமி நாளில் அந்த மஹானுக்கு ஷவரம் செய்து முடிகளை அகற்ற தெலுங்கரான ஒரு நாவிதர் அழைத்து வரப்பட்டார். அடுத்தடுத்த பெளர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் ஸ்ரீமடத்திற்கு அழைத்துவரப்பட்டு பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார்.
மஹானை ஸ்பர்ஸித்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அந்த நாவிதர் சிரத்தையோடு தன் தொழிலைச் செய்தார். மஹானுக்கு பணி செய்யும் மகத்துவத்தை முதலில் புரியாமல் இருந்தவருக்கு மாதந்தோறும் இந்தத் திருப்பணி கிட்டியதில் மஹான் சிலரை ஈர்த்து ஆட்கொண்டுவிட்டதில் வியப்பே இல்லை எனலாம்.
அதனால் பணிவிடைகள் செய்ய வருவது போல் அல்லாமல் இந்த நாவிதர் பூர்வ பக்தியோடு வரும் நிலை தானாக அவருக்கு ஏற்படலாயிற்று. அப்படி வரும்போது மஹாபெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்?
ஒரு மூட்டை நிறைய புற்று மண் மாங்குச்சி என மஹான் உபயோகிக்கும் வஸ்துக்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தபின் முடி இறக்கும் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவது தொடர்ந்தது.
மஹாபெரியவா வடக்கே இருந்து திரும்பவும் காஞ்சி ஷேத்திரம் வந்தாயிற்று. தெலுங்கு தேசத்திலிருந்து நாவிதர் காஞ்சி வருவதும் தொடர்ந்தது.
இப்படித் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்த அந்த நாவித பக்தரின் மனதில் தாழ்வு மனப்பான்மை பக்தியினால் எழுந்தது. புற்று மண்ணை ஒரு அழுக்கான துணியில் கட்டி அதோடு மாங்குச்சியை தட்டில் வைத்து ஒரு ஓரமாக வைத்துவிடுவார்.
அதேசமயம் பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் உயரிய பழவகைகள் முந்திரி, பிஸ்தா பருப்பு, விலை உயர்ந்த சால்வைகள், தங்க நாணயங்கள் என பல தட்டுகளில் அணிவரிசைகளுக்கிடையே மஹாபெரியவா என்னும் ஏழை பங்காளனுக்கு நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையே உயர்வாகத் தெரியும்.
மஹானின் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பொருள்களைப் பார்த்தபோதுதான் அந்த நாவிதனுக்கு மனதில் ஆதங்கம் ஏற்பட்டது. தானும் இப்படி தரிசனத்திற்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று தீர்மானித்த அந்த பக்தர் தான் புற்று மண் வைத்த தட்டில் விலை உயர்ந்த பழங்கள், தேங்காய் திராட்சை என பல வஸ்துக்கள் நிறைந்திருக்க அத்துடன் சில ரூபாய் நோட்டுக்களும் காணப்பட்டன.
மற்றவர்களுக்கு இணையாகத் தானும் மஹானுக்கு இதைப்போன்ற வஸ்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாவிதர் நினைத்ததன் விளைவு இது.
இருந்தாலும் மஹானின் முன்னிலையில் இவைகள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு சந்தேகம் எழுந்தது.
“ஏன் இன்னிக்கு அந்தத் தெலுங்கர் வரலையோ” என்று கேட்க, மடத்து சிப்பந்திகள் தெலுங்கர் சமர்ப்பித்த தட்டைக் காண்பித்தனர்.
“என்ன இது, அவர் எப்போதும் கொண்டு வந்து வைக்கிற மாதிரி தெரியலையே” என்று அந்த பக்தரைப் பிரத்தியேகமாக அங்கீகரிக்கவே கேட்பது போல மஹான் வினவ, அப்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. நாவிதர் மஹானின் முன்னால் சற்று தூரத்தில் நிற்க, “உனக்கேது இவ்வளவு பணம்” என்கிற கேள்வியை கேட்டு அவரது உண்மையான பக்தியை வெளிக்கொணர்ந்தார்.
எல்லோரையும் போல் மஹானுக்கு தன்னால் ஏதும் கொண்டு போக முடியவில்லையே என்று வருந்திய அந்த நாவிதர் தெரு ஓரத்தில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த குடிசையை விற்றுவிட்டார்.
மனைவியும் குழந்தைகளும் தெருவில் நிற்க இவர் குடிசை விற்ற பணத்தில் மஹானுக்குத் தேவை என நினைத்து வாங்கிய பொருட்களோடு மீதம் இருந்த பணத்தையும் தட்டிலேயே வைத்து மஹான் முன் சமர்ப்பித்துவிட்டார். அப்போதுதான் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு இவரைப் பற்றித் தெரியலாயிற்று.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு இப்படித் தன் உடைமைகள் யாவையும் மஹானின் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறியச் செய்தார் மஹான்.
அவருக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார் மஹான். அவருக்கு மேலும் பேரின்பம் அருளினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
source:::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/5278/barbers-devotion-mahaperiyavaa/#ixzz2gMUA2eU4
Kangal kalangugindrana. kaaranam andha mahanin karunayay ninaththa alladhu andha parama bhakthanin uyarndha bhakthiyay ninaiththa theriyavilla. Aanaal kangal kalangiyadhu nijam.