தீராத கோபம் யாருக்கு லாபம்!
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், ‘மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், ‘ஆமாம்…’ என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, ‘மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன…’ என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்…’ என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், ‘இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்…’ என்று
உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, ‘இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை – பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்…’ என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.
இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
— எம்.பூபதி, மதுரை. in Dinamalar…varamalar
natarajan