சென்னை மழையில் சாமானியரின் மீட்பு பணி….

சென்னையில் அடையாளம் தெரியாத ஒருவர், தண்ணீரால் சூழப்பட்ட பேருந்தில் இருந்த வயதான பெண்மணியை தூக்கிச் சென்று மீட்ட காணொலி காட்சி, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. | வீடியோ இணைப்பு கீழே |

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பாலத்துக்கு அடியில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. ஆனால், ஒவ்வொரு மழை நாளிலும் இது இயல்புதான் என்பதால் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று நகர முடியாமல் பாலத்துக்கு அடியிலேயே நின்றுவிட்டது. காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினர். நடந்தும், ஆட்டோவிலும், மற்ற பேருந்துகளிலும் செல்லத் தொடங்கினர். பலவீனமாக, நடக்கவே முடியாமல் இருந்த வயதான பெண்மணி ஒருவர், என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.

கடைசியில் அவருக்கும் ஒரு வழி பிறந்தது. அந்த வழியாக வந்த நல்ல மனிதர் ஒருவர், அவரைத் தூக்கிச் சென்று மழைநீரைக் கடந்தார்.

நடக்கவே முடியாமல் இருந்த அப்பெண்மணியைக் காப்பாற்றிய சம்பவம், காணொலியாக எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அடையாளம் தெரியாத அந்த சாமானியர், பேருந்தில் இருந்து முதியவரை இடுப்பு வரையிலான தண்ணீரில் தூக்கி வரும் காணொலி, அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது. சாமானியரின் அந்த மீட்புப் பணியை ஆராதித்து நெட்டிசன்கள் அந்தக் காணொலியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோ பதிவு:

Source…..www.tamil.thehindu.com
Natarajan

Leave a comment