” ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் “……

ஓவியம்: ஆர்.ராஜேஷ்

ஓவியம்: ஆர்.ராஜேஷ்

குறள்:

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (346)

 

பொருள்:

நான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்ற செருக்கு இல்லாதவரும் எல்லாப் பொருட்களையும் தனக்குரியது என்று கருதாதவரும் தவப் பெரியோர்கள் என்னும் எட்டாத இடத்துக்கு உயர்ந்துவிடுவர்.

விளக்கம்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அருணாச்சலப்பிரதேசம். 2003-ம் ஆண்டு அங்கு நான் 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘தாவாங்சூ’ என்ற இடத்துக்குச் சென்றிருந்தேன்.

ஒருநாள் முழுவதும் அங்கு தங்கியிருந்து, புத்த பிட்சுகளுடன் பேசி மகிழ்ந்திருந்தேன். அங்கு கடுமையான குளிரும், வாழ்வதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலையும் நிலவியது. அப்படிப்பட்ட குளிர் மிகுந்த சூழ்நிலையிலும் அங்கு இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பதைப் பார்த்தேன்.

‘‘இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது?’’ என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. இதைத் தொடர்ந்து நான் அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம், ‘‘இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது… இது எப்படி சாத்தியமாகும்?’’ என்று கேள்வி எழுப்பினேன்.

அதற்கு அவர் என்னிடம்,‘‘நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர். உங்களுக்குத் தெரியாததா?’’ என்று வினவினார். அவரை நான் விடாமல் ‘‘எனக்கு நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் சொன்னார்: ‘‘இந்த உலகத்தில் நமக்குப் பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூகப் பொருளாதார வேறுபாடுகள், கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை ஆகியவை நிலவுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் பவுத்த மடம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் ‘நான், எனது’ என்கிற எண்ணத்தை நம் மனதில் இருந்து அகற்றினால் நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும்; தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வெறுப்பு அகலும்; வெறுப்பு மனதைவிட்டு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும்; வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால் அமைதி நம் மனதை தழுவும்” என்று பதிலளித்தார்.

குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)

பொருள்:

எந்தப் பொருளும் நமக்கு எப்படியும் தோற்றம் தரலாம்; ஆனால் அந்தப் பொருளில் அழியாமல் என்றும் நிலைத்திருக்கக்கூடியது எது என்று கண்டறிய வேண்டும். எனவே உண்மையான இயல்பையும் கருத்தையும் அறிந்து கொள்வதே அறிவாகும். நாம் காண்கிற பொருட்கள் பலவிதமானவை. அவை உருவம், குணம், நிறம் என்று பலவிதத்தில் ஒத்ததாகவும் வேறானதாகவும் நமக்குத் தெரிகின்றன. ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அவற்றின் உண்மைத் தன்மை நமக்குப் புலப்படும்.

விளக்கம்:

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகருக்குச் சென்றபோது ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தனர். அவர்கள் கீர்த்தனைகளைப் பாடும்போது அவர்களோடு நானும் உடனிருந்து ரசித்தேன். ஒவ்வொருவரும் பாடலின் ஒவ்வொரு வரியையும் சுவைத்து, திளைத்து பாடினர். அவர்களிடம் அது குறித்துப் பேசினேன். எது செய்வதாக இருந்தாலும் இறைவனுக்காகச் செய்யும் சிந்தனையோடு செய்வதாகச் சொன்னார்கள். அவர்கள் அத்தனை பேரின் செயல்பாடுகளும் தெய்வீகம் பொருந்தியதாகவே இருந்தன.

எடுத்துக்காட்டாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தோட்டக்காரர் கடவுளுக்குக் காணிக்கையாகும் மலர்களைப் பெறுவதற்காகத் தோட்ட வேலை செய்வதாக நினைத்தார். அலங்காரம் செய்பவர் கடவுளுக்கான இடத்தைக் கடவுளுக்காக அழகாக்குவதாக எண்ணி அதில் ஈடுபட்டார். கீர்த்தனை பாடும் குழுவினர் கடவுளை வழிபடுவதற்கு ஏற்ற ராகங்களைத் தேர்ந்தெடுத்து பாடினர். இறை எண்ணத்தோடே இறைவன் புகழைப் பாடினார்கள். அதனால் அந்த இடமே தெய்வீகமாக மிளிர்ந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களையும், குழுமியிருந்தவர்களையும் தெய்வப் பிரதிநிதிகளாகவே கருதினார். ஒவ்வொர் உறுப்பினரும் என்ன செய்தாலும் தங்களுடைய செயல் ஆன்மிக எண்ணங்களுக்கு சிறப்புச் சேர்ப்பதாகவே கருதினர்.

பல்வேறு துறைகளின் தகவல்களை அறிந்துகொள்ளும்போது அதில் பொதிந்திருக்கும் பேருண்மையை ஆராயும் மனதை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஆராய்ந்து கண்டறிவதுதான் மெய்ப்பொருளாகும். அத்தகைய மெய்ப்பொருளை மீரட்டில் நான் சந்தித்த அந்தக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கைவரப் பெற்றிருந்தனர்.

Source….www.tamil.thehindu.com    Keywords: அப்துல் கலாம்இறுதி எழுத்துக்கள் தொடர்திருக்குறள்கலாம் குறள்

Natarajan

One thought on “” ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் “……

  1. Augusta's avatar Augusta January 13, 2016 / 2:04 am

    Fascinating article , I am going to spend more time learning about this subject.

Leave a reply to Augusta Cancel reply