” உன் பெயர் என்ன ?… ‘நாராயணசுவாமி ‘…” !!!

 
“பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட்–கிராஜுவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.

நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும். நியுமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண்கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணஸ்வாமி ( Narayanaswami ) என்ற பெயரை Narain என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்தரவு கொடுத்தால் ‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.”

பெரியவா ஸந்நிதியில், பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தபோது தன் விண்ணப்பத்தைச் சொல்லிமுடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்..

இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பெரியவா ஒரு சொற்பொழிவையே நிகழ்த்திவிட்டார்கள்.

” நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்று, நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேதமந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு. நாமகரணம் செய்வதற்குத் ( பெயர் வைப்பதற்குத்)தான்
வேத மந்திரங்கள் இருக்கின்றன. நாமவிகரணத்திற்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

சுவாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு. ‘நம்பி பிம்பி என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; கண்ணன் பெயரை வையுங்கள்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடா விட்டாலும், நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைத்துவிடும்.

நியூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வொரு இங்க்லிஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக்கூட்டி, ‘நல்லது, கெட்டது’ என்கிறார்கள். இது சுதேசி சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண்கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள். அது போகட்டும், நியூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

பையனுக்கு நிறைய மார்க்கு வாங்கணும்னு கவலை; அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையே? என்று சிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்?

சரஸ்வதி ஸ்தோத்ரம் இருக்கு;ஸௌந்தர்யலஹரியிலே மூணு ஸ்லோகம், சரஸ்வத பிரயோகம்; மேதாஸூக்தம் என்று வேதமந்திரமே இருக்கு; குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்ரம்—–எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும் ‘ட்ரெஷர்ஹௌஸ்’ என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாமல், இங்க்லீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”

இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவா.

அவன் கண்கள் கெஞ்சிக்கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது மாணவர் பெயரைக் கேட்கச் சொன்னார்கள் பெரியவா.

“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/2799/numerology-analysis#ixzz2q3gzp3dZ

Leave a comment