ஒரு கட்டுரையில், கி.வா.ஜ., எழுதியது:
கவிதை, சங்கீதம் மற்றும் நாடகம் போன்ற கலைகள் எதுவானாலும், ரசிகர்கள் இருந்தால் தான், கலைஞர்கள் மகிழ்ந்து, மேலும் தம் திறமையை காட்டுவர். கலைஞர் உள்ளம் வெறும் பணத்துக்கோ, கொடைக்கோ மகிழாது.
மாடு தன் காதை மட்டும் ஆட்டுவதைப் போன்று ஆட்டுவது, கோகர்ண வித்தை; யானை தன் காது நுனியை மட்டும் ஆட்டும்; அதைப் போன்று செய்வது கஜகர்ண வித்தை. ஒரு வித்தையாடி, இந்த வித்தைகளை எல்லாம் செய்வதுடன், மாடு மாதிரி குரல் எழுப்புவான்; யானை மாதிரி பிளிறுவான். பலவகை விலங்குகளைப் போல நடிப்பான்.
ஒருநாள், ஓர் வித்தைகாட்டி, அரசன் ஒருவனின் சபைக்கு வந்து, தன் வித்தைகளை காட்டத் துவங்கினான்; எல்லாரும் பார்த்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு வித்தை முடிந்தவுடன், அதற்கேற்ப பரிசை அளித்து வந்தான் அரசன். இந்நிலையில், பார்வையாளர் கூட்டத்தில், பசு மேய்க்கும் இடையன் ஒருவன், கோலை ஊன்றி, ஓட்டை கம்பளியை தலைமேல் போட்டு, வித்தைகளை கவனித்தவாறு இருந்தான்.
பசுமாடு மாதிரி நடிக்க துவங்கினான் கலைஞன். வால் போன்ற ஒன்றை, பின்னால் செருகி, அதை ஆட்டினான்; காதை தனியே ஆட்டினான். வேடிக்கை பார்த்த இடையன், வித்தைக்காரன் அருகில் வந்து என்னவோ செய்தான். அடுத்த நிமிடம், தான் போர்த்தியிருந்த ஓட்டை கம்பளியை, அவன் மேல் போட்டு விட்டுப் போய் விட்டான்.
வித்தைகள் எல்லாம் முடிந்தன. வித்தைக்காரன் முதலில் அந்தக் கம்பளியை எடுத்து மடித்து, கண்ணில் ஒற்றி, பெட்டிக்குள் வைத்தான். அதை பார்த்த அரசனுக்கு கோபம் வந்து, ‘என்னை நீ அவமதித்து விட்டாய்…. இடையன் போட்ட கம்பளிக்கு கொடுத்த மரியாதையை, நான் வழங்கிய பரிசுகளுக்கு கொடுக்கவில்லையே… அந்த ஓட்டை கம்பளி உனக்கு பெரிதாக போய் விட்டதா…’ என்று கேட்டான்.
‘அரசே… அந்த கம்பளி கொடுத்தவர், எதை பார்த்து ரசித்தார், தெரியுமா?’ என்றான் வித்தைக்காரன்.
‘நீ மாடு மாதிரி நடந்ததையும், காதை ஆட்டினதையும் பார்த்திருப்பான்; அவனுக்கு மாடு தானே தெரியும்…’ என்றான் அரசன்.
வித்தைக்காரன் நிதானமாக, ‘அரசே… அவர் என் நடிப்பில் ஒரு நுட்பத்தை கண்டு மகிழ்ந்தார். நான் மாடாக நடித்த போது, ஒரு சிறு பருக்கை கல்லை எடுத்து, என் மேல் போட்டார். அந்த இடத்தை மட்டும், நான் சுழித்துக் காட்டினேன். அதன் அருமையை உணர்ந்து, அந்த கம்பளியை அளித்தார். ஓட்டம் அறிந்து வழங்கியதால், அதை பெரிதாக கருதுகிறேன்…’ என்றான்.
Source….www.dinamalar.com
Natarajan