
விளையாட்டுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தனது வெற்றிகள் மூலம் நிரூபித்துவருகிறார் எழுபது வயது லட்சுமி லோகநாதன். கோவையைச் சேர்ந்த இவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துவருகிறார்.
உள்ளூர் முதல் ஒலிம்பிக் வரை
கோவை ஹோப் காலேஜ் ஸ்ரீநகரில் இருக்கும் லட்சுமியின் வீடு முழுக்க பதக்கங்களும் கோப்பைகளும் நிரம்பிவழிகின்றன. மூத்தோர் தடகளப் போட்டிகளில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், போல்வால்ட் ஆகிய விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் அங்கே லட்சுமியைப் பார்க்கலாம். பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் பதக்கங்கள் வெல்வது இவரது சிறப்பு.
கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இவரது இந்தத் தடகளப் பயணம். கடந்த 13 ஆண்டுகளில் மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 83 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை நடந்த ஆறு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தொடர்ச்சியாக 16 பதக்கங்களை வென்றுள்ளார். இதில், ஆறு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளிப் பதக்கங்களும், ஏழு வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். இதைவிட கூடுதல் சிறப்பாக, 2009-ம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற உலக மூத்தோர் ஒலிம்பிக் போட்டியில் கழியூன்றித் தாண்டுதல் (போல்வால்ட்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பயிற்சிக்காக தினமும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிவிடும் லட்சுமி, இத்தனை வெற்றிக்கும் முக்கியமான காரணம் தனது கணவர் லோகநாதன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
துணை நிற்கும் துணை
“கோவை வெள்ளலூர்தான் சொந்த ஊர். திருமணத்தின்போது பி.யு.சி. வரை மட்டுமே படித்திருந்தேன். அது 1965 காலகட்டம். திருமணம் முடிந்ததும் என்னை வீட்டிலேயே முடக்கிவிட எனது கணவர் விரும்பவில்லை. எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததை அறிந்துகொண்ட அவர், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி வகுப்பில் என்னைச் சேர்த்தார்.
அதை முடித்தவுடன் சில ஆண்டுகளில் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணி கிடைத்தது. பணிக் காலத்தில் தடகளப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளேன்” என்று சொல்லும் லட்சுமி, கடந்த 2001-ம் ஆண்டு விருப்ப ஓய்வில் பணியை விட்டு விலகினார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தார். இவரது கணவர் லோகநாதனும் ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.
“வீட்ல சும்மா இருப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள், பதக்கம்கூட முக்கியமில்லை என்று சொல்லி என்னை அவர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்று ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றேன். அதுதான் எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியைத் தொடர்ந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றேன். பின்னர், தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக 2004-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய போட்டிக்குள் நுழைந்தேன்” என்று சொல்கிறார் லட்சுமி லோகநாதன்.
யோகா பயிற்சியில் பெரும்பாலான ஆசனங்களையும் எளிதாகச் செய்யும் இவர், சமையலிலும் கலக்குகிறார். ஆறு ஆண்டுகளாக முயற்சித்து, கடந்த டிசம்பர் மாதம் உடற்கல்வி மற்றும் யோகா பயிற்சி என்ற பாடப்பிரிவில் பி.எச்டி. முடித்துள்ளார். எம்.ஏ., எம்.பி.எட்., பி.எட்., எம்.ஃபில்., பி.எச்டி., என இவரது கல்வித் தகுதி நீள்கிறது. பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்படுவதற்கு நேர மேலாண்மையே கைகொடுக்கிறது என்கிறார் லட்சுமி.
சாதனைகள் சாத்தியமே
இத்தனை உயரத்தை இவர் மிக எளிதில் எட்டிப்பிடித்துவிடவில்லை. மூத்தோர் தடகளப் பிரிவில் 2011-ம் ஆண்டு சண்டீகரில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓர் ஆண்டுவரை நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. விளையாட்டுக்கு முழுக்குப் போட்டுவிடுமாறு மருத்துவர்கள் எச்சரித்த பிறகும் தன்னம்பிக்கையைத் தளரவிடவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஆகும் செலவுதான் பெரிய இடையூறாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“போக்குவரத்துச் செலவை நாங்கள்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். போட்டியில் பதக்கம் வென்றால் மட்டும் அரசு சார்பில் 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினால் குறைந்தபட்சம் 2 லட்சம்வரை ஆகிறது. இதைவிட, அந்த நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலை எங்களை வாட்டி வதைத்துவிடும். பின்லாந்து உலகப் போட்டியில் கலந்து கொண்டபோது அங்கு 6 மாதம் தொடர்ச்சியாக, பகல் மட்டுமே இருந்த காலம்.
அந்த சீதோஷ்ண நிலையை 20 நாட்கள் எதிர்கொள்வதற்கு எனது தள்ளாத வயதில் மிகவும் சிரமப்பட்டேன்” என்று வெளிநாட்டுப் பயணம் சார்ந்த தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் லட்சுமிக்கு சைவ உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதாம்.
“எத்தனை கஷ்டம் இருந்தாலும் பதக்கம் வெல்கிற அந்த நொடி, அத்தனை துயரங்களையும் மறக்கடித்துவிடுகிறது” என்று கை உயர்த்திப் புன்னகைக்கிறார் லட்சுமி.
Source…..ம. சரவணன் in http://www.tamil.thehindu.com
Natarajan