பண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.
திருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவனாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..?’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.
இந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.
இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை கொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.
ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
காலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.
எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.
Source…….www.dinamani.com
Natarajan
