வாழ்க்கைப் பயணம்
அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்… நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!” என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
உடனே ராக்ஃபெல்லர், ”விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக… இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?” என்று கேட்டார்.
”பெரும் விபத்து நேருமே!”- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.
இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ”வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, ‘உயரத்தைத் தொட்டு விட்டோமே…’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!” என்று விளக்கம் அளித்தார்.