” இருப்பவல் திருப்புகழ் …”

Thanigesan
‘இருப்பவல் திருப்புகழ்’ என்று துவங்குகிறது திருத்தணித் திருப்புகழ்ப் பாடலொன்று. திருப்புகழ் கையிருப்பிலே உள்ள அவலைப் போன்றது. பண்டைய காலத்தில் பிரயாணத்தின் போது அவல் எடுத்துக் கொண்டு போவது வழக்கம். சுடுநீரில் ஊற வைத்து கழுவி உப்பு அல்லது சர்க்கரை இட்டுச் சாப்பிடலாம்; வெல்லப் பொடி கலந்து அல்லது எலுமிச்சை பிழிந்து சாப்பிடலாம். கி.வா.ஜ அவர்கள் கூறும் விளக்கவுரை மிக அருமையானது. “காலன் ஊருக்குச் செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் அது; அருணகிரிநாதர் கந்தனுக்கு ஒரு வகை அவல் கொடுத்தார்; குசேலர் அளித்தது நெல் அவல், அருணகிரியார் அளித்தது சொல் அவல்!” [‘பெரும் பெயர் முருகன்’]

இரும்பு அவல் திருப்புகழ் என்று கூறுவாருண்டு. அது திருப்புகழின் பெரு வலிமையைக் காட்டுவது. அவல் போல உண்ணலாம்; இரும்பு போல மனோ திடம் பெறலாம். “அந்தகா வந்து பார் சற்று என் கைக்கெட்டவே” என யமனையும் அறைகூவி அழைக்கும் திறத்தையும் பெறலாம் என்பது திரு வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்களது கருத்து.

இருப்பவல் திருப்புகழ் பற்றி ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அமிர்தவசனி ஆன்மீக இதழில், வெளியான ஒரு குறிப்பு சற்று விநோதமாக இருந்தது. அது கீழே தரப்படுகிறது.

“இருப்பவல் என்பது பாம்பு போல் கொடி வளைந்து படர்ந்திருக்கும். வேரொடு பிடுங்கினால் அடியில் கிழங்கு பெரிதாக இருக்கும். அக் கிழங்கை நிழலில் உணர்த்தி, சூரணம் செய்து ஒரு மண்டலம் வரை உட்கொண்டால் 300 வயது வரை பலம் பெற்றிருக்கலாம். என்றும் உண்பவர் அளவில்லாத காலம் வாழலாம். அது மட்டுமல்ல, அக்கிழங்கு ஈரமாக இருக்கும் போதே இடித்துச் சாறு எடுத்து அதனில் பாதரசத்தை இட்டு உறவாக்கி குகையில் வைத்து உருக்கிக் குளிகை செய்து கட்டிக் கொண்டால் நினைத்தது யாவும் நிறைவேறும். ஆயுள் அளிக்கும், நினைத்தவை அளிக்கும் அருமை உடைய இந்த இருப்பவலைப் போன்றது திருப்புகழ் என்று அருணகிரியார் தணிகைத் திருப்புகழில் அறிவிக்கும் அருமையை நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது. இருப்பவலால் உடல் உரமெய்தி விடும்; திருப்புகழால் உயிர்க்கு உறுதி கிட்டும். இவ்விரண்டினுடனும் உறவு பூண்டால் என்றும் இறையருள் எய்தி இருக்கலாம் என்று அத்திருப்புகழுக்கு உரை காண்பது உயர்ந்த நிலை என்று ஊகிக்கிறது நமது மனம்.”

[‘சித்தர்கள் சிறப்பு’ – கருவூர்ச் சித்தர் சொல்லும் கற்ப முறை: உரை= குகஸ்ரீ ரசபதி அவர்கள்.
செய்தி- அமிர்தவசனி- ஆன்மீக இதழ்]
பாடல் முழுவதும் படித்து மகிழுங்கள்:-

 இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு …… மெனவோதும்

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய …… கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத …… லறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் …… விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த …… மதவேளைக்

கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் …… கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் …… தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு …… பெருமாளே.  

source:::: Murugan Bhakthi  …
சித்ரா மூர்த்தி,
சென்னை.

Natarajan

Leave a comment