“ஒரு பவுன் காசு கிடைக்குமா ?”..கேட்டார் மகாபெரியவர் !!!!

கோயில் பிரசாதத்தை பெரியவாளுக்குக் கொடுத்தார், பங்காரு காமாட்சி ஸ்தானீகர். ஸ்ரீ வித்யா உபாசகர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செய்ய பவுன் தரவிழைந்தார் பெரியவா. ஆனால் அவர் வந்த சமயத்தில் பெரியவாளிடம் பவுன் எதுவுமில்லை.

பெரியவா பழைய நினைவுக் காட்சிகளை அங்கிருந்தவர்களிடம் சொன்னார். “எனக்குப் பட்டத்துக்கு வந்ததும் முதலில் பரிவட்டம் கட்டினது தஞ்சாவூர் பங்காரு காமாட்சிதான். அவளுக்கு பூஜை பண்ணுபவருக்கு முக்கியமாக பவுன் ஒன்று தரணுமே!” என்று முடிப்பதற்குள் அங்கிருந்த பெண்மணிகள் தங்கள் நகைகளைக் கழற்ற ஆரம்பித்தனர். பெரியவாளோ, “எனக்கு நகை வேண்டாம்; ஒரு பவுன் நாணயம்தான் வேணும்!” என்று அவற்றை வாங்க மறுத்து விடுகிறார்.

நேரம் ஆக ஆக “உனக்கு ஒரு பவுன் கொடுக்க முடியாது போல இருக்கே..” என்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். வந்தவரோ, “எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நினைப்பதே போதும். தங்கள் அனுக்கிரகம் மட்டும்தான் வேணும்” என்று சமாதானப்படுத்துகிறார். அவருக்கு உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். உத்தரவு கிடைக்கவில்லை. பவுன் கொடுக்காமல் அனுப்ப ஸ்வாமிகளுக்கு மனமில்லை.

பகல் கடந்த பின் திருச்சியிலிருந்து ஒரு தம்பதி வந்தனர். அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. பெரியவா அனுக்கிரகத்துக்காக வந்தார்கள். பெரியவாளுக்கு முன்னால் ஒரு திருமாங்கல்யத்தையும் ஒரு பவுனையும் எடுத்து வைத்தார்கள்.

எங்களுக்கு ஒரு பிரச்னை, பெரியவா அதைத் தீர்க்கணும். தீர்க்க சுமங்கலியாக இருந்த என் அம்மாவுடையது இந்த மாங்கல்யம். சஷ்டியப்த பூர்த்தியில் இதைத்தான் என் மனைவிக்குக் கட்ட வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் சிலர் “அது தவறு. புதிதாகத்தான் செய்து போடவேண்டும்” என்கிறார்கள். அதனால் ஒரு பவுன் வாங்கினேன். பெரியவா எதைத் தொட்டு ஆசிர்வாதித்துக் கொடுக்கிறேளோ அதையே பயன்படுத்தப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். பெரியவா, “உங்க அம்மா திருமாங்கல்யத்தையே கட்டிவிடு, க்ஷேமமாக இருப்பீர்கள்” என்று ஆசி கூறினார். இதையே எதிர்பார்த்தவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

பிரசாதத்துடன் திருமாங்கல்யத்தைத் தம்பதியிடம் கொடுத்த பெரியவா, “இந்தப் பவுனை நான் வைத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டார். அதனைப் பெரிய பாக்கியமாகக் கருதி
ஆனந்தமாக அவர் காலடியில் அர்ப்பணித்து நின்றார்கள் திருச்சி தம்பதியினர். பெரியவாளும் அகமகிழ்ந்து அந்தப் பவுனைத் தர வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டு அவரையும் வந்தவர்கள் காரிலேயே அனுப்பி வைத்தார்.

அவர் மனம் வைத்துவிட்டால் அந்தக் காரியம் நிறைவேறாமல் விடமாட்டார். சந்தர்ப்பங்கள் தானாகவே வந்து சேரும்.

இப்படி அனுக்கிரகம் பண்ணுவதற்கு வந்தவர், வராதவர்; தெரிந்தவர், தெரியாதவர், வைதவர், வாழ்த்தினவர், கேட்டவர், கேட்காதவர், ஏழை-பணக்காரர் என்று எந்தப் பாகுபாட்டையும் அவரிடம் காண முடியாது. அருளையோ, பொருளையோ அள்ளி அளிப்பது ஒன்றுதான் அவருடைய கோட்பாடு.

“சதாசிவ அனுக்கிரஹதா..” என்று வருணிக்கப்படும் அம்பாள் ஸ்வரூபமே அவரல்லாவா?

– எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து….

Read more: http://periva.proboards.com/thread/630/gold-coin#ixzz2Tcd1Jbzn

source::::periva.proboards.com

Natarajan

மகாபெரியவர் படிப்பிலே “மக்கு ” இல்லையே !!!!!!

பெரியவா
படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ  !!!illaiye

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.

Natarajan

மாமுனிவர் குறிப்பிட்ட ” தர்பார் ” !!!!

காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு.

ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர்.விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம், “”இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,” என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

“”பெரியவர் “தர்பார் அலங்காரம்’ என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!” என்று குழப்பமடைந்தார்.

அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், “”லோசனா.. கமல லோசனா” என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

“”அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!” என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, “”அது சரி…தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்.

-“நீலக்கல்’ ராமச்சந்திர சாஸ்திரிகள்

Read more: http://periva.proboards.com/thread/3931/darbar-ragam/#ixzz2SUoR6Kat

Natarajan

காஞ்சி சுவாமி ….கஞ்சி சுவாமி. !!!…காஞ்சி பெரியவரின் சிலேடை !!!!

காஞ்சிபுரத்தில் வேத பாஷ்ய பரிட்சை நடந்தது.ஏராளமான பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நாள்களில்,ஸ்ரீ மடத்தில் டீ,காபி கொடுக்கும் வழக்கம் இல்லை.வித்வான்களுக்கு மோர்க் கஞ்சி,பால் கஞ்சிதான் கொடுப்பது வழக்கம்.

ஒரு பக்தர்,வித்வான்களுக்கு கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் எல்லாரும் கஞ்சிக்காக நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்வான் கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்த நபரைப் பார்த்து,[தனக்கு உடனே கொடுக்க வேண்டும் என்பதற்காக] ‘கஞ்சி ஸ்வாமி….கஞ்சி ஸ்வாமி”என்று உரத்த குரலில் அழைத்துக் கொண்டிருந்தார். [கஞ்சி கொடுங்கோ ஸார் என்பதைப் போல கஞ்சி ஸ்வாமி!]

சற்றுத் தொலைவில் உட்கார்ந்தபடி ஸ்ரீ பெரியவாள் இதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் பார்த்து, ஒரு வித்வான் [கஞ்சி கேட்டவரின் குரலைக் கேட்டு] பரபரப்புடன்,”கஞ்சி ஸ்வாமிகள் எக்கட உன்னாரு?” என்று[பெரியவாள் தரிசனத்துக்காக] ஆவலுடன் கேட்டார்.

இரண்டையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவாள் மெல்லச் சிரித்தபடியே……

“தெலுங்கில்தான் ‘கஞ்சி ஸ்வாமி’யாக நான் இருந்தேன். இப்போது தமிழிலும் ‘கஞ்சி’ ஸ்வாமியாக [கஞ்சி கொடுக்கும் நபர்] ஆகிவிட்டேன்.ரொம்பப் பொருத்தம்” என்று கூறி, பொருள் சிலம்பம் செய்தார்கள்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4050/kanchi-swami/#ixzz2SPk8wxzw

கனவில் வந்த மாமுனிவர் !!!!

கனவில் வந்த மெய்யர்!
எழுதியவர் : ஜானா கண்ணன், மைலாப்பூர், சென்னை.
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரியவாளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருந்தேனே தவிர, விசேஷமான பக்தி என்று எதுவும் இல்லாத காலம்.

திடீரென்று தரிசனம் கொடுத்தார்கள் – கனவில்! ‘ஏதோ, பிரமை’ என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்தார்கள்.
இந்தப் புனிதக் கனவுகளுக்கு ஒரு கௌரவம் கொடுக்க வேண்டாமா?

குருவார விரதம் மேற்கொண்டேன். அது முதல் ஒவ்வொரு வியாழனிலும் தரிசனம் கிடைக்க ஆரம்பித்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
பெரியவா வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?

அன்று வியாழக்கிழமை. படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறேன். ‘இன்றைக்காவது தரிசனம் கொடுக்கணும்’.
ஊஹூம்… பெரியவாள் வரவில்லை.

ரொம்பவும் ஏக்கமாகத்தான் இருந்தது. என் பிரார்த்தனையை ஏன் பெரியவாள் ஏற்றுக் கொள்ளவில்லை?

இரண்டு நாட்கள் கழித்து சொப்பனத்தில் காட்சி தந்தார்கள். “பெரியவாள் தரிசனம் முன்பெல்லாம் அடிக்கடி கிடைச்சுது. இப்போ பெரியவா வரதே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினேன்.

பெரியவாள் மெல்லச் சிரித்தார்கள். “எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”.

“பெரியவா அனுக்ரஹம் இருந்தால் வருவேன்.”

“உத்ஸவத்துக்கு வரயா?”

“அனுக்ரஹம் செய்தால் வருவேன்”.

கனவு கலைந்தது. ஒன்றும் விளங்கவில்லை. எந்த உற்சவத்துக்கு வரவேண்டும்? அதற்கும் பெரியவாள் தரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?

மறுநாளே அந்த ஆச்சரியம் நடந்தது.

சென்னையில் ஒரு கல்யாணத்துக்கு என் பெரியம்மா போக வேண்டியிருந்தது. “துணைக்கு நீ வாயேன். நீ வந்தால்,, போகிற வழியில், காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாம்.”

அடுத்த நிமிடமே நான் தயாராகிவிட்டேன்!

மறுநாள் காலை நாங்கள் காஞ்சிபுரம் மடத்து வாசலுக்குச் சென்றபோது, அங்கே காமாக்ஷி வந்து நின்றுகொண்டிருந்தாள். ஏகக் கூட்டம். மூன்று பெரியவர்களும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசேஷம் இன்னிக்கு” என்று உள்ளூர்ப் பெண்மணியைக் கேட்டேன்.

“தெரியாதா உனக்கு? காமாக்ஷி கோயில் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கு”.

எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. “உத்ஸ்வத்துக்கு வரயா?” – வெறும் கனவு அல்ல; தெய்வ சங்கல்பம்!

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4226/mere-dream-divine-decision/#ixzz2SIoEgk8g