கூந்தலூர் குமர குருபரன் …சனி பகவானிடம் இருந்து நம்மை காக்கும் கடவுள் ….

கூந்தலூர் குமரகுருபரன்
b113d-shankarimurugavan
குன்று தோறாடும் குமரன் தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கூந்தலூரில் வள்ளி, தெய்வயானையுடன் குமரகுருபரனாக, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக கோவில் கொண்டுள்ளான். கூந்தலூர் ஆனந்தவல்லி உடனுறை ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற வைப்புத் தலமாக இருந்தாலும் .முருகன் ஆலயமாகவே புகழ் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை “தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை” என்ற திருப்புகழால் சிறப்பித்துள்ளார்.இந்த ஆலயம் 1600 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் முருகப் பெருமான் தேவமயிலுடன் ஈசான்ய பாகத்தில் எழுந்தருளியுள்ளது தனிச் சிறப்பாகும். மேலும் தன்னை வணங்கி நிற்கும் சனி பகவானுக்கு எதிரில் முருகப் பெருமான் கோயில் கொண்டு அருள் செய்வது வேறு எங்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.

“நாள் என் செயும், வினைதான் என் செயும்,
எனை நாடி வந்த கோள் என் செயும்,
கொடும் கூற்று என் செயும், குமரேசர் இரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும், தோளும்,
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
ரோம ரிஷி

என்று அருணகிரிநாதர் அருளியபடி, கர்ம வினைப்பயனாக நமக்கு சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கூந்தலூர் குமரகுருபரன் நம்மைக் காக்கிறார்.திருக்கூந்தலூரில் உரோம மகரிஷி பல ஆண்டுகள் தவம் இயற்றி இத்தலத்து சிவனை வழிபட்டு வந்தார். இப்பகுதியில் உள்ள மக்களின் வறுமை நீங்க தன் தாடியிலிருந்து பொன் வரவழைத்து அளித்து வந்தார். ஒரு நாள் சிவன் திருவிளையாடலால் தாடியிலிருந்து பொன் வரவழைக்க முடியவில்லை.இதனால் மனம் வருந்திய சித்தர் தன் தாடியை நீக்கிவிட்டு நீராட மறந்து ஈசனை வணங்க ஆலயம் சென்றடைந்தார்.

  ரோம ரிஷி
நீராடாமல் ஆலயம் புகத்துணிந்த சித்தரை விநாயகரும், குமரப் பெருமானும் தடுத்து நிறுத்தியதாகவும், புறத்தூமையை விட அகத்தூய்மையே சிறந்தது என்ற உண்மையை நிலைநாட்ட, பிறகு சிவனே ஆலயத்துக்கு வெளியே வந்து காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒரு சனி,செவ்வாய் பரிகார ஸ்தலமாக விள்ங்குகிறது.இவ்வாலயம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இனி இத்தலத்துத் திருப்புகழையும் அதன் பொருளையும் காண்போம்.

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன …… தனதான

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை …… மிகுகேள்வி

மண்ணுலகில் பல (தீய) வழிகளிலும் போய் கெடுகின்ற அறிவில்லாதவனை, குடி வெறி கொண்டவன் போன்ற பித்தனை, நீதி, பொறுமை முதலிய நற்குணங்களை விரும்பாத (மத) செருக்குக் கொண்ட அறிவிலாப் பொருள் போன்றவனை, ஒரு மகிமையும் இல்லாத தாழ் நிலையில் இருக்கும் வீணனை, மிகுந்த நல்ல கேள்வியையும்

தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய …… தமியேனை

தவநெறியையும் விட்டுக் கண்ட வழியில் திரிபவனை, கெட்ட புத்தியால் கேடு, தீமை செய்கின்ற குணங்கெட்டவனை, மிக ஒழுங்கீனமுடைய துணையற்றவனை,

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய …… வினையேனை

நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவர், பிடிவாதமுள்ள மாதர், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தை எழுப்பும் காம மயக்கிகள், கண் என்னும் வலையை வீசும் மகளிர்- இத்தகையோருடன் அவ்வச் சமயங்களில் கூடிய தொழில் உடையவனாகிய தீவினை மிகுந்தவனை,

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ …… அருள்வாயே

நிரம்ப மலர் கொண்டு விரும்பிப் பூசித்தாகிலும், அல்லது ஒரு பூவோ ஒரு இலையோ கொண்டாகிலும், உன்னை நினைந்து, நல்ல வகையான அன்புடன் கீழே வீழ்ந்து உனது திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக.

ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் …… மருகோனே

பத்துத் தலைகளுடன் போருக்கு வந்த ராவணன், இருபது கரங்களுடன் ஏந்தின வாளானது, ஒரே பாணத்தால் அற்று விழும்படி (பாணத்தைச்) செலுத்தின திருமாலின் மருகனே!

உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி …… லுறைவோனே

உன்னுடைய அடியார்களும், உனது திருப்புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முனிவர்களும், கொடையால் ரக்ஷிப்போர்களும் உயர்ந்த நற்கதியைப் பெற அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே!

குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ …… முனிவோனே

ஒலிக்கின்ற கழல் அணிந்த உனது திருவடியை தாழ்மையுடன் கும்பிடாதவர்களும், சண்டை செய்யும் போர்க்களத்தே தரும நெறியைக் கை விட்டவர்களுமான சூராதி அவுணர்களது குல முழுமையும் மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே!

கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை …… பெருமாளே.

கொடிய விடத்தைக் ‘கொடு’ என வாங்கி, அழகிய கழுத்தினில் இரு என்று அதை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்கவைத்த சிவபெருமானுக்குக் குருமூர்த்தி என வந்து கூந்தலூரில் குடி கொண்டுள்ள பெருமாளே!

[பொருள் ஆதாரம்- திரு செங்கல்வராயப் பிள்ளை, திரு முருக கிருபானந்த வாரியார்]
மாலதி ஜெயராமன்,
குடந்தை.

SOURCE:::: http://www.muruganbhakathi.org

Natarajan

Jan 24 2015

Leave a comment