நான்கு நாள்களாக கழுத்தளவு வெள்ளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கால்களில் சேற்றுப் புண்களுடனும், கண்களில் கெஞ்சும் தூக்கத்துடனும், புரசைவாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவாபாரதி தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் ஜீவானந்தம், “ஸ்வயம் சேவக்’ எனப்படும் லட்சக்கணக்காண ஆர்.எஸ்.எஸ்-ஸின் தன்னார்வலர்களில் ஒருவர்.
“சில மணிநேரமாவது தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமே…?’ என அவரைப் பார்த்துப் பரிவுடன் கேட்கிறார் அந்த அமைப்பின் மருத்துவ உதவி ஒருங்கிணைப்பாளர் கே.சீனிவாசன். தான் அணிந்திருக்கும் சட்டையில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டி, “சேவை மூலமாக பண்பாடு, அதன் மூலமாக சமத்துவம். அதற்குப் பிறகுதான் தூக்கம். எனது சகோதர, சகோதரிகள் பேரழிவில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, என்னால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும்?’ – அமைதியாகக் கேட்கிறார் ஜீவானந்தம்.
ஆர்.எஸ்.எஸ். என்றால் மதத் தீவிரவாத அமைப்பாகத்தான் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், இரவு பகலாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள், சேவைகளைத் தொடர்கிறார்கள்.
“காவித் தீவிரவாதிகள் என்றார்கள், கொடியவர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள்தான் வெள்ளத்திலிருந்து என்னை மீட்டார்கள்’ – சொல்லும்போதே மன்சூரா பேகத்துக்கு குரல் தழுதழுக்கிறது. “அம்மா, உதவி செய்யும் வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கையெடுத்து வணங்குகிறார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பசுபதி.
நாங்கள் விளம்பரத்தை நாடி ஓடுவதில்லை. ஏதாவது ஒரு பத்திரிகையிலாவது எங்கள் மீட்புப் பணிகள் சம்பந்தமான தகவல்கள் இடம் பெற்றனவா…?’ – கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எனப்படும் முழுநேர ஊழியர் முருகன்.

ராம.ராஜசேகர் – ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில “சேவா பிரமுக்’. அந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சேவைப் பணிகளுக்கு இவர்தான் ஒருங்கிணைப்பாளர். “கடந்த மாதத்தில் மட்டுமே சென்னையில் மூன்று முறை பலத்த மழை பெய்தது. முதல் மழை பெய்தபோதே நிவாரணப் பணிகளை ஆரம்பித்து விட்டோம். டிசம்பர் மாதம் முதல் தேதி கனமழை, வெள்ள அபாயம் என சேதி வந்தபோது சேலத்தில் இருந்தேன். அன்றிரவே, ரயிலைப் பிடித்து, சென்னை வந்தேன். என்றாலும், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், நான் வருவதற்கு முன்னதாகவே குறைந்தபட்சம் நூறு இடங்களில் எங்கள் தொண்டர்கள் மீட்புப் பணிகளை ஆரம்பித்து விட்டனர். சக மனிதர்கள் பாதிக்கப்படுவதை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல், தாங்களாகவே பணிகளை ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் எங்கள் இயக்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்று பெருமையாகச் சொல்கிறார் ராம.ராஜசேகர்.
வில்லிவாக்கத்தில் தள்ளுவண்டிகளை வைத்துக் கொண்டு மார்பளவு வெள்ளத்தில் நின்றவாறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். வடபழனியில், இரண்டு டிரம்களை கயிற்றின் மூலமாக இணைத்து மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். வளசரவாக்கத்தில், லாரி டயர்களைக் கொண்டு மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் மக்களை வெள்ளத்திலிருந்து இவர்கள் மீட்டுள்ளனர் என்பது வெளியே தெரியவராத தகவல்.
புரசைவாக்கத்தில் முதல் மையத்தை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2-ஆம் தேதி ஆரம்பித்தோம். அதற்கு முன்னதாகவே, சென்னையின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறு மையங்களை அமைத்து விட்டனர். குரோம்பேட்டை, மணலி, வில்லிவாக்கம், கே.கே.நகர் என 17 இடங்களில் சேவா மையங்களை அமைத்துள்ளோம். அவற்றின் கீழ் பல துணை சேவை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சேவா மையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குச் சொந்தமான பள்ளிகள், ஆதரவாளர்களின் மண்டபங்கள், வீடுகள் எல்லாமே ஏதோ வகையில் சேவா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படியாக சென்னையில் மட்டுமே 83 இடங்களில் சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை, இந்த மையங்களில் உள்ளவர்கள் புரசைவாக்கத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்’ என்கிறார் ராம.ராஜசேகர்.
ஓட்டேரியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் தெருவில் மார்பளவு வெள்ளத்தில் மிதந்தபடி சென்று வீடு வீடாக உணவு கொடுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். மாடியில் இருந்து இறங்கிவரும் ஒரு மூதாட்டி, “வெள்ளத்திலும் வீடு தேடி வந்து உணவு கொடுக்கும் நீங்கள் நல்லா இருக்கோணும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.
வில்லிவாக்கம், சிட்கோ நகரில் தள்ளுவண்டியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடம் தனது மனைவி, குழந்தைகளைக் கொடுத்து “இவர்களை பத்திரமாக மீட்டுத் தாருங்கள். நான் அடுத்த படகில் வருகிறேன்’ என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறுகிறார்.
மீட்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு கிடைப்பதையும் இவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 50 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முகாமிலும், ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள். சேற்றுப் புண்ணுக்கான மருந்தில் இருந்து, பிளீச்சிங் பவுடர் வரைக்கும், குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் இருந்து பெண்களுக்குத் தேவையான பிரத்யேக பொருள்கள் வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மருத்துவ முகாம்களில் கிடைக்கின்றன. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள் தாங்களாக முன்வந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதையும், நூற்றுக் கணக்கான மக்கள் முகாமுக்கு வந்து மருந்துகளை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.
சைதாப்பேட்டையில் இருக்கிறது செட்டித் தோட்டம் என்ற எளியவர்கள் வாழும் பிரதேசம். இயற்கையின் சீற்றத்தில் சிக்கிச் சின்னாபின்னமான இப்பகுதியில் நுழைபவர்களைக் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம்தான் வரவேற்கிறது. அங்கே, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 அடித்தட்டு மக்கள் வாழும் இங்கே, முழு நேர மீட்புப் பணிகளையும், துப்புரவுப் பணிகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள்.
“ஏழைகளின் பாதையில் குறுக்கிடும் எல்லாவற்றையும் களைவதுதான் எமது நோக்கம்’ எனச் சிரித்தவாறு சொல்கிறார் ரவூப். இவர் பெங்களூரில், பிரபல மென்பொருள் நிறுவனமொன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவரின் நண்பர் வசீம் அக்ரம், பல் மருத்துவர். இவர்கள் அனைவருமே, எந்த விதமான முகச்சுளிப்பும் இல்லாமல், குடலைப் புரட்டும் துர்நாற்றத்துக்குள்ளும் இறங்கி “தனி ஒருவ’னாக வேலை பார்க்கிறார்கள். வெள்ளம் அடித்துவிட்டுச் சென்ற குப்பைக் கூளங்களை, தொழில் முறை வழக்குரைஞரான முகமது யூசுப், தனது கைகளால் அள்ளிச் சுத்தம் செய்கிறார்.
“எமது சக மனிதர்கள் துன்பப்படும்போது எப்படித்தான் வாய்மூடி மௌனியாகப் பார்த்துக் கொண்டிருப்பது?’ எனக் கேட்டு அமைதியாகப் புன்னகைக்கிறார் ஹாஜா கனி, த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர். வரலாறுகாணாத இந்த வெள்ளத்தில் த.மு.மு.க.வினர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
கடந்த மாதம் 15-ஆம் தேதி, முதல் கட்ட மழை தொடங்கியபோதே த.மு.மு.க. மாணவர் அணியினர் களத்தில் இறங்கி எந்தெந்த இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்பதை சர்வே எடுத்து அதை அறிக்கையாகத் தயார்செய்து, தாம்பரம் நகராட்சியிடம் கொடுத்ததுள்ளனர். 16-ஆம் தேதியன்றே சுமார் 30 பேர் வரைக்கும் பயணிக்கக் கூடிய படகொன்றை கோவளத்தில் இருந்து தருவித்து, இரவும் பகலுமாக ஓட்டி அன்று மட்டுமே சுமார் ஆயிரம் பேரை த.மு.மு.க. தொண்டர்கள் மீட்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல், இரவு பகலாக இவர்களின் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட முன் அனுபவங்களும், பயிற்சிகளும் இருந்ததால் இலகுவாக இயங்கக் கூடியதாக இருந்தது என்கிறார்கள் த.மு.மு.க. தொண்டர்கள்.
“முடிச்சூர் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்து முப்பதே நாளான பச்சிளம் குழந்தையுடன் ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வந்தன. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்தப் பகுதிக்கு சென்றோம். பெருமழை. மின்சாரம் இல்லாமல், அந்தப் பிரதேசமே கும்மிருட்டாக இருந்தது. கரண்ட் கம்பிகளைப் பிடித்து எம்மை சமநிலைப்படுத்தியவாறு சென்று அவர்களை மீட்டோம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகமும், அந்தத் தாயின் பரிதவிப்பும் இன்னும் கண்களில் நிற்கிறது. சக மனிதர்களுக்கு உதவுவதைத்தானே இஸ்லாம் போதிக்கிறது…’ – கண்களில் அமைதியுடன் பேசுகிறார் யாகூப்.
பெரியார் சமத்துவபுரம், முடிச்சூர் சாலை, கிஷ்கிந்தா ஆகிய பகுதிகளில் த.மு.மு.க.வினர் பெருமளவு மீட்புப் பணிகளை மேற்க்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களும், மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பாரபட்சமின்றி திறந்து விடப்பட்டன. சாதி, மத பேதமின்றி அனைவருமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் பகுதியில் மட்டுமே சுமார் 3,000 பேரை இவர்கள் மீட்டுள்ளனர் என்பது அதிசயிக்கவைக்கும் புள்ளி விபரம்தான்.
தாவூத் மியாகான். காயிதே மில்லத்தின் பேரன். இந்த வெள்ளக் காலத்தில் இவர் செய்தவை அளப்பரிய பணிகள்தான். மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியை மையமாக வைத்து இவர்கள் சுமார் 1,000 பேருக்கு உணவளித்து வருகிறனர். அந்தக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். கூடவே, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்களையும் வழங்கி வருகிறார்கள். பல இடங்களில் பிரதான வீதிகளில் மட்டுமே மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக செம்மஞ்சேரியின் உட்புறமாக, உணவில்லாமல், வெள்ளத்தில் தவித்த பல நூறு குடும்பங்களை மீட்டுள்ளனர். 2,500 லிட்டர் ஆரோ பிளாண்டை மக்களுக்காக திறந்துவிட்டு மக்களின் துயரைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரர்களால் மீட்டு வரப்பட்டு, தாம்பரம் பேபி பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பேருக்கு துறைமுகச்செல்வி என்பவர் மூன்று வேளையும் உணவு கொடுக்க முன்வந்தார். முஸ்லிம் அமைப்புகளுக்கும், துறைமுகச் செல்விக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ்.
சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜமியத் உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை 15,000 உணவுப் பொட்டலங்களும், வில்லிவாக்கம், திருநின்றவூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை 3,648 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இது தவிர 10,000 குடும்பங்களுக்கு போர்வை, பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் கொண்ட பெரிய பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நந்தனம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, முத்தமிழ் நகர், பொழிச்சலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,800 பைகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோட்டூர்புரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. புரசைவாக்கம் பெரிய மசூதியின் சார்பில் 30,000 உணவுப் பொட்டலங்களும், பாத்திரங்கள், ஆடைகள் கொண்ட பெரிய பைகள் 3,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இருக்கிறதா? என்பது தொடர்பாக நாம் நடத்திவரும் வீண் விவாதங்களுக்கான பதில் இந்தச் சம்பவங்களிலேயே ஒளிந்துள்ளது. இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?
Source……..By
Natarajan