கிரகதோஷம் போக்குபவர் :
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
விக்னேஷ் விளக்கம்:
“விக்னம்’ என்றால் “தடை’. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை “விக்னேஷ்’ என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். லலிதா சகஸ்ர நாமத்தில் “மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்ற நாமா வருகிறது.
அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள்.
தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.
ஐந்து ஐந்து ஐந்து :
இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் “பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டிருக்கிறார். அதனால், ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்:
பிடித்து வைத்தால் பிள்ளையார் குழந்தை முதல் முதியோர் வரை விநாயகரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் நமக்கு அருள்பாலிப்பார். இதைத்தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பர்.
மூஞ்சுறு வாகனம்:
யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்ப முடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.
கணேசினி:
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண் வடிவத்துடன் நிற்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சுவாமி சந்நிதி நுழைவு வாசலில், கணேசினியின் திருவுருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி எனப்படுகிறார்.
source ::::Dinamani …Tamil Daily
natarajan



