” இன்னும் என்ன இருக்கு …பசியைக் கிளறி விட்டாயே …” !!!

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.

அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். “கஜானா” சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. “ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?” என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. “நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, “அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு”ன்னார்” என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.

“கஜானா” மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் “கஜானா”விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.

“நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்” என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.

அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா “நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?” என்றார்.

“அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்” என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.

“சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?” என்றார் பெரியவா
“காத்துண்டு இருக்கேன்” என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
“அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!””அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு…..” கஜானா இழுத்தார்.

“அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா”
“சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்” என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது “சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு”
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.

“அதி”க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். “இவ்வளவுதானா?” என்று வேறு கேட்டார்.

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
“இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…………என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.

பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று “இன்னும் என்ன இருக்கு” என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.

“வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!” என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.

“பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?” என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்…

 

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/1207/fast-feast#ixzz2xFGBx7Gw

Message For the Day…” Spend some time Daily for Prayers…”

Just as you attend to the needs of the body regularly, feeding it three times a day to keep it in good running condition, so too spend some time regularly to keep your inner consciousness in good trim. Spend one hour in the morning, another at night and the third in the early hours of the dawn (the Brahma Muhurtha) for japam (contemplation) and meditation on the Lord. You will find great peace descending upon you and new sources of strength welling up within as you progress in this spiritual practice (Sadhana). After sometime, the mind will dwell on the Name, wherever you are and whatever you are engaged in. Peace and Joy will become your inseparable companions.

 

Sathya Sai Baba

 

” சாமி கும்பிடனும்னு நினைத்தாலே , சாமி கும்பிட்ட மாதிரி… ”

 

கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் .

பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.

“என்ன வேலை பண்றே?”

“வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி..”

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.

“சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!

“காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.

“நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் – சகல புண்யமும் கிடைச்சிடும்..”

பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். “சூரியனை கும்பிடு – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!” என்ன ஆறுதல்! என்ன கருணை!

பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக – மங்கயர்கரசியாக போனாள்.

பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!   

source:::::www.periva.proboards.com

natarajan

 

Read more: http://www.periva.proboards.com/thread/2749/worship-sun#ixzz2x93e4r1c

” குருவை வியக்க வைத்த குரு பக்தி …”!!!

மஹா பெரியவாளிடம் கைங்கரியம் செய்யும் பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர்.

“பேப்பர் – பேனா எடுத்துவந்து, நான் சொல்வதை எழுதிக்கொள்” என்று மகாகாவ் என்னும் இடத்தில் (குல்பர்கா அருகில்) முகாமிட்டிருந்தபோது, மஹான், ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.

மஹா பெரியவா தன் பதின்மூன்றாவது வயதில் பட்டத்துக்கு வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த பரமாச்சார்யாரிடம் கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினார்களாம். அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து, ‘இவர்தான் முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம் தோய்த்துக் கொடுத்தவர்” என்று பெரியவாளிடம் சொல்லிவிட்டு. அவர் பக்கம் திரும்பி, “இனிமேல் இவர்தான் நமக்குப் பெரியவா, உன்னோட வஸ்திர கைங்கரியத்தை தொடர்ந்து பண்ணு” என்று சொன்னார். ஆனால், அந்த அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக வந்தது. “நான் முந்தைய பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்த கைகளால் வேறு எவருக்கும் செய்ய இயலாது” என்றார்.

இது தவிர, இன்னொன்றையும் மகான் எழுதிக்கொள்ளச் சொன்னார். கலவையில் மகானின் முகாம். பண்ருட்டியில் இருந்து ரெட்டியார் ஒருவர் மடத்துக்கு நிறையக் காணிக்கை அனுப்பியிருந்தார். அத்துடன் தன் வணக்கத்தையும் பெரியவாளுக்குச் சொல்லச் சொல்லி இருந்தார்.

“அவர் ஏன் நேரில் வரவில்லை ?” மகான் கேட்டார்.

அதற்கு காணிக்கை கொண்டுவந்தவர் சொன்ன பதில், “66-வது பீடாதிபதியான குருவை தரிசனம் செய்த கண்களால், அவருக்குப் பின்னர் வரும் குருவைத் தரிசிக்க மனம் ஒப்பவில்லை என்று ரெட்டியார் சொல்வார்”.

இந்த இருவரின் குருபக்தியையும் மெச்சி, இது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றுதான் ஏகாம்பரத்திடம் சொல்லி எழுதவைத்தார். இதை இப்படியே ரேடியோவில் சொல்லும்படி ஏற்பாடுசெய்” என்று பெரியவா சொன்னார்.

ஆனால், குல்பர்காவில் இருந்து கொண்டு எதையோ சொல்லி, அது ரேடியோவில் வரவேண்டுமென்றால் எப்படி? எவ்வளவோ தடைகளைத் தாண்டியல்லவா இவற்றை ஒலிபரப்ப இயலும் ?

ஏகாம்பரம், “அது முடியாத காரியம் | “ என்று பெரியவாளுக்கு நிலைமையை விளக்கினார் !

“சரி, அதனால் என்ன, பத்திரிகைகளிலாவது வரட்டுமே ! அதற்கான ஏற்பாட்டைச் செய்யேன்” என்றார்.

“சரி” என்ற ஏகாம்பரம் ஓய்வெடுக்கப் போய்விட்டார். சற்று நேரத்துக்குள் ஏகாம்பரத்துக்கு அழைப்பு வந்தது. மகா பெரியவாளைப் பார்க்க ஒரு குழு வந்திருந்தது. அவர்களுக்காக்த்தான் ஏகாம்பரத்தை வரவழைத்திருந்தார் மகா பெரியவா.

“நான் காலையில் சொன்ன குருபக்தியை ஒலிபரப்ப முடியுமானு இவாளிடம் கேட்டுப் பாரேன் !”

குழுவில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்த ஏகாம்பரம் வியப்பினால் ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவர்கள் அனைவரும் அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டர்கள். ஒரு டிரெயிங்குக்காக வந்தவர்கள், மகான் இங்கு இருப்பதால் தரிசிக்க வந்திருக்கிறார்கள்.

மகானின் எண்ணப்படி, குருபக்தியில் சிறந்த இருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, “இதை ஒலிபரப்ப முடியுமா? “ என்று அவர்களிடம் கேட்டார் ஏகாம்பரம்.

“இது எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. உடனே அதற்கான ஏற்பாடு செய்கிறோம். இப்படி ஒரு நல்ல காரியத்துக்கு எங்களை உபயோகப்படுத்த மகான் நினைத்தது பெரும் பாக்கியம்“ என்று சொன்னவர்கள், அன்றே அதை ஒலிபரப்பவும் செய்தனர்.

பிரம்ம ஞானிகள் நினைத்தது நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா ?

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/3685/when-impossible#ixzz2x3evbLba

 

“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….”

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்ச்சி.

அன்று மஹானின் தரிசனம் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருந்தது. மெளன அஞ்சலிக்குப் பிறகு பிரசாதத்தைப் பெற்று போனவர்களும் தங்களின் குறைகளை ஓரிரு வார்த்தைகளால் சொல்லி ஆறுதல் பெற்றவர்களும் இருந்தார்கள்.

தொடரின் நடுவே ஒருவர் வந்து நின்றார். அவரை மஹான் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில்,
“உன் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ந்ல்லது செய்யறதாக நினைச்சுண்டு மேலே மேலே பாவ மூட்டையை அவா பேர்லே ஏத்திண்டு இருக்கே” என்றார்.

எதிரில் இருந்தவர் திடுக்கிட்டார். மனதறிந்து தாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே என்கிற எண்ணம் அவருக்கு….மஹானை ஏறிட்டுப் பார்த்தார்.

“பிராமணனா பிறந்தவர்கள் அன்னத்தை விலைக்கு விற்கப் படாதுன்னு சாஸ்திரத்திலே சொல்லியிருக்கே, அதை நீ படிச்சதில்லையா?”

அந்தப் பக்தர் ஓட்டல் நடத்துபவர். பிழைப்பிற்காக இதை பல வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். பக்தர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“சரி, அது உன் பிழைப்புக்காகன்னு வெச்சிண்டா கூட, அதுக்கு மேலேயும் வேறொரு பெரிய பாவத்தையும் பண்ணிண்டு இருக்கே…”

பக்தருக்கு உண்மையில் அது என்னவென்றே தெரியவில்லை. மஹானே தொடர்ந்தார்: “சேத்து வச்சிருக்க பணம் போதாதுன்னு, அதை வட்டிக்கு விட்டு அநியாயமா பணத்தை வசூல் செய்யறே. இது நீ அடுத்த தலைமுறைக்கு சேத்து வைக்கிற பாவம்” என்றார்.

தான் பணத்தை வட்டிக்கு விடுவது மஹானுக்கு எப்படித் தெரியும் என்கிற பிரமிப்பு நீங்கும் முன்னர் மஹான் சொன்னார்:

“நீ கேட்கிற அநியாய வட்டியைத் திருப்பிக் கொடுக்கும் போது வயிறெரிந்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் சபிக்க மாட்டார்களா?” அப்படி பல சம்பவங்கள் நடந்தது பக்தருக்குத் தெரியும்.

”இந்தப் பாவமூட்டை உன் சந்ததியின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளுமே. அதை எப்படி இறக்கப்போறே? இதுவரைக்கும் நீ சேத்து வச்ச பணம் போறாதா? எதுக்கு மேலே மேலே ஆசைப்பட்டு உன் சந்ததிக்கு பாவமூட்டையை சேர்த்து வைக்கறே?” மஹான் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த பக்தர் நெடுஞ்சாண்கிடையாக மஹானின் காலில் விழுந்தார்; கதறித் துடித்தார்.

“இனி நான் என்ன செய்யணும் சொல்லுங்கோ மஹாபிரபு!”

எழுந்தவரை ஆசீர்வதித்த பின்னர்,

“நீ இதுவரை சேர்த்த பணம் உன் தலைமுறைக்கும் போதும். முதல்லே நீ நடத்தற ஓட்டலை மூடி.. அன்னமுன்னு கேட்டு வர்றவாளுக்கு உன் ஆத்திலே சாப்பாடு போடு. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கறதையும் நிறுத்திடு”.

“அப்படியே ஆகட்டும்” என்று கை கூப்பினார் பக்தர்.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கே!”

“மஹா பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்”.

“இதுவரை நீ வாங்கின வட்டியை எல்லாம் கணக்குப் போடு. எவ்வளவு பணம் சேந்திருக்குன்னு பார். அதை மொத்தம் எடுத்துண்டு போய் திருப்பதி ஏழுமலையான் உண்டியிலே போட்டுட்டு அவரை சேவிச்சு வா”.

பக்தர் விடை பெற்றுக் கொண்டார்.

மஹாபெரியவா பக்தர்கள் பாவ மூட்டையை சுமக்கக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6647/mahaperiyavaas-concern-extract-book-venkatasamy#ixzz2v6KQPHNB

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

” மருத்துவருக்கே மருத்துவம் சொன்ன மஹா மருத்துவர் ….”

மஹாபெரியவா அவர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் என்பதை பல நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன.

”வெள்ளைத் தாமரையில் கஷாயம் வைத்து சாப்பிடு” என்றும் ”வில்வ இலையைத் தினமும் காலையில் சாப்பிடு” என்றும் “துளசி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிடு” என்றும் பலருக்குச் சொல்லி அவர்களது தீராத நோய்களைத் தீர்க்க உதவியிருக்கிறார். ஏறக்குறைய இது வைத்தியர் வேலைதானே?

இவற்றிற்கு மேலாக அவர் தம்மிடம் நேரில் வரமுடியாத பக்தர்களுக்கு அவர்களது கனவில் தோன்றி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று – வைத்தியர் ஒருவருக்கே ஏற்பட்டது.

பெங்களூர் நகரில் அவர் மிகவும் பிரபலமான டாக்டர். ‘கைராசி’யான டாக்டர் என்றும் அவர் புகழப்பட்டார். நோயாளிகளிடம் அதிகப் பணம் கேட்பது கிடையாது. வந்தவர்கள் எல்லாரும் நோய் குணமாகி திரும்பினார்கள் என்னும் சிறப்பு இருந்தும் அவருக்குத் தேர்வு வைத்ததைப் போல் அவரிடம் ஒரு நோயாளி தன் நோயைத் தீர்க்க அணுகினார்.

வயிற்றுவலிதானே என்று முறைப்படி டாக்டரும் அந்த நோயாளிக்கு மருந்து கொடுத்தார். ஓரிரு நாளில் குணமாகிவிடும் என்று டாக்டரும், இவரிடம் வந்தால் தனது உபாதை தீர்ந்துவிடும் என்று அந்த நோயாளியும் நினைத்தனர். இருவரது நம்பிக்கையையும் நோய் தகர்த்தெறிந்தது. வயிற்றுவலி குணமாகவே இல்லை. டாக்டர் தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் அவருக்குக் கொடுத்துப் பார்த்தார். நோயாளியும் பிடிவாதமாக இந்த டாக்டரைத் தவிர வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது போல் இவரிடமே வந்தார். இவர் கொடுத்த மருந்தை மட்டும் விடாமல் சாப்பிட்டார். பலன் தான் இல்லை.

மனம் வெறுத்துப் போன டாக்டர், தமது தெய்வம் என்று உபாசித்த காஞ்சி மஹானை வேண்டினார். இந்த டாக்டர், மஹானின் நெருங்கிய பக்தர்களில் மிகவும் முக்கியமானவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் மஹானை நேரில் வந்து தரிசிக்கத் தவறுவதே இல்லை.

“சர்வேஸ்வரா என்ன சோதனை இது? என்னிடம் வந்தவர்களில் உங்கள் அருளால் குணமாகிப் போனவர்கள் தான் அதிகம். இந்த ஒரு நோயாளி மட்டும் என் வைத்தியத்திற்கே சோதனை வைத்துக்கொண்டு இருக்கிறாரே? இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று மனமுருகி மஹானை வேண்டினார். டாக்டரும் மஹானிடம் நேரில் வரவில்லை. அதனால் என்ன? தனது பக்தனுக்கு அருள் பாலிக்க அன்று இரவே மஹான் டாக்டரின் கனவில் வந்தார்.

“நீ அந்த நோயாளியின் சாப்பாட்டு நேரத்தைப் பற்றிக் கேள். பிறகு அதை மாற்றி அமைத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். டாக்டர் தமக்கு மஹான் உத்தரவிட்ட விஷயமாக யோசித்தார். ‘சாப்பாட்டை மாற்றி அமை’ என்றால் எப்படி?

அந்தத் தொழிலாளி ஒரு மில்லில் வேலை செய்பவர். மறுநாள் அவர் வந்தபோது அவரிடம் சாப்பாட்டு நேரத்தைக் கேட்டார்.

“மில்லில் வேலை எல்லாம் முடிந்த பிறகு மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள் எனது ஆகாரத்தை முடித்துக் கொள்வேன்” என்று தொழிலாளி சொன்னார். சரியான பிரதோஷ காலமல்லவா அது?

டாக்டர் அவரிடம் “நீ சாப்பிடும் நேரம் சரியாக இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை ஒழுங்காகச் சாப்பிட்ட பின் என்னிடம் வா” என்றார்.

“டாக்டர் சொல்லிவிட்டாரே” என்று தொழிலாளியும் தனது ஆகார நேரத்தை மாற்றி அமைத்தார். மஹானின் உத்தரவல்லவா அது?

தொடர்ந்து ஒரு வாரம் ஆகாரத்தைக் குறித்த நேரத்தில் சாப்பிட்ட தொழிலாளி டாக்டரிடம் வந்தார்.

“இப்போதெல்லாம் எனக்கு வயிற்றுவலி வருவதே இல்லை டாக்டர். நான் மருந்து கூட சாப்பிடுவதில்லை” என்றார். தெய்வ வைத்தியர் கொடுத்த யோசனை அல்லவா இது! டாக்டர், மஹானின் திக்கு நோக்கி வழிபட்டார்.

டாக்டருக்கு மேல் டாக்டராக விளங்கும் அந்த மஹானின் பாதார விந்தங்களை நாம் பற்றிக் கொண்டால் நமக்கு நோய் எங்கேயிருந்து வரும்? வைத்தியர் நேரில் சொன்ன அனுபவம் இது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர

Read more: http://www.periva.proboards.com/thread/6536/doctors-advisor-mahaperiyavaa-venkatasaamys-book#ixzz2uJRgdWsH

natarajan

” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku