நவராத்திரி வழிபாடு !!! மகாபெரியவர் சொல்வதை கேட்போமா !!!

 

 
நவராத்திரி கொண்டாட்டம் – மகாபெரியவர் சொல்றதை கேளுங்க!
(ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி)

05-10-2013. 
Navarathiri Special

காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ: 

உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரிகொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம்.
நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.

கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.

கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.

காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள். 

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

source:::::Dinamalar…Tamil Daily
natarajan

” ஏன் இன்று அந்த தெலுங்கர் வரலையா ” ?

காஞ்சி மஹானின் கருணை உள்ளத்திற்கு இது தான் அளவென்று சொல்ல முடியாது. பக்தர்களை இனம் பிரித்துப் பார்ப்பது அவருக்குப் பிடிக்காத காரியம். நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதையெல்லாம் அவரவர்களின் செயல்பாடுகளின் மூலம் அறியக்கூடியவர் அவர்.

1980ஆம் வருட வாக்கில் பெரியவா வடக்கே பாத யாத்திரை செய்யக் கிளம்பிய சமயம், ஆந்திராவில் ஒரு பெளர்ணமி நாளில் அந்த மஹானுக்கு ஷவரம் செய்து முடிகளை அகற்ற தெலுங்கரான ஒரு நாவிதர் அழைத்து வரப்பட்டார். அடுத்தடுத்த பெளர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் ஸ்ரீமடத்திற்கு அழைத்துவரப்பட்டு பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார்.

மஹானை ஸ்பர்ஸித்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அந்த நாவிதர் சிரத்தையோடு தன் தொழிலைச் செய்தார். மஹானுக்கு பணி செய்யும் மகத்துவத்தை முதலில் புரியாமல் இருந்தவருக்கு மாதந்தோறும் இந்தத் திருப்பணி கிட்டியதில் மஹான் சிலரை ஈர்த்து ஆட்கொண்டுவிட்டதில் வியப்பே இல்லை எனலாம்.

அதனால் பணிவிடைகள் செய்ய வருவது போல் அல்லாமல் இந்த நாவிதர் பூர்வ பக்தியோடு வரும் நிலை தானாக அவருக்கு ஏற்படலாயிற்று. அப்படி வரும்போது மஹாபெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்?

ஒரு மூட்டை நிறைய புற்று மண் மாங்குச்சி என மஹான் உபயோகிக்கும் வஸ்துக்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தபின் முடி இறக்கும் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவது தொடர்ந்தது.

மஹாபெரியவா வடக்கே இருந்து திரும்பவும் காஞ்சி ஷேத்திரம் வந்தாயிற்று. தெலுங்கு தேசத்திலிருந்து நாவிதர் காஞ்சி வருவதும் தொடர்ந்தது.
இப்படித் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்த அந்த நாவித பக்தரின் மனதில் தாழ்வு மனப்பான்மை பக்தியினால் எழுந்தது. புற்று மண்ணை ஒரு அழுக்கான துணியில் கட்டி அதோடு மாங்குச்சியை தட்டில் வைத்து ஒரு ஓரமாக வைத்துவிடுவார்.

அதேசமயம் பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் உயரிய பழவகைகள் முந்திரி, பிஸ்தா பருப்பு, விலை உயர்ந்த சால்வைகள், தங்க நாணயங்கள் என பல தட்டுகளில் அணிவரிசைகளுக்கிடையே மஹாபெரியவா என்னும் ஏழை பங்காளனுக்கு நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையே உயர்வாகத் தெரியும்.

மஹானின் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பொருள்களைப் பார்த்தபோதுதான் அந்த நாவிதனுக்கு மனதில் ஆதங்கம் ஏற்பட்டது. தானும் இப்படி தரிசனத்திற்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று தீர்மானித்த அந்த பக்தர் தான் புற்று மண் வைத்த தட்டில் விலை உயர்ந்த பழங்கள், தேங்காய் திராட்சை என பல வஸ்துக்கள் நிறைந்திருக்க அத்துடன் சில ரூபாய் நோட்டுக்களும் காணப்பட்டன.

மற்றவர்களுக்கு இணையாகத் தானும் மஹானுக்கு இதைப்போன்ற வஸ்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாவிதர் நினைத்ததன் விளைவு இது.
இருந்தாலும் மஹானின் முன்னிலையில் இவைகள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு சந்தேகம் எழுந்தது.

“ஏன் இன்னிக்கு அந்தத் தெலுங்கர் வரலையோ” என்று கேட்க, மடத்து சிப்பந்திகள் தெலுங்கர் சமர்ப்பித்த தட்டைக் காண்பித்தனர்.

“என்ன இது, அவர் எப்போதும் கொண்டு வந்து வைக்கிற மாதிரி தெரியலையே” என்று அந்த பக்தரைப் பிரத்தியேகமாக அங்கீகரிக்கவே கேட்பது போல மஹான் வினவ, அப்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. நாவிதர் மஹானின் முன்னால் சற்று தூரத்தில் நிற்க, “உனக்கேது இவ்வளவு பணம்” என்கிற கேள்வியை கேட்டு அவரது உண்மையான பக்தியை வெளிக்கொணர்ந்தார்.

எல்லோரையும் போல் மஹானுக்கு தன்னால் ஏதும் கொண்டு போக முடியவில்லையே என்று வருந்திய அந்த நாவிதர் தெரு ஓரத்தில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த குடிசையை விற்றுவிட்டார்.

மனைவியும் குழந்தைகளும் தெருவில் நிற்க இவர் குடிசை விற்ற பணத்தில் மஹானுக்குத் தேவை என நினைத்து வாங்கிய பொருட்களோடு மீதம் இருந்த பணத்தையும் தட்டிலேயே வைத்து மஹான் முன் சமர்ப்பித்துவிட்டார். அப்போதுதான் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு இவரைப் பற்றித் தெரியலாயிற்று.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு இப்படித் தன் உடைமைகள் யாவையும் மஹானின் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறியச் செய்தார் மஹான்.

அவருக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார் மஹான். அவருக்கு மேலும் பேரின்பம் அருளினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

source:::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5278/barbers-devotion-mahaperiyavaa/#ixzz2gMUA2eU4

” உனக்கு பரமேஸ்வரனை தெரியுமோ ” ?

சிவசங்கரன் என்பவர் ஸ்ரீமடத்தின் நெடுநாளைய பக்தர். ஒரு முறை அவர் தரிசனத்துக்கு வந்த போது, ஒர் அனுக்கத் தொண்டர், அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு விட்டார்.

சிவசங்கரனுக்கு எல்லையில்லத வருத்தம். உடனே தான் பட்ட அவமானத்தை ஓடி சென்று பெரியவாளிடம் புகார் செய்கிற அநாகரீகர் இல்லை அவர்.

பெரியவாளிடம் தனித்துப் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது.

“மடத்துத் தொண்டர்களில் சில பேர்கள் துஷ்டர்களாக இருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள். பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவா இப்படிப் பட்டவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிதான் சமாளிக்க முடிகிறதோ…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லி விட்டார்.

பெரியவாளுக்கு ஒரே சிரிப்பு. “நீ சொல்கிற தகவல் எனக்கு ஒன்றும் புதுசில்ல” என்று ஒரு பார்வை.

பின்னர் சொன்னார்:

”ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லாத் தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியராக இருக்கிறார்களா? அரசாங்கத்தில் லட்சகணக்கான பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒரே லெவலில் இருப்பதில்லை. நிறையப் பேர் வேலை சரியாகச் செய்வதில்லை. அல்லது, தப்பும் தவறுமாகச் செய்திகிரார்கள். அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியல்லே. அவர்களை வைத்துக் கொண்டே தான் ராஜாங்கம் நடக்கிறது. ஏனென்றால், அரசு – அதற்கு ஒரு தலைமை – அவசியம். தலைமை சரியாக இருக்கான்னு பார்த்தாலே போதும். அவ்வளவுதான் முடியும்.

“ஸ்ரீமடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு, “உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?” என்று கேட்டார் நம் உம்மாச்சி தாத்தா.

சிவசங்கரனுக்கு ஐந்தாறு பரமேசுவரன்களைத் தெரியும். அவர்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தார்.

”நான் கைலாசபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்… அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில் அக்னி, காலின் கீழ் அவஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள்! இத்தனையயும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்.

“பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது திரிந்து எல்லோரயும் பயம்முறுத்தும், கடிக்கும். நெருப்பை கீழே போட்டால், வீடு-காடு எல்லாவற்றையும் அழிச்சிடும். அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும். பீரேத – பைசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி துஷ்டர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் பரமேசுவரனுடைய பெருமை!”

சிவசங்கரன் அசந்து போய் நின்றார். பெரியவா ஏதோ சமாதானம் சொல்லித் தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.

பரமாச்சாரியா சாட்சாத் பரமேஸ்வரனே!!!

source::::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/5270/#ixzz2gGjqqKPd

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்கு தெரியாதா ” ?

காஞ்சி மஹான், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம்.

ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே
இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீந்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன் ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார்.

அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான். அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில்.

இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான் , ஒவ்வருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார்.

பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடா வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும்
நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்தில் உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.

காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே
வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது.

புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல். தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப்ப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை.

பவார் இதை மஹானிடம் சொன்னபோது….“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான்.

அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில்
ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விளக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன்
போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார்
தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.

இடம் கிடைக்காத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…
ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார்.

சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு…

“எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை …. பின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். “இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை.

மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின.

தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான மஹான், “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே,
இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன!!

source::::: http://www.periva .proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5054#ixzz2fOZDSDFy