
சாய்பாபா அவதரித்தது 1926 கார்த்திகை மாதம் சோமவாரத்தில் ஆகும். தற்போது, 90வது அவதார நாளும் அதே போல கார்த்திகை சோமவாரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், இது மிக சிறப்பான அவதார நாளாக அமைகிறது.
தர்மத்தை நிலைநாட்ட :
யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்பது கிருஷ்ணரின் வாக்கு. அப்படிப்பட்ட அவதார புருஷராக பகவான் சத்ய சாய்பாபா விளங்குகிறார். 1926, நவ. 23ல் பிறந்த அவருக்கு, நாளை 90வது அவதாரநாள் கொண்டாடப்படுகிறது.
புட்டபர்த்தி என்றால், “சாய்பாபா’ என்ற திருநாமம் தான் நினைவில் வரும். இவ்வூர் அந்தக் காலத்தில் கொல்லப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. பசுக்கூட்டம் நிறைந்த ஊர் என்பது இதன் பொருள். அங்கு ராஜு வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்து வந்தது. அந்த வம்சத்தில் மகான் ரத்னாகரம் வெங்க அவதூதர் என்பவர் இருந்தார். அவரது வழியில் வந்தவர் கொண்டமராஜு. மக்களுக்கு ராமபிரானின் பெருமைகளை எடுத்துச் சொல்வதில் அலாதி பிரியம் கொண்டவர். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவருக்கும் தன் முன்னோரான வெங்கஅவதூதர் நினைவாக அவருடைய பெயரையே இட்டார். மூத்தவர் பெத்த வெங்கம ராஜு. இளையவர் சின்ன வெங்கம ராஜு. இருவரும் தந்தையைப் போலவே பக்தியில் ஈடுபாடு கொண்டவர்கள்.
இவர்களுக்கு கர்நூல் மாவட்டம் “கோலி மிகண்ட்லா’ கிராமத்தில் சுப்பராஜு என்ற உறவினர் இருந்தார். சிவபக்தி மிக்கவர். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த சமயத்தில் கிராமத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் இருந்தது.
சுப்பராஜுவின் நிலையறிந்த உறவினர் கொண்டமராஜு,””நீங்கள் ஏன் கோலிமிகண்ட்லாவில் இருந்து கொண்டு சிரமப்பட வேண்டும்? சித்ராவதி ஆற்றோரம் இருக்கும் கர்நாடக நாகப்பள்ளியில் புதுவீடு கட்டி குடியேறிவிடுங்கள். வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். மேலும் உங்கள் மகளான ஈஸ்வரம்மா தான் என் வீட்டு மருமகள்!” என்று வாக்களித்தார். இதன்படி பெத்த வெங்கமராஜுவுக்கு ஈஸ்வரம்மாவை திருமணம் செய்து வைத்தார்.இவர்களுக்கு சேஷமராஜு, வெங்கம்மா, பர்வதம்மா என்னும் குழந்தைகள் பிறந்தனர். பின் தொடர்ந்து நான்கு குறை மாதப் பிரசவங்கள் நிகழ்ந்தன. தன் மருமகள் தீர்க்காயுள் உள்ள நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் பிரார்த்தித்தனர்.
விரைவிலேயே அவர்களுடைய எண்ணம் நிறைவேறியது. ஒருமுறை, ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்த போது, நீலநிற ஒளி பந்து போல திரண்டு வந்து அவரது உடலில் புகுந்தது. தெய்வீக நிகழ்ச்சி இது என்பதை உணர்ந்த ஈஸ்வரம்மா, தன் மாமியாரிடம் மட்டும் இதனை சொன்னார். இதையடுத்து ஈஸ்வரம்மா கர்ப்பவதியானார். கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தது போலவே, சத்யசாய்பாபாவும் ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். 1926 நவம்பர் 23ல், அட்சயவருஷம் கார்த்திகை மாதம் திருவாதிரை நாளில் சோமவாரமான திங்கட்கிழமை அவரது அவதார நாளாகும்.அவர் செய்த அற்புதங்களும், சமூகத்தொண்டும் கொஞ்ச நஞ்சமல்ல. அவரை இந்த இனிய நாளில் வணங்கி மகிழ்வோம்.
பயணத்தை நிறுத்திய பாபா:
பாபா பக்தரான சோமயாஜுலு ஐதராபாத்திலிருந்து சென்னை செல்ல ஆயத்தமானார். காரில் விமானநிலையம் சென்று கொண்டிருந்த அவருக்கு, “அன்று மகாசிவராத்திரி’ என்று நினைவுக்கு வந்தது. விமான டிக்கெட் ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், போவதற்குச் சிறிதும் இஷ்டமில்லை. பயணத்தை ரத்து செய்துவிட்டு, சிவபூஜை செய்ய வேண்டும் என்ற ஆவலில் வீட்டிற்குத் திரும்பினார். பயபக்தியுடன் பூஜை அறைக்குள் நுழைந்தார். பிரதானமாக பூஜிக்கும் சிவலிங்கத்திற்கு வில்வார்ச்சனை செய்யத் தொடங்கினார். “ஓம் நமச்சிவாய!’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அவர் இடைவிடாமல் ஜெபித்தபடியே வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தார். அன்று இரவு செய்தி கேட்ட சோமயாஜுலுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஐதராபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் சென்னை போய் சேரவில்லை. வானிலை சரியில்லாததால் விமானம் விபத்தில் சிக்கி விட்டது. பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால்,பாபா பக்தரான சோமயாஜுலு, தான் மட்டும் காப்பாற்றப்பட்டதை எண்ணி அதிசயித்தார். நம்பியவரைக் காப்பாற்றி கரைசேர்க்கும் சாய்பாபாவின் அருளை வீட்டாருடன் நன்றியுணர்வோடு பகிர்ந்து கொண்டார்.
சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை:
எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தாலும், சாய்பாபாவால் புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு ஒயிட்பீல்டில் நிறுவப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மிகவும் வித்தியாசமானவை. அதி நவீன வசதி படைத்த இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மருந்து, உணவு உள்ளிட்ட எல்லாமே இலவசம். “தரமான சிகிச்சை, இலவச சிகிச்சை’ என்பதுவே இந்த மருத்துவமனைகளின் தாரக மந்திரம். இதய அறுவை சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைகள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. 1964ம் ஆண்டு சிறிய பொது மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் சேவை புரியும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக தரம் உயர்ந்தன. 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில் பாபா இந்த மருத்துவமனைகளைத் திறந்து வைத்தார். இரண்டு மருத்துவமனைகளும் ஓரு ஆண்டு காலத்திற்குள்ளாகவே கட்டப்பட்டது என்பது மிகப் பெரிய அதிசயம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் இங்கு உள்ளனர். ஆண், பெண் தொண்டர்களும் எந்த நேரமும் சேவை புரிகின்றனர். எல்லா கவுன்டர்களும் இங்கு இருக்கின்றன. ஆனால், “கேஷ் கவுன்டர்’ மட்டும் இங்கு கிடையாது. நோயாளிகளுக்கு முன்பதிவு செய்த பின், வரிசைக்கிரமப்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கிருக்கும் பிரார்த்தனைக் கூடங்கள் “இது மருத்துவமனையா அல்லது கோவிலா?’ என்று பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளிகளுக்கு வேண்டிய ஆலோசனைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த மருத்துவமனைகள் சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று சாய் பக்தர்கள் கூறுகின்றனர்.
Source…….www.dinamalar.com
Natarajan