ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!….

வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும்  விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு  தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.

இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.

இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய  வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும்  கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.

முழுமுதற் கடவுள்  விநாயகர். இவர் இல்லாத  ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப்  பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.

முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும் தேவகோட்டச் சிற்பம் – விநாயகர்.

பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை,  பாசமும் அங்குசமும் ஆகும்.  இந்த அடையாளங்கள்,  தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி  ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.

பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது  ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.

கணபதி வரலாறு

விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான்,  கணபதியைப் பற்றி பாடும்பொழுது  வாதாபி கணபதியே எனப் பாடினர்.

அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி  விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே  தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

திருச்சி மலைக்கோட்டையின்  கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில்  செதுக்கப்பட்டுள்ள  விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு  முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.

ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.

உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும்,  விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே  காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால் பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய பிள்ளையார்.

‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.

இலக்கியங்களில் கணபதி

சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு  வாய்ந்த பாடல் –

‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’

என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.

விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.

நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி  அருள வேண்டுகிறேன்.  இவன் திருவடிகளை நாமும்  இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.

Source…..ச.செல்வராஜ், தொல்லியல் துறை…www.dinamani.com

Natarajan

Leave a comment