” நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான் … ” !!!

“என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்
நூல் பாவைதான்’
– வாலி

 

நமக்கு நடப்பவைகளுக்கு நாம் காரணங்களை தெரிந்து கொள்ள முடியாமல் பிரமித்து நிற்கிறோம்.
அறத்தோடு வாழும் எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் இதைச் செய்தேனே, அதை செய்தேனே, எனக்கு வெகுமதி கிடைக்காமல் வேதனை அல்லவா வாய்த்திருக்கிறது.
அறத்தை ஒதுக்கி வாழும் அடுத்தவனுக்குப் பரிசா? பலவாறு எண்ணி வேதனையுறுகிறது மனம்.
நானும் பலமுறை இக்கேள்விகளை அனுபவமின்மையால் எழுப்பியதுண்டு. இவற்றிற்கும் இன்னும் பல நூறு கேள்விகளுக்கும் அமரர் வாலியின் மேற்காணும் இரண்டு வரிகளே பதில்.
திரை இசைப் பாடலின் இரண்டு வரிகட்குள் இரண்டாயிரம் கேள்விகளின் பதிலை அடக்கிய அமரர் வாலியின் புலமைக்குப் பல வணக்கங்கள்.
புட்டப்பர்த்தியில் பகவானைக் காணக் காத்திருக்கும் அறையை ஒட்டி இருக்கின்ற திண்ணைக்கு வரண்டா என்ற பெயர். அங்கே மிக மிக முக்கியமானவர்களும், வேண்டப்பட்டவர்களுமே உட்காருவதற்கு அனுமதியுண்டு. வழமையான அங்கு தொடர்ந்து அமர்ந்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலே அமர்வார்கள். ஒருமுறை அப்படிப்பட்ட ஒருவர் பக்கத்திலே நான் அமர்ந்தேன்.
அன்று பகவானின் தரிசனத்திற்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்தோம். அப்பொழுது என் பக்கத்திலிருந்தவரிடம் “மிகுந்த நேரமாகிவிட்டதே இதற்கு மேலும் பாபா வருவார்களா?’ என்று கேட்டேன்.
“பகவானுடைய எந்த நடவடிக்கையையும் நாம் நிர்ணயம் செய்ய முடியாது. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையுமு” ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும். அதை ரசிக்கும் உரிமை மாத்திரம் தான் உண்டு. ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்’ என்றார்.
“அறுபது எழுபதுகளில் நான் பகவானுக்கு ஒரு முகமையாளர் போலப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்குக் கீழே ஒரு குமாஸ்தா ஒருவன் பணிபுரிந்து வந்தான். காசோலை எழுதிப் பகவானிடம் கையொப்பம் வாங்கி, அந்தக் காசோலையை மாற்றிச் செலவுக்குக் கொடுப்பது அவனது பணிகளுள் ஒன்று.
செலவு ஐந்நூறாக இருந்தால் எண்ணூராகப் பணமெடுப்பதும், இரண்டாயிரமாக இருந்தால் மூவாயிரமாக பணமெடுப்பதுமாக இருந்த செயலை நான் கண்டுபிடித்தேன்.
எனக்குக் கோபம் ஆத்திரமுமாக வந்தது. அவனை கண்டிக்கவோ வேலையிலிருந்து நீக்கவோ எனக்கு உரிமை இருக்கவில்லை. அவன் தினமும் ஐந்நூறு ஆயிரம் எனப் பணம் கையாடல் செய்ய முற்பட்டான். இதை உடனே பகவானுக்குச் சொல்ல வேண்டுமென்று துடித்தேன். இதைப்ப ற்றிப் பகவானிடம் பேச எத்தனித்த போதெல்லாம் அவர் தள்ளிப்போட்டார். பேசவும் விடவில்லை. எனது நிலை தர்ம சங்கடமாயிற்று. விரக்தியடைந்தேன்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் இன்று கட்டாயம் பேசியே ஆக வேண்டும் என்று பகவானிடம் முரண்டு பிடித்தேன். “நாளைக் காலை வா’ என்று பகவான் சொன்னார்கள்.
பகவான் கடவுளாயிருந்தும் கூட, தன் அருகிலேயிருந்து திருடுகிறவனை ஒன்றும் செய்யாமலிருக்கிறாரே என்று நினைத்து எனது பணியிலிருந்து விலகவும் நினைத்தேன். அன்று பகவான் “நாளைக் காலை என்னுடன் உணவருந்த வா’ என்றழைத்தார்கள்.
மறுநாள் காலை அறையினுள் சென்ற பொழுது “கையாடல் பற்றி எனக்குத் தெரியும்’ என்றார்கள். நான் அசந்து போனேன். இருந்தாலும் “நீ சொல்’ என்றார்கள். எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன்.
பகவான் சிரித்துக் கொண்டே, “உனக்கொன்று சொல்கிறேன் கேள். அவன் வீட்டில் என்னை வைத்து உணவளித்தவன். அவனுடைய நேரம் வந்தவுடன் சில நாள்களில் அவனாகப் போய்விடுவான் அதற்காக நீ துன்பப்படாதே” என்றார்.
“பகவான் எதையும் ஏன்? எதற்காக? அப்படிச் செய்கிறார்கள் என்று நம்மால் நிர்ணயிக்கவே முடியாது. அதனாலே அமைதி காத்து, நீ தரிசனம் பெற்றுச் செல்’ என்றார் முதியவர்.
நமக்கு நுனிப் புல் மேயத்தான் தெரியும் எல்லா விடயங்களையும் ஆழமாகப் பார்த்து அறியும் சக்தி கிடையாது.
நான் பகவானுடைய அன்புக்கு அடிமைப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வகையான தொண்டுகளில் ஈடுபட்டேன். பணம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. ஆனாலும் பெங்களூரிலே வைட் பீல்டிலே முன் வரிசையில் இடம் பிடிக்க படாத பாடுபட்டேன்.
சாதாரண பக்தனாக மட்டும் இருந்த காலம். அப்படியே போய் முன் வரிசையில் அமர்ந்தாலும் சேவா தொண்டர்கள் “நீ யார்?’ என்று கேட்டு என்னைப் பின் வரிசைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஒருமுறை பாபா நடந்து போகிற பாதையிலே எனக்கு இடம் கிடைத்தது. பாபா விபூதி வரவழைத்து என் கையில் கொடுத்தார்கள். நான் என்னையே மறந்தேன். அந்த விபூதி பெறுவதற்கு நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். அப்பொழுது தெரிந்தது, எதற்காகப் பகவான் எனக்கு முன் வரிசையில் இடம் தராமல் காத்திருக்க வைத்தார் என்று.
அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு கனிய வேண்டும். கனிந்துவிட்டால் அருள் கிட்டிவிடும். பக்திக் கனி கனியும் காலம் அவருக்குத்தான் தெரியும். நான் அவசரப்பட்டு, பாபா உன்னை அருகில் பார்க்க வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லைஎன்று வீணாக வருந்தினேன்.
பாபாவை இன்னும் அதிகமாக நேசித்தேன். சாயி சேவா என் இரத்தத்தோடு கலந்தது. பகவான் முன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பகவான் எனக்கு மோதிரமும் அணிவித்தார்.
அநாவசியமாகப் பக்தி பழுக்கும் முன் எனக்கும் உன் அருகில் வரும் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்று அழுவது சாமான்ய பக்தர்களின் முதிர்ச்சியற்ற ஒருகுறை. எதற்கும் திருவருள் கூட்டவேண்டும். வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார்.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (குறள் 377)
பிரித்தானியாவின் சிறிய மீன்பிடித் துறைமுகம் ஹல். மீன் பிடிக்க விசைப் படகிலே ஒரு குடும்பம் அங்கிருந்து சென்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.
துறைமுகத்தின் அணையை தாண்டிக் கடலுக்குள் சென்றபோது அப்படகு சுழியினுள் சிக்கித் தடுமாறியது. துறைமுகத்தின் அவசர உயிர்காக்கும் படையினருக்குச் செய்திஅனுப்பினர்.
உயிர்க்காக்கும் படையினரும் அவசர அவசரமாகப் புறப்பட்டனர். சாதாரணமாக அந்தப் படையினரின் எண்ணிக்கை ஓட்டுனருடன் சேர்ந்து அறுவர். ஆறாவது நபர் தன்னுடைய கவசங்களை அணிந்து ஏறத் தாமதம் ஏற்பட்டதால் ஐந்து பேருடன் அந்தப் படகு புறப்பட்டது.
தத்தளித்துக் கொண்டிருக்கும் படகை உயிர்க்காக்கும் படையினர் அணுகிய நேரம் அந்தப் படகு கவிழ்ந்து விட்டது.
கடுமையாகப் போராடினர். அந்த மீன்பிடிப் படகிலிருந்த பதினொரு வயதுடைய பையன் ஒருவன் உட்பட நால்வரைக் காப்பாற்றினர் மூவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்க் காக்கும் படையினரில் இருவர் அந்தச் சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் உயிர்காக்கும் படையிலுள்ள இருவரையும் மீன் பிடிக்கச் சென்றவர்களில் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்காக்கும் படை எஞ்சியவர்களோடு துறைமுகம் திரும்பியது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியை கருவாக்கித் தலையங்கமாக எழுதிய “சைக்காலாஜிஸ்ட்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையின் ஆசிரியர், “மீன் பிடிக்கச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் மாத்திரம் ஏன் உயிர் பிழைக்க வேண்டும்? உயிர் காக்கும் படையில் ஒருவர் மட்டும் ஏற முடியாமல் போனதேன்? உயிர்காக்கும் படையில் ஒருவரை மட்டும் கரையில் விட்டு விட்டு அந்தப் படகு ஏன் செல்ல வேண்டும்? தங்கள் உயிரைச் ச்சமாக மதித்த உயிர்காக்கும் படையினரைச் சேர்ந்த இருவர் ஏன் உயிர் துறக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தார்.
ஆசிரியர் ஏன்? ஏன்? எனப் பல கேள்விகளுடன் தலையங்கத்தை முடித்துவிட்டார். அவரால் விடை சொல்ல முடியவில்லை.
இம்மாதிரியாக நமது வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமும் விடை காணமுடியாமல் ஏன்? ஏன்? எனற கேள்விகளை எழுப்புகிறோம். போட்டவன் தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான்.

– தெ. ஈஸ்வரன் in KALAIMAGAL….Tamil Monthly..

Natarajan

” அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …”

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.
ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

 

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bakthi Tamil

natarajan

“கூடையிலே வேறு என்ன கொண்டு வந்திருக்கே …” !!!

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.

ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார். பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். “கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?” “கொன்றைப் பூ மட்டும்தான்” “இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கே!”

யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு போய்,ஒரு மூங்கில் தட்டில் கவிழ்க்கச் சொன்னார்கள்.

தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.

பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள்.

பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப் பார்த்து,”இனிமேல் சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!” என்றார்கள்.

அலை அலையாய் சிரிப்பு…

source::::: www. periva.proboards.com
natarajan

” ஆமா …உனக்கு அப்போ ஒன்பது வயசு … “

மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க
அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.

பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும்
எடுத்துக் கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு “இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் …” என்றதும், “ஆமா….அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்..” என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!

45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?

அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!

மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்……..அந்தப்பையின் மேல் பக்கத்தில் “இதோ! வந்துட்டேன் பாத்தியா!..” என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
————————————————————————————
உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
———————————————————————————–

source::::: http://www.periva.proboards.com

natarajan

” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “

ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி உருவசிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டார.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு ‘எனக்கு புடவை கொடு… புடவை கொடு!’ என்று கூவினாள், ரகளை செய்தாள்.

அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது

‘பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்.

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒரு புடவையை கொண்டு வர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.

‘என்னடா… புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா’ என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மகா பெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந் சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

source:::: http://www.periva.proboards.com

natarajan

” எனக்கு கோட்டு தருகிறாயா …? ” ….

மகா பெரியவாளை தரிசிக்க செல்லும்போது ஆச்சரியமான பல நிகழ்சிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர், தான் கண்ட கனவை பெரியவாளிடம் உணர்ச்சி பொங்க விவரித்து கொண்டிருந்தார்.

அவர் கனவில் பெரியவாள் தோன்றியதாகவும், ‘எனக்கு கோட்டு தருகிறாயா?” என்று கேட்டதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.

இதை கேட்டுவிட்டு மகா சுவாமிகள் மெல்ல சிரித்தார்கள். “கோட்டு கேட்டேனா?” என்று சொல்லி விட்டு ஓர் இடைவெளி, “கேட்டிருப்பேன்… கேட்டிருப்பேன்”.

அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘பெரியவாளுக்கு கோட்டு என்னத்துக்கு?”

பெரியவாளே பேசினார்கள்:

“கோட்டுன்னா என்ன அர்த்தம் தெரியுமா?”

என்ன பதில் சொல்ல? Coat என்றால் கோட்டுதான்!

“கோட்டு என்பதற்கு சரியான தமிழ்பதம் சொலுங்களேன்..”

‘மலை’ என்றார் ஒருவர். ‘கொம்பு’ என்றார் இன்னொருவர். “மேலங்கி” என்றார் மற்றொருவர்.

எல்லோரும் பெரியவாளின் பதிலுக்காக, செவிகளை தீட்டி கொண்டு காத்திருந்தார்கள்.

“அதெல்லாம் சரி. கோட்டு என்றால் கவசம்னு ஒரு அர்த்தம் உண்டு. காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்தணும்னு ஒரு எண்ணம் வந்தது. தங்க கவசம் பண்றதுன்னா.. சின்ன காரியமா? பணம் வேணுமே… இவர் பணக்காரர்.. ஒருவேளை இவரை கேட்டால், செய்து கொடுப்பார்னு தோன்றியிருக்கும். அதனால் கனவிலே போய் கேட்டிருக்கேன். எல்லாம் எனக்கு காமாட்சிதான். அம்பாளுக்கு கவசம் சாத்தினால், நான் கோட்டு போட்டுக்கொண்ட மாதிரிதான்…”

அந்த செல்வந்தருக்கு அடித்தது யோகம் – தங்க கவசம் செய்து சமர்ப்பிக்கும் யோகம்!

எத்தனை தலைமுறை புண்ணியமோ?

source:::::www.periva.proboards.com

natarajan

” உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை …”

 



“பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்..”

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

“என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?”


பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 

“ஹி … வந்து…எப்படி உத்திரவாகிறதோ அப்படி…” என்று இழுத்தார்.

“உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம் சாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்… தேவைபட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்…”

பக்தர் “உத்திரவு” என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை – அண்டை அயலாருடன் விரோதத்தை – வளரவிடகூடாது. இது, பெரியவாளின் தீர்மானமான கொள்கை .  

source:::: http://www.periva.proboards.com

natarajan

” நான் தான் அவனைத் திருட சொன்னேன் ….!!! “

Source: Dinamalar dated 29 April 2014  & http://www.periva.proboards.com

natarajan

 

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, “”வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா…” என்றவர், அவரை நிறுத்தி, “”அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,” என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,’ என்றார்.

“”ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

“”எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,” என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, “”அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,” என்றார்.

அய்யர் அலறாத குறை தான். “”பெரியவா! மன்னிச்சுடுங்கோ” என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

” தமிழில்தான் பேசணும் …தமிழ் பேச்சை மறக்க கூடாது …”

 



நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை – அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் – எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. “பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.

அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, ‘யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்’ என்று சொன்னர்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks – என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.

பெரியவா சொன்னார்கள்” “ஒரு request நான் சொன்ன கேட்பேளா?”

ஒரே குரலில், “Oh yes! certainly we will do” என்று குழந்தைகள் கூறின.

‘வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா – அம்மா, சுவமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது.”

குழந்தைகள். ‘இனிமே அப்பா – அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!’ என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்! 

source:::: http://www.periva.proboards.com

natarajan

” ஒன்று உனக்கு , இன்னொன்று உன் குழந்தைக்கு …” !!!

 



1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்கிறார் – வியக்கிறார்.

இரண்டு காசுகள்…!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்…!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன…? வேறு யாருக்கும் தெரியும்…?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.

பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

“என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை…” 

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

“ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!

அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே… பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்…

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச – சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?

சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

source:::: http://www.periva.proboards.com

natarajan