வாரம் ஒரு கவிதை ….” நினைவு பெட்டகம் 2017 “

 

நினைவு பெட்டகம் 2017
————————-
ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே
கற்கண்டு போல் இனித்த நாளும் உண்டு
கசப்பு மட்டும் காட்டிய நாளும் உண்டு
இனிப்போ  கசப்போ …கட்டாயம் சொல்லும் அது
ஒரு பாடம் …நாளும் ஒரு பாடம் கற்று நானும்
மாற்றிக்கொண்டேன் என்னை எல்லா நாளையும்
இனிய நாளாக ஏற்க !
இந்த ஆண்டு நினைவு பெட்டகமும்  ஒரு பொக்கிஷமே
எனக்கு … இந்த பெட்டகம் திறக்க தனி ஒரு  கடவு சொல்
வேண்டாம்  …திறந்து படிக்க  ஒரு மடிக் கணிணியும்
வேண்டாம் எனக்கு !
கடவுள் கொடுத்த Memory Power ஒன்று மட்டும்
போதும் எனக்கு இந்த பெட்டகம் திறக்க !
வாழ்வின் ஓவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷமே
இந்த ஆண்டின் பொக்கிஷ நினைவை நான்
அசை போடும் நேரம் புத்தாண்டு விடியலுக்கும்
ஆசையுடன் காத்திருக்கிறேன்  நான் !
இனி வரும் எல்லா நாளும்  இனிய நாளாக அமைய
வேண்டும் … என் பொக்கிஷப் பெட்டகம்
திறந்து பார்க்க வேண்டும் நான் ஒவ்வொரு
ஆண்டும் இன்று போல் …ஒரு கடவு சொல் ,
மடிக் கணிணி துணை இல்லாமல் !
Natarajan
1st Jan 2018

” என் கவிதைகள் “… தினமணி நாளிதழின் மதிப்புரை ….

என் கவிதைகள் – கே. நடராஜன். பக்.106 விலை ரூ.90 ஸ்பீடு பிரிண்டர் சென்னை:

 

சுவடுகள் தந்த அனுபவம் சுவடுகள் ஏற்றிடும் வாழ்வின் தொகுப்பு, என சித்தர் சுவாமிகளின் முகப்பு வரிகளுடன் கே. நடராஜனின் என் கவிதைகள் நூலுக்குள் நுழைந்தால். மணி மணியான நூறு தலைப்புகள், அத்தனையும் தினமணி கவிதை மணியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள், அதற்கு அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

கே.நடராஜன்.  விமான நிலைய ஆணையத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் கவிதை தாகத்திற்கு தினமணி கவிதை மணி நீரூற்றியதாக அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது தமிழாசியர் பள்ளி பருவத்தில் அவரை ஊக்கப்படுத்தியதை நினைவு கூர்கிறார்.

உணர்வுகளின் தொகுப்பு, வார்த்தைகளின் அலங்காரம், என்று மட்டுமலாமல், கருத்துச் செரிவு, இலக்கண நடையுடன் கவிதைகளை கொடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து பிறழாமல் எழுதி வாரம் தோறும் பங்கெடுத்த கே.நடராஜன் அவரின் அனைத்து கவிதைகளையும் தொகுத்துள்ள விதமும் நேர்த்தி மிக்கதாக இருக்கிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் என். விட்டல் இந்த தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ளார்.

எல்லையற்று விரிந்து கிடக்கும் வானத்தை போல் கவிஞரின் கற்பனையும் அப்படியானதே.. காற்று வேகத்தில் உருவாக்கப்பட்ட கவிதைகள் ஆயினும் கருத்துக்கள் கல்வெட்டில் செதுக்க தகுத்தவை என்று பாராட்டியுள்ளார். அவரின் திறமை அனைத்து கவிதைகளிலும் பளிச்சிடுகிறது என்றாலும் “பறவையின் மனசு” , “வாழ்க்கையின் தூரங்கள்”, “இன்றைய தாலாட்டு”, “நிழல் தேடி” என பல கவிதைகளை சொல்லலாம்.

Source….

வாரம் ஒரு கவிதை….” கொண்டாடப்படும் தினங்கள் “

கொண்டாடப் படும் தினங்கள்
—————————-
இன்று பிறந்த நாள் ….நாளை திருமண  நாள்
நாளை மறு நாள் குழந்தை  பிறந்த நாள் !
பணம் படைத்த அவனுக்கு தேவை ஒரு காரணம்
ஒரு நாளைக் கொண்டாட … அவன் செல்வாக்கை
பறை சாற்ற ! இல்லா விட்டால் அவன் ஒரு
செல்லாக் காசு  அவன் சமூகத்தில் !
தினம் தினம் கொண்டாட்டம்தான் அவன் வீட்டில் !
தினம் தினம் ஒரு வேளை சோற்றுக்கே
திண்டாட்டம் இன்னொருவன் வீட்டில் !
வயிறார அவன் சாப்பிடும் தினம் மட்டுமே
அவனுக்கு கொண்டாட்ட தினம் !
இல்லாதவனும்  கொண்டாடும் தினமாக
இருக்க வேண்டும்  ஒவ்வொரு நாளும் !
இல்லை இனிமேல் திண்டாட்டம் ஒருவருக்கும்
இங்கே என்னும் நல்ல நாள் வர வேண்டும் என் நாட்டில் !
திண்டாட்டம் இல்லா கொண்டாட்டம் எல்லா
நாளும் இருந்து  விட்டால் எந்த ஒரு நாளை
கொண்டாட்ட  தினம் என்று சொல்வோம் நாம் ?
Natarajan  in http://www.dinamani.com dated 25th Dec2017

வாரம் ஒரு கவிதை….. ” மனத்திற்கிட்ட கட்டளை “

மனத்திற்கிட்ட கட்டளை
———————
நான் சொல்வதை  கேள் நீ …அலையாதே இங்கும் அங்கும்
இட்டேன் கட்டளை நான் என் மனதுக்கு !
யாருக்கு யார் கட்டளை இடுவது ? கேட்டது என் மனம் !
அலைவதே என் வேலை …வேலை நிறுத்தம் நான் செய்தால்
நீ ஒரு ஜடம் ! தெரியுமா உனக்கு …சொன்னது மனம் !
நான் போகும்  போக்கில் எல்லாம் நீ போக மட்டும்
நினைக்காதே …இதை மட்டும் நினைவில் வை நீ மனிதா !
மனம் நான் அறிவேன் நீ எந்த வழியில் பயணம் செய்ய
வேண்டும் என்று …இடுவேன்  கட்டளை உனக்கு
நான் அடிக்கடி ! நடக்கவேண்டும் நீ என் சொல்படி !
மறக்க வேண்டாம் மனிதா நீ … நான் உனக்கிடும்
கட்டளை எல்லாம் அந்த இறைவன் உன்
மனத்திற்கிட்ட கட்டளையே !
Natarajan  in http://www.dinamani.com dated 17th DEC 2017

வாரம் ஒரு கவிதை ….” பெண் என்னும் பிரபஞ்சம் “

 

பெண் என்னும் பிரபஞ்சம்
———————–
ஆணுக்கு பெண் அடிமையில்லை..ஒரு
ஆணை விட பெண் எதிலும் எங்கும்
குறைந்தவளும் இல்லை !
மறக்க வேண்டாம் உங்கள் பெருமை
பெண்ணுரிமை நம்  உரிமை
மறுக்க முடியுமா யாரும் இதை ?
வானமே எல்லை நமக்கு …நாளை
இந்த உலகம் மட்டும் அல்ல …இந்த
பிரபஞ்சம் கூட ஒரு பெண்ணின்
கையில்தான் !
முடிந்தது அவள்  மேடை முழக்கம் ..முழங்கிய
பெண் தேடினாள்  தன் கை பேசியை
ஊரில் இருக்கும் அவள் அப்பாவிடம் பேச !
மறு முனையில் கேட்டதோ அம்மாவின் குரல் !
சரி அம்மா ..நான் பேசறேன்  அப்புறமா
அப்பாவிடம் … சும்மா தான் கூப்பிட்டேன்
நான் ! வைக்கட்டுமா ?
நாளை உலகை  ஆளப் பிறந்த தன்
பெண்ணின் சொல் கேட்டும்  வாய்
பேசாமல் நிற்கும்  அந்த தாய்
அல்லவோ பெண் என்னும் பிரபஞ்சம் !
Natarajan
in http://www.dinamani.com dated 9th Dec 2017

வாரம் ஒரு கவிதை…” விடையில்லா விடுகதை “

 

விடையில்லா  விடுகதை …
——————————
விதையில்லாமல் செடி ஒன்று வளர்ந்தால்
விடையில்லா விடுகதையும் சாத்தியமே !
விடை தெரியாத கேள்விகள் பல உண்டு
நம் வாழ்வில் …அவை எல்லாம் விடை
இல்லா கேள்விகள் இல்லையே !
விடுகதையும் அப்படியே …நம் வாழ்வே
ஒரு விடுகதை ! விடை உண்டு வாழ்வின்
விடுகதைக்கும் !
இந்த விடுகதையின் விடை தேடி ஓடி
இங்கும் அங்கும் அலைந்து விடை ஏதும்
தெரியாமல்  “வாழ்வே ஒரு விடுகதை
அது ஒரு தொடர் கதை “
என்று மட்டும் சொல்லத்  தெரியும் நமக்கு !
விதை இல்லாமல் ஒரு செடி முளைக்காது
என்று தெரிந்தால் விடை இல்லாமல் எந்த
விடுகதையும் இல்லை என்பதும் புரியும் !
Natarajan

வாரம் ஒரு கவிதை….” என் முதல் கனவு “

 

என் முதல் கனவு
—————
அம்மாவின் கருவறையில் நான் கேட்ட முதல் ஒலி
அம்மாவின் குரலும் பாட்டும் …இதுதான் உன் அம்மா
என்று என் அம்மாவின்  முகத்தை என் மனத்
திரையில் படம் பிடித்துக் காட்டியது
என் முதல்  கனவே ..அதுவே  நான்
பார்த்த முதல் ஒலியும் ஒளியும் !
நான் கண்ட அந்த முதல் கனவு  நனவு ஆனது என்
அம்மாவின் முகம் நான் பார்த்த முதல் நாள் !
வாழ்வில் எத்தனை எத்தனை கனவுகள் !
கனவு அத்தனையும் நனவாகவில்லையே !
அத்தனை ஏன் ?  நேற்று இரவு கண்ட
கனவு என்ன என்று விடிந்தால் புரிவதில்லையே !
என் முதல் கனவு மட்டும் எனக்கு இன்னும்
மறக்க வில்லையே !  ஏன் ?
அது எனக்கு முதல் கனவு மட்டும் அல்ல !
நனவை கனவில் அடையாளம் காட்டிய
இனிய புதுமைக் கனவும் அதுவே !
இன்றும் என்றும் அதுவே எனக்கு
முதல் கனவு ! முடிவே இல்லாத
முதன்மை கனவும் அதுவே !
My Kavithai  in http://www.dinamani.com dated 26th Nov 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை ….” யாருமில்லாத மேடையில் …”

யாருமில்லாத மேடையில் …
————————–
குளியல் அறையில் நான் பாடிய
பாட்டு …யாருமில்லாத மேடையில்
அரங்கேறிய என் முதல் கச்சேரி !
என் வீட்டு மொட்டை மாடியில்
நான் ஆடிய நடனம் …யாருமில்லாத
மேடையில் என் முதல் நாட்டியம் !
நிலைக் கண்ணாடி முன் நின்று
நான் பேசிய பேச்சு ..யாருமில்லாத
மேடையில் என் முதல் சொற்பொழிவு !
யாருமில்லாத மேடையில் பேசி,
பாடிய நான் இன்று யாரும் இல்லாத
ஒரு அரங்கு முன்னாலும் பேசத்
தெரிந்த ஒரு திறமைசாலி !
ஆம் …எனக்கு வேலை இன்று
ஒரு தொலைக் காட்சி செய்தி
வாசிக்கும்  மேடையில் !!!
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 19th Nov 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …”

 

உன் குரல் கேட்டால் …
————————
சிட்டுக் குருவி நீ இசைக்கும் உதய ராகம்
கேட்டு பட்டென நான் எழுந்து ஓடி வருவேன்
நான் ஒரு காலம் …அது ஒரு கனாக் காலம் !
அதிகாலை நேரம் உன்ன உணவு தேடி என்னை
நீ நாடி வந்த காலம் எனக்கு பொற்காலம் !
ஒரு பிடி அரிசி நான் கொடுப்பேன் உனக்கு
ஒரு மணி அரிசியும் இருக்காது மீதம்
நீ மீண்டும் வானில் பறக்கும் நேரம் !
சிட்டுக் குருவி உன் குரல் இப்போது
நான் கேட்டால் ஓடி வர மாட்டேன் …
பறந்தே  வருவேன் நான்… ஒரு விருந்து
உனக்கு கொடுக்க !
வர வேண்டும் மீண்டும் நீ …உன்
குரல் இசை கேட்டு துள்ளி ஆட
வேண்டும் நான் !
My Kavithai for this week in http://www.dinamani.com dated 12th Nov 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…”மேகத்தில் கரைந்த நிலா …”

மேகத்தில் கரைந்த நிலா …
————————-
நிலவு உனக்கு மேகமே மேலாடை
மேலாடை உன் முகம் மறைக்க
முழு நிலவு நீயும் இள நிலவாய்
புன்னகைப்பாய் உன் மேலாடைக்குப்
பின்னால் எப்போதும் !
மேகம் கரைந்து மழை பொழியும்
நேரம் கரை புரண்டு ஓடுது மழை
நீர் வெள்ளம் என் மண்ணில் இன்று !
கடற்கரையின்  கரையிலும் கூட
மேகக் கரைசலின் தாக்கம்.. இது
வரை நான் பார்க்காத ஒன்று !
முழு நிலவு நாளில் உன் முகம் காண
வானம் பார்க்கிறேன் நான் இன்று !
மேக மேலாடைக்குப் பின்னால்
மறைந்து இருக்கிறாயா நிலவே ?
இல்லை …நிலவு  நீயும் மேகக் கரைசலில்
கரைந்து கீழே என் மண்ணில் விழுந்து
கடல் நீரில் கலந்து விட்டாயா ? …சொல்லு நிலவே !
Source…My Kavithai as appeared in http://www.dinamani.com dated 4th Nov 2017
K.Natarajan