“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” இதை மாற்றினால் போதும் …”

இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Source::::Input from a friend of mine

Natarajan

Message For the Day…” Strive to Cultivate The Lasting Bliss of Divine Love …”

Devotion these days appears more as a way of spending one’s time rather than as the royal road to the eternal mansion of the Divine. You need not make much effort to grow grass. But to raise a useful crop you have to labour hard. Likewise, it is no great achievement to experience the trivial and transient pleasures of mundane existence; it is like growing grass. You must strive to cultivate the nectarous and lasting bliss of divine Love. Those who aspire for such love are not easy to find. All appear as devotees. But the one who has experienced the Divine Principle will not go after sensuous pleasures.

Sathya Sai Baba

” அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி …. “

அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார். ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்சனம் பண்ண வந்தாள். மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடி செட்டில் ஆகிவிட்டாள். சின்னப்பெண் M A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. ஆனால், திடீரென்று ஒருநாள் அந்தப்பெண் ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள்.

வயசுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை சொல்ல ஆரம்பித்தனர். டாக்டர்கள் எக்கச்சக்க சோதனைகளுக்குப் பிறகு “வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் சரியாயிடும்” என்றனர்.

அம்மாவுக்கோ ஏகக் கவலை! கல்யாணம் பண்ணப்போற சமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா? பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள். ஆனால், வந்த அன்று சாயங்காலம் பெரியவாளை தர்சிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள். அந்தப் பெண்ணோ, கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.

மறுநாள் காலையில் மடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா. “பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…நல்ல குழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்படி ஆயிடுத்து….காப்பாத்துங்கோ! “….

பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் மடத்துக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணினார்கள். மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே,

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…” என்று உத்தரவிட்டார்.

பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும்,

“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..” என்று கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் ! அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!

வரிசையாக பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் மயக்கமடைந்தாள். அவளை அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் பெரியவா. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள் ! அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.

மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் இஷ்டம்” என்று இருந்துவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிஸுவைப் போல், நாம் நிஸ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது சத்யம்!

Source::::www.periva.proboards.com

Natarajan

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

“ஓரிக்கையில் இருக்கும் பெரியவா பாதுகை …”

ஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம்! பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்?”

“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா? இதை பெரியவாட்ட குடுக்கறதுக்கு….”

“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் ?…”

“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”

” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்?..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

“பர்மிஷனா!…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே! அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே!..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”

“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா?…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே! ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ?…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்!

வேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது! “சித்த இருங்கோ பட்! அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை. சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான்! அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது! அவருக்கும் மெதுவாகவே பேச வராது!

இதோ! சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது! இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.

“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.

“இதானா விஷயம்! குடுங்கோ…மாமா அந்த பாதுகைகளை!” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார். கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை! உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.

அவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி! இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம்! உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் !!

இரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.

ராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க!

மஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அபிஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.

Jaya Jaya Sankara Hara Hara Sankara.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Do Not Find Fault with Others…”

Buddha taught that we should not have anger, not find others’ faults, and also not harm others, because all are the embodiments of the pure and eternal principle of the Atma. Have compassion towards the poor and help them to the extent possible. You think those who do not have food to eat are poor people. You cannot call someone poor just because they do not have money or food to eat. Truly speaking, nobody is poor. All are rich, not poor. Those whom you consider as poor may not have money, but all are endowed with the wealth of a loving heart (hridaya). Understand and respect this underlying principle of unity and Divinity in all, and experience bliss. Do not have narrow considerations like ‘these are my friends, they are my enemies, those are my relations’ and so on. All are one, be alike to everyone. This is the most important teachi ng of Buddha.

 

Sathya Sai Baba