Experience of A Devotee…” Naan Irukken Paathukkaren …”

OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.

My name is Madhu and my grand mother’s Athai’s daughter is Pollachi Paatti.

Once Pollachi Paati told Him that I am suffering and fighting for life due to the disease called Hemangioma which is an abnormal buildup of blood vessels in the skin or internal organs. The symptoms of which are a red to reddish-purple, raised sore (lesion) on the skin. The doctor had also given up and said I cannot survive.

Then Mahaswamigal told my Paati, “Naan irrukken.. Naan andha kuzhandhaiyai paathukkaren… I am there, I will take care of that child!”From the moment That Sarveshwaran laid His eyes on on me all my physical problems slowly started disappearing and I became alright gradually.
I do remember Mahaswamigal enquring about me with kindness, “How are you?” ie “eppadi irukke?” He also used to give me orange prasadam. I do not remember what I spoke to Him. But my grandmother and others say that I used to converse with Him like a friend sharing all my feelings. Like, “I have pain here, and You have to save me! Some people are asking what is on my face and are making make fun of me etc..” He just listened to me and said, “Do not worry, My child!”.

Once when I was much younger, Mahaswamigal rolled Kalkandu from the window. I quickly grabbed and touched his hand by mistake. Everyone was shocked but He did not do Snanam and said, “No problems!”.

I was ten years old When He attained Siddhi. I felt like my heart had stopped for a second when I saw Him being placed in a chair after His Siddhi.

My son was born last year. I had prayed to offer Elakkai garland at His Adhistanam after his punyajanam ceremony. But since I was awake the whole night for my baby I could not do that. So I was a little upset that I could not make the garland. When we finished dharshan at His Adhistanam, we got the blessings of Bala Periyava also.

At that time He called us again and gave us an Elakkai Maalai. I was simply stunned and I just wept. How did Bala Periyava come to know about the Elakkai Maalai?… Sarveshwara.

Then I believed in true devotion to our Gurus Mahaswamigal and our Periyavas. They will never let us down. All we have to do is to hold on to Their Lotus Feet tightly, whether we are sad or happy.

My parents, husband, my child, my extended family and every person that I meet in my life I see them in the form of Mahaswamigal. And He is right there to protect me wherever I go.

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/2172/smt-madhu-experiences-mahaswamigal?ixzz2tO82S5lW=undefined#ixzz2tXj5vrRL

“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …”

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள். பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

source::::www.periva.proboards.com

natarajan

” மஹா பெரியவர் சொன்ன மணியான வார்த்தைகள் …”

Goddess Kamakshi and Maha Periyava Maniyam ....jpg
நாம் வெள்ளைக்காரர்கள் அல்ல. ஜனவரி முதல் நாள் எந்த விதத்திலும் நமது புத்தாண்டு அல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆண்ட நாடு இது. அவர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே. ஆங்கிலத்தில் வீட்டிலேயே பேசும் தமிழ்க்குடும்பங்கள் அதை நாகரிகமாக கருதுகிறோமா? தாய்மொழி தள்ளி வைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்பு ஏன் புரியவில்லை? கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி ஏன் நகர்கிறோம்? நாம் என்ன காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் கும்பலில் ஒருத்தன் தானே.

 ஒரு உருப்படியான விஷயமும் தருகிறேனே. நான் தரவில்லை இந்த விஷயம். மகா பெரியவா உங்களுக்கு தந்தது.  

 

 

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (”சிவ” என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ”கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே” – சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள் 

 ​.

source::::input from a friend of mine…

natarajan

 

 

” இங்கே வேலை செயரானே ஒரு பையன் குண்டுன்னு …”

‘அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”

– மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்.

”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா. அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…

”பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.

சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்… ‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!

எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

”அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.

அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!

விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். ‘யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்… சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!”

– பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்….

source::::www.periva.proboards.com

natarajan..

Read more: http://www.periva.proboards.com/thread/625/thenambakkam-incidents#ixzz2t0Olcy9I

” இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!!

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6446/life-kanchi-swamis-lectures-venkatasaamy#ixzz2sWGfShHA

“அன்னதான சிவன் …”

தேப்பெருமாநல்லூர் சிவன் என்றால் சட்டென்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர்.

அவருக்குக் காஞ்சி மஹானிடம் அளவுகடந்த பக்தியுண்டு. அந்த பக்தியின் காரணமாக மஹானுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். மஹான் பல தினங்கள் உபவாசம் இருந்த காலம் அது.

இதனால் தனது உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை மஹானுக்குத் தெரிவித்து இதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

”மஹான் தொடர்ந்து உபவாசம் இருந்தால் அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால் சிறிதளவேனும் அன்ன பிட்க்ஷை ஏற்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும். சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது துணையோடு போகவேண்டும். நதிகளில் ஆழம் பார்த்துத்தான் இறங்கவேண்டும். பூஜையை முடித்தபின் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு வெகுதூரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” என்று முடித்திருந்தார்.

மஹான் அக்கடிதத்தை ஒருமுறை அல்ல; இருமுறை படிக்கச் சொல்லி புன்முறுவலோடு அதைக்கேட்டார்கள். மடத்தில் உள்ள அனைவருக்கும் சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மஹான் அவசியம் இதற்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.

ஆனால் அதற்கு பதிலாக மஹான், ஒரு நபர் மூலம் செய்தியாகத் தன் எண்ணத்தைச் சொல்லி அனுப்பினார்.

“கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடைபெறும்” என்கிற செய்தி சிவனிடம் சொல்லப்பட்ட பிறகுதான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.

மஹானிடம் இப்படி வேண்டுகோள் விடுக்க, அப்போது சிவன் ஒருவருக்குத்தான் மனோபலம் இருந்தது. இதே வேண்டுகோளை சிவன், மஹானை நேரில் பார்க்க வரும்போதும் கோரிக்கையாக வைப்பார். மஹான் அவர்பால் பரிவு கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்வார்.

சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ள மஹான் மடத்து சிப்பந்திகளை அனுப்பி இருந்தார். தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.

மஹான் அந்த சமயம் காசி யாத்திரை சென்றிருந்தார். திரும்பிய பிறகுதான் சிவனின் மறைவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

”சிவன் ஒரு சன்னியாசி இல்லை என்றாலும் துறவியைப் போல் பற்றற்ற வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் ‘பசி’ என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோட்சத்திற்குத்தான் போவார்” என்று சொன்ன மஹான், சிவனின் நற்கதிக்காக கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.

சிவன் மறைந்த பத்தாவது நாளன்று, கும்பகோணத்தில் உள்ள மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்க மஹான் ஏற்பாடு செய்தார். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத சிவன் இறக்கும் தருவாயில் தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தை முழுவதும் தர்மத்திற்காக செலவிடும்படி கூறியிருந்தார்.

அதனால் இப்பணத்தைக் கொண்டு ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி மஹான் உத்தரவிட்டார்.

அன்னதான சிவன் மீது மஹான் கொண்டிருந்த அன்புக்கு அளவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மஹானை ஆதரவோடு பார்த்து அன்புக்கட்டளை இட்ட மாமனிதர் தான் இந்த அன்னதான சிவன்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6429/annadhana-sivan-venkatasaamys-book-mahaperiva#ixzz2sKdo42zp

” குங்குமம் … அதன் மகிமை ” …

திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz2sEOUcCFk

“அதாவது ஹார்ட் ஹோலா இல்லை …அதில் ஹோல் இருக்கு …”

“என் பெண்ணுக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதை கேட்டாலே குலை நடுங்குறது” என்று முறையிட்டார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.

“அதாவது, ஹார்ட், ஹோலா இல்லை; அதில் ஹோல் இருக்கு என்கிறே?”

ஆசிரியருக்கு புரியவில்லை. கேள்வி கேட்டு பழக்கம். கேள்வி கேட்கப்பட்டு பழக்கம் இல்லை.

“ஹார்ட், W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமாக) இல்லை; அதில், H-O-L-E இருக்கு என்கிறே?”

ஆசிரியர் பெருமூச்சு விட்டார். (அவரை பெஞ்சு மேல் நிற்க சொல்லவில்லை, பெரியவா!)

“வேறே என்ன வேலை பண்றே?”

ஆசிரியர் விழித்தார். “நான் ஆசிரியத் தொழிலை தவிர வேறு வேலையும் செய்கிறேன்’ என்பது பெரியவாளுக்கு எப்படி தெரியும்? “வேறு வேலை எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டால் போகிறது! பெரியவாள் குடைந்து கொண்டா இருக்க போகிறார்கள்?

அந்த தெய்வ சந்தியில் பொய்சொல் வெளியே வர அஞ்சியது போலும்!

“தங்கம், வைரம்… வியாபாரம்…” என்று மென்று விழுங்கினார்.

பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்:

“பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட, தான – தர்மங்கள் செய்தால் போய்விடும் என்று சொல்லியிருக்கு. இங்கே ஏழைகள் வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம் கேட்கிறார்கள். நூற்றெட்டு திருமாங்கல்யம் செய்து வந்து கொடு. கேட்பவர்களுக்கு கொடுக்கலாம்…”

அடுத்த மாதமே நூற்றெட்டு திருமாங்கல்யம் கொண்டு வந்து சமர்பித்தார், ஆசிரியர் பணி செய்யும் தங்க வியாபாரி.

“Good – hearted ன்னு இங்கிலிஷ்லே சொல்லுவா. நீயும் உன் புத்திரியும் good – hearted!” என்றார்கள் பெரியவாள்.

அப்புறம், பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன மருந்து வேண்டும்?

தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?

ஆசிரியரின் பெண் சௌபாக்யவதியாக இருக்கிறாள் – whole hearted ஆக!

source::::www.periva.proboards .com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/943/hole-heart#ixzz2s5N0GAWa

” பிரெஞ்சு பாஷைல ‘சீ ப்ரே ‘ என்றால் என்ன அர்த்தம் ! …”


ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள்
முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின்
பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக
மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும்
அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய
அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.

ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: “நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும்
எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை,
அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க
ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்?
அந்த மாதிரிக் குடுக்கலியே! “ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”ன்னு
‘லா’வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி
ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட்
ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு
லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.
ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும்
வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.

ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத
ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி
சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம்,
கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப்
பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான்
இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.
நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப்
பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல
சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா
பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்”- அவருக்கே உரித்தான
ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம்
பிரார்த்திக்கிறார்.

அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை
ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.

” ‘ஸீப்ரே’-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி
உச்சரி்ப்புப் பாத்தா ‘ஸைப்ரஸ்’னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச்
வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங்
ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த
வார்த்தை ஸ்பெல்லிங்படி ‘ஸைப்ரஸ்’ன்னு ஆகும்.ஆனாலும்
ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு,
C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். ‘ஸீப்ரே’க்கு C,Y, அப்புறம்
ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற
ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே:
U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்…E க்கு அப்புறம்
கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த ‘S’ உச்சரிப்புல வராது.
‘ஸைலன்ட்’ ஆயிடும்.

ஃப்ரெஞ்ச் பாஷைல ‘ஸீ-ப்ரே-ன்னா ‘ரொம்பக் கிட்டே”னு அர்த்தம்.
ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும்
கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான்
மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்.”   

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/455/knowledge-on-laws#ixzz2rfJrmrmS

” பல்லவ கடிகாரம் பார்த்தாயா …? ” !!!

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவர் சொல்கிறார்:

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, “நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். “நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.

“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன். “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.

மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன். “அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார். “பார்த்தேன்” என்றேன். “அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார்.

பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது.

——————————————————————————-

நாமும் அதைப் பார்த்து ரசித்து வியக்கலாமா. இதோ அந்த சிற்பத்தின் நிழற் படம்

source::::www.perivaproboards .com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6348/#ixzz2rN6GL9Sw