“குழந்தை … நீ எனக்கு உன் ஆட்டோகிராப் போட்டு கொடு ” !!!!

ஸ்ரீபெரியவாள் மேனாவுக்குள் அமர்ந்திருந்தார். குட்டிப் பையனொருவன் குட்டி நோட்டுப் புத்தகமொன்றை அவர் முன் நீட்டினான்.

“ஆடோக்ராஃப் போட்டுத் தரணும்” என்று வேண்டினான்.

பெரியவாளோ துறவறம் பூண்ட அந்தப் பதின்மூன்றாம் வயதிலிருந்து கையெழுத்திடுவதில்லை என்று ஜன்ம விரதம் காத்தவராயிற்றே!
அதனால் சட்டென்று அவர் வாயிலிருந்து, “நான் ஸ்வாமிகளான நாள்லேந்து கையெழுத்துப் போடறதில்லையேடா, கொழந்தே!” என்ற வார்த்தைகள் வந்து விட்டன.

பல்துறைப் பிரமுகர்களிடமிருந்து கையொப்பம் பெற்று அதற்குச் சிகரமாக ஸ்ரீமஹா பெரியவாளுடையதையும் பெறுவதற்காகப் பேராவலுடன் வந்த குழந்தையின் நெஞ்சு ஏமாற்றத்தில் பஞ்சாகிவிட்டது. அழுதேவிட்டான் பையன்.

ஐயனுக்கு – சமயோசிதத்தில் அவருக்கு நிகர் யாருண்டு? – ஒரு வழி தோன்றிவிட்டது.

“அழாதேப்பா! இப்ப இதுவரை யாரும் போடாத மாதிரி ஒனக்கு எப்படி முத்ரை குத்தி ஆடோக்ராஃப் போட்டுத் தரப் போறது பாரு!” என்றார்.

விநோத உணர்வில் பாலனின் விழிகள் விசாலித்தன.

கிங்கரர் ஒருவரிடம், “ஏஜெண்டை அழைச்சுண்டு வா” என்றார்.

ஸ்ரீமடத்துப் பிரதம அதிகாரியான ஏஜெண்ட் அழைத்து வரப்பட்டார்.

பெரியவாள் அவரிடம், “இந்த நோட் புக்ல என் பேரை எழுது. ஒன் கையெழுத்தும் போடு. அதோட நம்ப மடத்து ஸீலும் குத்தி எடுத்துண்டு வா” என்றார்.
ஏஜெண்ட் சென்று அவ்வாறே செய்து நோட்டுப் புத்தகத்துடன் திரும்பி வந்தார்.

ஸ்ரீசரணர் மந்தஹாஸத்துடன் அதை பாலனுக்கு ஆசிபூர்வமாகக் கொடுத்தார்.

ஏகப்பட்ட சாங்கியங்கள் செய்யப்பட்டுப் பெரியவாளின் ஆடோ(?)க்ராஃப் கைக்கு வந்ததில் சிறுவனின் ஆனந்தம் சொல்லித் தரமன்று. நாட்டியமாடாத குறைதான்!

அந்தக் குறையுமில்லாமல் அவன் குதித்தே ஆடும்படி அப்போது இன்னொன்றும் செய்தார் அருட்பெரு வள்ளல்.

பாலனிடம், “ஒனக்காக நான் ஸ்பெஷல் கையெழுத்துப் போட்டேனோல்லியோ? பதிலுக்கு நீயும் எனக்கு ஒன் ஆடோக்ராஃப் போட்டுக் குடுக்கணும். விஸிட்டர்ஸ் புக்-னு (ஏஜெண்டைக் காட்டி) இந்த மாமா வெச்சிருப்பார். அவரோட போய் அதுல ஒன் கையெழுத்தைப் போட்டுட்டு ஆத்துக்குப் போ!” என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி மஹா மடத்தின் வி.ஐ.பி. விஸிட்டர்களில் வாண்டுப் பையனுக்கு இடமளித்தது அந்த அத்வைத அன்பிதயம்!

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4984/maha-periyava-children-13/#ixzz2evl5eqWp

” தெரிஞ்சே தப்பு பண்ணிட்டேன் …. மன்னிச்சுடுங்கோ ” !!!!

சென்னை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீசரணர் முகாமிட்டிருக்கிறார். ஒரு சிறிய பெண் அவரிடம் ஸ்ரீராமநாமம் எழுதிய நோட்டுப் புத்தகத்தை ஸமர்ப்பித்து வெள்ளிக் காசு கேட்டது.

ஒரு லக்ஷம் நாமம் எழுதினால் பொற்காசும், அதில் எட்டில் ஒரு பங்கான 12,500 நாமம் எழுதினால் வெள்ளிக்காசும் ஸ்ரீசரணர் வழங்கி வந்த காலம் அது.

சிறுமி கேட்டவுடன் பெரியவாள் வெள்ளிக் காசு கொண்டுவரச் சொல்லி அதற்கு ஈந்தார்.

சிரித்துக் கொண்டு காசுடன் ஓடிய சிறுமி சிறிது நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக்கொண்டு திரும்பி வந்தது.

“ஏம்மா அழறே?” என்று பரிவுடன் கேட்டார் ஸ்ரீசரணர்.

“காசு எப்படியோ காணாமப் போயிடுத்து” என்று விக்கிற்று குழந்தை.

”அழாதேம்மா!” என்று கனிந்து சொன்ன பெரியவாள், “அது ஸரி, நீ எவ்வளவு நாமம் எழுதியிருந்தே?” என்று கேட்டார்.

“8,500” என்றது குழந்தை.

“12,500 எழுதினாதான் காசு தரதுன்னு ஒனக்குத் தெரியுமோன்னோ?”

“தெரியும், தெரிஞ்சேதான் பொய் பண்ணிட்டேன். தப்புதான். மன்னிச்சுடுங்கோ!”

சின்னஞ்சிறுமி தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டியதில் ஸ்ரீசரணரின் மனம் உருகிவிட்டது!

“பரவாயில்லேம்மா! இனிமே அப்படிப் பண்ணாட்டா ஸரிதான். இப்படி ஒக்காரு” என்று பிரியமாகச் சிறுமியை அருகே உட்கார்த்தி வைத்துக் கொண்டார்.

அருகே இருந்தவர்களைப் பார்த்து, “நீங்க எல்லாரும் இப்பவே ராம நாமா எழுதி ஸொச்சம் நாலாயிரத்தையும் ‘கம்ப்ளீட்’ பண்ணுங்கோ. இந்தக் கொழந்தையும் எழுதட்டும். நீங்கள்ளாமும் எழுதுங்கோ” என்றார்.

எல்லோருக்கும் காகிதம், எழுதுகலம் வழங்கப் பட்டது. அந்த ஒரு பாலகியின் தவற்றினாலேயே அன்று பல பேருக்கு திவ்ய நாமம் எழுதும் பாக்கியத்தைப் பெரியவா அருளினார். பலர் எழுதியதால் விரைவிலேயே நாலாயிரம் பூர்த்தியாயிற்று.

பாலகியை அழைத்தார் மாமுனி. “ஒனக்கு வெள்ளிக் காசு வேண்டாம். தங்கக் காசே தரேன்” என்று மஹா பெரிய போனஸாகப் பொற் கழங்சு ஒன்றை அந்தப் பிஞ்சின் குஞ்சுக் கரத்தில் போட்டார் குணகுஞ்சரர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

source:::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4970/maha-periyava-children-12#ixzz2eNFgII00

An Auspicious Greetings on Ganesh Chaturthi Day….

 

source :::::

Respected moderator Smt Sumi has sent us this wonderful greeting to be shared with all our members on the great occasion of Vinayaka Chaturthi 2013 thro http://www.periva.proboards.com .Please note that this greeting contains a beautiful discourse of Sri Maha Periva as well, and would be a visual and audio treat to all of you. I sincerely hope you get to see this on this auspicious day,

Read more: http://periva.proboards.com/thread/5084/ebook-vinayaka-chaturthi-special-edition?page=1&scrollTo=9265#ixzz2eN7JzHuz

natarajan

விநாயகர் பூஜைக்கு உகந்த இலை , மலர் ….

இலைகளும், பலன்களும்

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

முல்லை இலை – அறம் வளரும்

கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்

வில்வம் இலை – இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்

இலந்தை இலை – கல்வியில் மேன்மை அடையலாம்

ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப் பெறும்.

வன்னி இலை – பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்

நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

கண்டங்கத்திரி – வீரமும், தைரியமும் கிடைக்கும்

அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்

எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

மருதம் இலை – மகப்பேறு கிடைக்கும்

விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு கைவரப் பெறும்

மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்

தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்

மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப் பெறும்

அரசம் இலை – உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்

ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்

தாழம் இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.

அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5082/vinayakar-benefits-archanai-different-leafs/#ixzz2eI92XUMY

D for Devi ..I for Ilango ..P for Prahaladha…and A for Anjaneya !!!

ரா.கணபதி அண்ணாவின் “மைத்ரீம் பஜத’ புஸ்தகத்திலிருந்து….

மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.

சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆங்ஜநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4964/maha-periyava-children-11/#ixzz2e2CyXn2j

“ரோஜாப்பூ இன்று குழந்தைகளுக்கு”….மகாபெரியவர் !!!

நாலைந்து கூடைகள் நல்ல ரோஜா மலர்கள் ஒரு தினம் ஸ்ரீமடத்தில் ஸமர்ப்பணமாயிற்று. ஸ்ரீசந்திர மெளளீச்வரர் பூஜா விமானம் அற்புதப் புஷ்பாலங்காரம் பெறும் எனப் பணியாளர்கள் எண்ணினர்.

அப்போது ஒரு பள்ளிக் குழந்தை கோஷ்டி வந்தது. அவர்களுக்குத் தரிசனம் அளித்த அருட் தாத்தா ரோஜாக் கூடைகளைக் கொண்டுவரப் பணித்தார்.

”இன்று என்ன, வழக்கமில்லா வழக்கமாகக் குழந்தைகளுக்குப் புஷ்ப விநியோகம்?” என்று பாரிஷதர்களுக்குப் புரியவில்லை.

குழந்தைகளின் வாயாலேயே அவர்களுக்கு குருநாதன் புரிய வைத்தார்.

“இன்னிக்கு என்ன விசேஷம்:” என்று அவற்றைக் கேட்டார்.

“நேருஜி பிறந்த நாள்” என்று அவை ஒருகுரலில் கூறின.

“அவருக்கு ரொம்பப் பிடிச்சது என்ன?”

“ரோஜாப்பூ, ரோஜாப்பூ!”

“ஒங்களுக்கெல்லாமும் அவர் ஞாபகமா இன்னிக்கு ரோஜாப்பூ!”

இப்படியாகத்தானே ‘குழந்தையும் தெய்வமும்’ என்ற வாக்குப்படி, பூஜைக்கு என எண்ணப்பட்ட மலர்களை அரும்புப் பருவத்தினருக்கு விநியோகித்தவர், அருள் பழுத்த கனியான ஸ்ரீசரணர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4947/maha-periyava-children-9/#ixzz2dQQwyZXF

“அவனைப் பற்றிய எல்லாமே மதுரம் தான் ” மதுரா நாதன் பற்றி மகாபெரியவர் !!!


ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில்ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று நடுநிசியில் பிறந்தார்.

நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்.
நமக்கு உத்தராயணம் அவர்களுக்கு பகல்.
தக்ஷிணாயணம் அவர்களுக்கு ஒரு இரவு.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகிறது. இம்மாதிரியே நம்முடைய ஒரு மாதம் பித்ருகளுக்கு ஒரு நாள் ஆகிறது.

நமது சுக்ல பக்ஷம் அவர்களுக்கு பகல், க்ருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது.

அஷ்டமி திதி நடுவில் வருவதால் அன்று அவர்களுக்கு நடுநிசி பொழுது ஆகிறது. இதனால் என்ன ஏற்படுகிறது, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் எல்லா தினுஸிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருட்டு நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரகாலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவருடைய பெயரும் கிருஷ்ணன்.

கிருஷ்ண என்றால் கருப்பு என்று பொருள்.அவனுடைய மேனியும் கருப்பு. இப்படி ஒரே கருப்பு மயமான ஸமயத்தில் தானும கருப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே ஞானஒளி.

காளமேகங்களுக்கு இடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றியதான ஒளி.

ஞான ஒளி ஆதலால் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக்கொண்டு இருக்கிறது.அஞ்ஞானத்தால் இருண்டு இருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும்.

உடலுக்கு ஒளி அளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கு எல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன்.

தென்நாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான்.அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது.

அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்ககள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத்பாகவதம் புரான சிரேஷ்டமாக விளங்குகிறது.

அவனைப்பத்தின அத்…தனையுமே மதுரந்தான்!” தன்னுடைய மதுரமதுரக் குரலில், மதுரமான சிரிப்போடு மதுராநாதனைப் பற்றி பெரியவா சொன்னார்….

“அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்ட்யதேசத்து மதுரை இல்லே! இங்கே மதுரமயமா அம்பாள் இருக்கா……அவகிட்டேர்ந்துதான் சங்கீதம் பொறந்தது. நான் சொன்னது வடமதுரை. அங்கே அவன் பொறந்த ஒடனேயே அப்பாக்காரர் வஸுதேவர் கொழந்தையை தூக்கிண்டு கோகுலத்துல கொண்டு போயி விட்டுட்டார். யமுனையோட மேலக்கரைல கோகுலம்; பிருந்தாவனம்..ல்லாம் கீழக்கரை. ஆத்துல அளைஞ்சுண்டே தாண்டிப்போய் கோகுலத்ல யசோதைக்கு பக்கத்ல விட்டுட்டு, அப்பத்தான் அவளுக்கு பொறந்திருக்கற பொண் கொழந்தையை தூக்கிண்டு ஜெயிலுக்கு திரும்ப போய்ட்டார்….இங்கே எல்லாமே திருட்டு மயம்..” பெரிதாக சிரித்தார்.

….”அங்க ஜெயில் காவலாளிகளுக்கு தெரியாம திருட்டுத்தனமா வெளில வந்தது, இங்க கோகுலத்ல ப்ரஸவிச்சவளுக்கும் சரி, ப்ரஸவம் பாத்தவாளுக்கும் சரி, பொறந்தது பொண் கொழந்தைன்னோ…அதுக்கு பதில புள்ளைக்கொழந்தையை வஸுதேவர் வெச்சுட்டு போனதோ, தெரியாது! இங்கேயும் திருட்டுத்தனம்! க்ருஷ்ணன்..ன்னாலே ஒரே திருடு.ங்கறோமே! வெண்ணையையும் திருடினான்….மனசையும் திருடினான்! நவநீத சோரன், சித்த சோரன்…ங்கறோமே…..அவனுக்கு அந்த திருட்டு புத்தி எப்டி வந்துதுன்னா…..அவனோட அப்பா அவன் பொறந்த ஒடனேயே பண்ணின திருட்டுத்தனந்தான், அவனுக்கும் பிதுரார்ஜிதமா வந்துடுத்துன்னு தோண்றது!…” கண்ணனின் திருட்டில் ஊறிய புன்னகை பெரியவா முகத்தில் சோபை பெற்றது…….தொடர்ந்தார்….

“ஆனா, அப்டி நெனைக்கறது செரியில்லே! சும்மாக்காக வேடிக்கை பண்ணினேன். வஸுதேவர் பாவம், ஸாது! கொஞ்சங்கூட திருட்டுபொரட்டே தெரியாதவர்! அவரை திருட்டுத்தனம் பண்ணப் பண்ணினதே இந்தக் கொழந்தைதான்! அது பொறந்த ஒடனேயே காவலாள்ளாம் மயக்கம் போட்டா மாதிரி தூங்கினதாலதான் அவர் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு போக முடிஞ்சுது…ஜெயில் பூட்டு தானா தொறந்துண்டது……அங்க கோகுலத்துலேயும் எல்லாரும் தூங்கி வழிஞ்சதாலதான் அவர் கார்யத்தை சௌகர்யமா முடிக்க முடிஞ்சுது. இதெல்லாம் பாவம் அந்த அப்பாவி மனுஷரா பண்ணினார்? அவருக்கு பிள்ளையா வந்தானே ! ஒரு அப்பன்! அவன்தான் இத்தனையும் மாயாவித்தனமா பண்ணினது!

அயோத்திக்கப்புறம் சப்த மோக்ஷபுரில, மதுரா இருக்கு. அவன் அவதாரம் பண்ணின ஊருக்கே அவனோட ஸ்வபாவம் இருக்கே! க்ருஷ்ணன்..ன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா….தித்திப்பு! அப்டியொரு தித்திப்பு அவன்! மதுரம்ன்னு சொல்லறச்சே கூட “dhu “கொஞ்சம் கடுமையா இருக்கு. இன்னும் நைஸா “ஸ்வாது”ன்னும் ஒரு வார்த்தை இருக்கு. “ஸ்வாது” லேர்ந்துதான் “ஸ்வீட்” வந்தது…..இப்போ, நான் ஒரு விஷயம் செரியா சொல்லலைனா….கொஞ்சம் apologise பண்ணிக்கறா மாதிரி சரி பண்ணிக்க பாத்தேனோல்லியோ?…கிருஷ்ணனா இருந்தா, அப்டி பண்ண மாட்டான்! அவன் பண்ணறதுல… ஸரி, ஸரியில்லை..ங்கற ரெண்டே கெடையாது! அந்த வார்த்தைகளே அவனோட அகராதியில ஏறாது! அவன் பண்ணற சகலமும் மதுரம், மதுரம்…ங்கற ஒண்ணுதான்! மத்தவா பண்ணினா ஸரியில்லாததெல்லாங்கூட அவன் பண்ணறப்ப, மதுரந்தான்! இதை நெனைச்சுத்தான் பரம பக்தரான ஸ்ரீ வல்லபாச்சார்யார்… ங்கறவர் “மதுராதிபதே அகிலம் மதுரம்”..ன்னு பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்.”
————————–

ஜென்மாஷ்டமியன்று ஸ்ரீ ராதா ஸமேத க்ருஷ்ணன் எல்லாருக்கும் சகல ஸௌபாக்யங்களையும் அனுக்ரஹிக்க என் ஸத்குருநாதரை ப்ரார்த்திக்கிறேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே|
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே||

Courtesy: Smt Prema Subramaniam in http://www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/1950/periva-on-gokulashtami#ixzz2dEGMA51R

திருப்பதி கோயில் அர்த்த மண்டபம் …மஹா பெரியவர் ….ஒரு Flashback !!!!!

திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!

சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே!

நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், “இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?” என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று. ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்.. பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.

“என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?..” அமைச்சர் கேட்டார். “என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?..” ஸ்தபதி கேட்டார்.

“தாராளமா…..””எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா….மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்… அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த
இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!…”

எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!

அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!

பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, “அங்கேர்ந்து வரயா?” என்றார். “ஆமா….பெரியவாகிட்ட முக்யமான விஷயம்…..” அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,

“இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! …” ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், “இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்…ன்னு சொல்லு..”

அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா…ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, “பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்…என்னோட பாக்யம் ” என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.

“இப்போ சொல்லு….” எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.”அப்பிடி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?..” தெரியாதவர் மாதிரி கேட்டார்

“அர்த்த மண்டபத்ல கைவெச்சா…பெருமாளோட சக்தி பூரா போய்டும்.. .பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்…ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா…ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா… அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்..”
பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!

“ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!..” ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, “என்ன ஸ்தபதி ஐயா !…இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!..” என்றார். “ரொம்ப அவசரம்…நான் அவரைப் பாக்கணும்…”

“appointment இருக்கா?””இல்லையே..” “அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!..”ரொம்ப அவசரம்…நான் பாத்தே ஆகணுமே!..”

ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்… “ஐயா…ஒண்ணு செய்யலாம்…சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா…..காலேலதான்!..”

ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக…..”என்ன கணபதி? இத்தனை காலைல?” “உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்….” “என்னது? வாங்க…” என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!

“திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!” என்று எடுத்த எடுப்பில் “கண்டேன் சீதையை!” மாதிரி போட்டு உடைத்தார். “என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?…” அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, ” பெருமாளோட சக்தி பூரா போய்டும்” என்று நிறுத்தினார்.

முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு “ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!..” அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்…… “முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?…”

“அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்…” இழுத்தார். “திருப்பதியில் என்ன நடந்தது…ன்னுதான் கேட்டேன்!..” கத்தினார் முதமைச்சர்.

அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார். “மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!” என்று ஒரே போடாகப் போட்டார்!

“திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்…இது என் உத்தரவு!..” பட்டென்று போனை வைத்தார். “கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க..” வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.

வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன….. “ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!”…..

பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான் !

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்…..

source:::::input from a friend of mine

natarajan