“எங்கேயும் போகலே பாட்டி …இங்கேதான் இருக்கேன் “

இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது——ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து—ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்—உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

source:::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4476/#ixzz2V9VE9zyd

” இந்த தங்க வில்வத்தை எனக்கே கொடுத்து விடு ” கேட்டார் மகாபெரியவர். !!!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

சென்னையில் தங்கியிருந்த காலகட்டத்தில், தம்புச் செட்டித் தெருவிலிருக்கும் சங்கரமடம், திருவொற்றியூர் கோயிலிலுள்ள சிலா சாஸனங்கள், சுவர்ச் சித்திரங்கள் ஆகியவற்றைப் படம் எடுக்கச் சொல்லி உத்தரவாயிற்று.

‘ஆதிசங்கரர், காஞ்சி க்ஷேத்திரத்தில் ஸர்வக்ஞ பீடாரோஹணம் செய்து, கடைசிவரை அங்கேயே தங்கியிருந்தார்’ என்பதற்கான பல சான்றுகளுடன், திரு.ரமேசன் (இ.ஆ.ப.) எழுதிய புத்தகத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றன.

பெரியவாள், சென்னையை அடுத்த காட்டுப் பள்ளியில் தங்கியிருந்த காலம்.

பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் செய்யப்பட்ட போது, தங்கத்தாலான வில்வங்களை அபிஷேகம் செய்தார்கள். அதில் ஒரு வில்வத்தை வாங்கிக்கொண்டு வந்திருந்தார் என் தாயார். பெரியவாள் கையில் கொடுத்து, அவர்கள் ஆசீர்வாதத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர விருப்பம்.
பெரியவாளிடம் அந்தத் தங்க வில்வத்தை சமர்ப்பித்தார் என் தாயார்.

“இதை எனக்கே கொடுத்துவிடேன்!…”

என் தாயாருக்கு உடம்பு சிலிர்த்தது.

“பதிலாக, நான் உனக்கு ஒரு புஷ்பம் தருகிறேன்..!”

பெரியவா கொடுத்த புஷ்பத்தை, நவரத்தினமாகக் கருதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என் தாயார்.

இவ்வாறு பல பேர்களிடம், குந்துமணி குந்துமணியாகத் தங்கம் பெற்று, ஒரு சொம்பு செய்து, அதில் தேனை நிரப்பி, பூஜை – மந்திர ஜபம் செய்யச் செய்து (ஆஞ்ஜநேய மந்திரம் என்று நினைவு). பாரதநாட்டின் வடமேற்கு எல்லையில் நடந்து கொண்டிருந்த போரில், பாரத வீரர்களுக்குத் தைரியம் ஊட்டுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அந்தப் போரில் நமக்கே வெற்றி கிடைத்தது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

 

source:::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4424/golden-vilvam/#ixzz2UwLriLNs

“பூந்தி லட்டுக்கு மார்க் 50” !!!…மார்க் போட்டது மகாபெரியவர் !!!

மூலம் : மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

நூற்றுக்கணக்கான சுவாஸினிகளுக்கு (சுமங்கலிகளுக்கு) உயர்ந்த முறையில் விருந்தளிக்க வேண்டும் என்று விருப்பம். பெரியவாளிடம் அனுமதி பெற்று, பல பேர்களிடம் நன்கொடை வசூல் செய்து, விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள் சில மாதர்கள்.

மடிசார் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலிகளைப் பார்ப்பதே, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அத்தனை பேர்களும் அம்பிகையின் திருவுருவங்கள் என்று பாவம். சுவாஸிந்யர்ச்சனப்ரீதாயை நம: – என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

இலையில், என்ன இனிப்புப் பரிமாறுவது என்று சர்ச்சை. பூந்தி லட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

சுமங்கலிகள் உணவருந்திக் கொண்டிருக்கும் காட்சியைக் காண வந்தார்கள் பெரியவாள்.

ஒரு பூந்திலட்டைக் கையில் எடுத்தார்கள். “இதற்கு நான் ஐம்பது மார்க்தான் போடுவேன்” என்றார்கள்.

நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய (என் தாயார் உட்பட) அத்தனைப் பெண்மணிகளுக்கும் , பெரியவாளின் ரிமார்க் பேரதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு சிரத்தையுடன் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள்? பெரியவாளே குறை காணும்படியாக என்ன தவறு நேர்ந்திருக்கிறது? – என்று கலக்கம் அடைந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் போட்டிருக்கலாமோ? என்று ஒரு சந்தேகம்.

பெரியவாள், அவர்களை வெகுநேரம் தவிக்கவிடவில்லை. உடனேயே, “ஏனென்றால், லட்டுவிலுள்ள மணிகளெல்லாம் உருண்டையாக இருக்கணும்; தட்டை தட்டையாக இருக்கக் கூடாது. இந்த லட்டுக்களில், உருண்டை மணி பாதி அளவு; தட்டை மணி பாதி அளவு. அதனால், பாதி மார்க்!” என்றாரே பார்க்கலாம்.
கொள்ளைச் சிரிப்பு!

பெரியவாளுக்குச் சிந்திக்க வைக்கவும் தெரியும்; சிரிக்க வைக்கவும் தெரியும்! இதற்கு ஐம்பது சதவீதம் – அதற்கு ஐம்பது சதவீதம் மார்க் போடலாம்.
இல்லை, இல்லை, இரண்டுக்குமே சதம் – சமம் தான்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4443/periyavaas-sense-humour#ixzz2UlyeWxV1

” வயதான அம்மாவை விற்கலாமா ?”…பட்டென கேட்டார் மகாபெரியவர் ….

l
ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.
தொண்டர்களுக்கு புரியவேயில்லை.
தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?’தாயாரை விற்க கூடாது‘ என்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.’அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு.எந்த மாநிலத்தில்? ஹிமாச்சல் பிரதேசத்திலா? அருணாச்சல் பிரதேசத்திலா? நம்ம தமிழ் நாட்டில் தான்…தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’
பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.
‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்…அநியாயம்…சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’
பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் – பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.
பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.
நன்றி: ஸ்ரீமடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள், கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்…

Natarajan

“பிள்ளையார் கண் திறந்து விட்டார் “….சொன்னார் மகாபெரியவர் !!!

Source: Email from our respected member Sri G Vaidyanathan

http://www.periva.proboards.com

Natarajan

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்….. தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி “பூர்ணகும்ப” மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, “பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்….கருண பண்ணணும்!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், “கோயில் எங்கே இருக்கு?” என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், “இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!” என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், “கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?” என்று கேட்டார்.

” இன்னும் ஆகலீங்க சாமி” என்றார் தலைவர்.

” அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே…ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; “எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , ‘அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!”

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

” அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே…இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ.”

உடனே பஞ்சாயத்துத் தலைவர், “இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..” என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, “இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா “ஸ்பஷ்டமா” பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே” என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; “இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..” மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் “மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை’ கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். “ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க…. இப்ப என்ன பண்றது?”

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், “தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் “தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?” என்று கேட்டான் பவ்யமாக.

” ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!” என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; “ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] ‘புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு’னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

” இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் ‘ன்னு சொல்லிகிட்டே,’புள்ளையாரே,கண்ணத்தொற… புள்ளையாரே ,கண்ணத் தொற!’னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, “டொக்கு..டொக்குனு” உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..”புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு “னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு….எங்களை மன்னிச்சுருங்க.”

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக “நேத்ரோன் மீலனம்” [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; “புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ….போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.”

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

Read more: http://periva.proboards.com/thread/4379/#ixzz2U2DTOEps

ஆபத்பாந்தவான் நம் மகாபெரியவர் !!!!

அவதார புருஷர்- பெரியவா

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..
“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Read more: http://periva.proboards.com/thread/4348/avathara-purushar-kanchi-maha-periva/#ixzz2TkXfRKHM

Natarajan