படித்து ரசித்தது …” மனம் தேடி தவிக்கிறது …”

 

வளர்ந்தாலும் உணவை
வாயில் ஊட்டிவிடும்
அம்மாவையும்

வரும்வரை வாசலிலேயே
தூங்காமல் காத்திருக்கும்
அப்பாவையும்

வாஞ்சøயாய்த் தலைகோதி
முத்தமிட்டு நெட்டி முறிக்கும்
பாட்டியையும்

டி.வி. ரிமோட்டுக்கு தினமும்
சண்டையிடும் அருமைத்
தம்பியையும்

ஊர்வம்பு பேசியபடியே
வீட்டைக் கூட்டிப் பெருக்கும்
கண்ணம்மாவையும்

“உன் கையாலே போணி பண்ணு’ என
உரிமையுடன் கேட்கும்
பூக்காரம்மாவையும்

மனம் தேடித் தவிக்கிறது…
அமெரிக்க தேசத்தின்
அந்நிய முகங்களிடையே….

– ஜி. ராஜி, சென்னை  in Mangaiyar Malar

natarajan

” அவ்வை பாட்டியின் அகந்தையை அகற்றிய ஆறுமுகப் பெருமான் …”

அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்….
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.

அதே பாட்டிதான்   கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்

ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.

கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.

அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.

ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.

அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.

இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.

கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது

நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?

கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.

க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .

தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.

ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.

அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.

அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்

அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்

அவ்வை திடுக்கிட்டாள் .

பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்

எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்

சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன

பழங்களை பொருக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.

அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.

உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.

ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.

அப்போது சிறுவனே நீ யார் ?

தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.

உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்

இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .

அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.

அந்த அறிவுரை நமக்கும்தான்.

 

source:::: Murugan Bhakti

natarajan

“உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- “…

 

கோப்புப் படம்

கோப்புப் படம்

‘யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?’

‘காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்… அப்படி என்ன வேலையோ?!

‘ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!’

‘இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?’

உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.

ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.

எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? ‘என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்’ என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.

நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.

அதிலும் பி.பி.ஓ. இருக்கிறதே – பொதுவாக கால் சென்டர் என்று சொல்லப்படுவது – இதில் வேலை பார்ப்பவர்களின் பொழுது குறைந்த பட்சமாக இரவு ஏழு மணி அளவில்தான் தொடங்குகிறது. அடுத்த நாள் அதிகாலை சுமார் மூன்று நான்கு மணி வரை வேலை நேரம் செல்கிறது. திரைப்படத்தில் காட்டுவது போல் சும்மா ஜாலியாக கும்மாளம் அடிப்பது, ஒகே DUDE, சூப்பர் buddy என்று பீட்டர் விடுவது போல் எல்லாம் இந்த மாதிரி கம்பெனிகளில் கிடையாது.

ஒவ்வொரு நாளும் எப்போது நிறுவனத்தை விட்டு கிளம்புவோம் என்று இங்கு யாருக்கும் தெரியாது. எப்போ என்ன வெடி வெடிக்குமோ என்ற பயம் தான் ஒவ்வொரு நாளும் இங்கு ஆள்கின்றது.

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஒவ்வொரு மனிதரும் பல மன உளைச்சல்களை சுமந்துதான் வெளிவருகின்றனர். இதில் பெண்கள் பெறும் மன உளைச்சல் இருக்கிறதே மோசம். இரவு ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு மணி, மூன்றுமணி இப்படி பல வேளைகளில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இவர்களுக்கு நிகழ்கின்றது.

தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவை, தேனீ, கொச்சின், நெல்லூர், குண்டூர் இப்படி பல ஊர்களிருந்து பல மாநிலங்களிருந்து பெண்கள் நம்மூரில் வந்து வேலைப் பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக இப்பெண்களால் இவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களும் இவர்கள் குடும்பங்களும் சந்திக்கின்ற வேதனைகள் இருக்கிறதே, அது ஏராளம்.

வேறு ஊரில் வசிக்கும் அப்பாக்கள் தன் மகள் ‘ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்ப்பா’ என்ற செய்தி கேட்ட பிறகே உறங்குகிறார்கள், தெருமுனையில் இரவு மூன்று மணிக்கு தன் தங்கைக்காக காத்திருக்கும் அண்ணன்களுக்கும், வீட்டில் சாப்பாட்டை வைத்து கண் விழித்துக் காத்திருக்கும் அம்மாக்களுக்கும் எத்தனை பேர் தெரியுமா? அந்த இரவு நேரத்தில் தன் வீட்டுப் பெண் வீடு திரும்பவில்லை, இனி அவள் வரவே மாட்டாள் என்ற செய்தி வந்தால் இவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னும் பல அம்மாக்கள் தன் பிள்ளையை வீட்டில் உறங்க வைத்து, ஏதோ ஒரு பொழுதில் வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்குத் தரும் முத்தத்தில் தான் உயிர் வாழ்கிறாள். வேலைக்கு சென்ற அம்மா வீட்டிற்கு திரும்ப மாட்டாள் எனும் செய்தியை அக்குழந்தைக்கு எப்படி கூறப்போகீறீர்கள்?

இரவில் தனிச் சாலையில் ஒரு பெண் நடந்து சென்றாலே அவள் ஒரு போகப்பொருளாகவே பலநேரங்களில் பார்க்கப்படுகிறாள். இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!

ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும். என் பெண் காணவில்லை என்ற பதறி வரும் அப்பாவிடம் எங்கேயாவது ஓடி இருப்பாள் என்று கூறும் வாய்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும்.

பெண்ணைப் பெற்றவருக்கு நெஞ்சு ஒவ்வொரு நாளும் பக் பக் என்று அடிக்கின்றது, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று. உங்களின் சதைப் பசிக்கும், வன்மத்திற்கும் அனாவசியமாக ஒரு குடும்பத்தை இரையாக்காதீர்கள்!

அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!

எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?

ஐ.டி. நிறுவனங்களின் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள், பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் அல்ல… கீழ், நடுத்தர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உமா மகேஸ்வரிகள் அவர்கள்.

ஹரி, ஐ.டி. நிறுவன ஊழியர் – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

 source::::::The Hindu..Tamil

natarajan

” பொங்கலோ பொங்கல் …பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல் …”

பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல்
போல் தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்..! - பொங்கல் வாழ்த்து!
பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் போல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!
தரணியை தழைக்கச் செய்யும்
தை மகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி சொல்லும் நல்மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்…
நன்மைகளே விளையட்டும்..!
புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
source:::www.malaimalar.com
natarajan

தமிழில் இந்த ஆண்டின் சொல் எது?

அக்டோபர் 1984. இந்திரா காந்தி இறந்தபோது ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி ‘இந்திரா காந்தி அசாசினேட்டட்’ (Indira Gandhi Assassinated). அதற்கு முன் அசாசினேஷன் என்ற சொல் இருந்திருந்தாலும், இந்தியாவில் அப்போதுதான் பலருக்கும் அச்சொல் தெரியவந்தது. இச்சொல்லுக்கு அரசியல் அல்லது சமய காரணங்களுக்காக (ஒரு முக்கியமான நபரை) கொலைசெய்தல் என்பது பொருள். 1981வாக்கில் எகிப்து அதிபர் அன்வர், கெய்ரோவில் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தச் சொல்லை முதன்முதலாகப் பார்த்த நினைவு எனக்கு.

ஆகஸ்ட் 1997. டயானா இறந்தபோது செய்தித்தாள்களில் பிரபலமான சொல் ‘பப்பரஸி’ (paparazzi). ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்களை எடுத்து, செய்தித்தாள்களுக்குத் தருவதற்காகப் பிரபலங்களைப் பின்தொடர்ந்து செல்லும் புகைப்படக்காரர் என்பது இச்சொல்லுக்கான பொருள்.

அகராதியில் இருந்தால்கூடப் பயன்பாட்டில் அதிகமாக வரும்போதோ, பிரபலமாகும்போதோ, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பின்னணியிலோ ஒரு சொல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே அந்தந்தக் காலகட்டத்தில் புதிய சொற்கள் உருவாகின்றன. அவ்வகையில், 2013-ல் முக்கிய இடத்தைப் பெறும் சொல் ‘செல்ஃபி’ (Selfie). இச்சொல் அவ்வாறான இடத்தைப் பெற்ற சூழல் சுவாரஸ்யமானது.

திரும்பிப் பார்க்க ஒரு வரலாறு

எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய கோடாக் பிரௌனி பெட்டிக் கேமரா அறிமுகமானபோது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் எட்வர்ட் பெண்மணி ஒருவர் நிலைக்கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.

கண்ணாடி, கேமராவின் துணையுடன் முதன்முதலாக ரஷ்யாவின் அண்டாசியா நிகோவ்லேவ்னா தன் 13-வது வயதில் புகைப்படம் எடுத்து, அதைத் தன்னுடைய கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்தப் புகைப்படத்தைக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்தபோது தன் கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். 1914-ல் நடந்தது இது.

‘ஃபேஸ்புக் கலாச்சாரம்’ பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக ‘மைஸ்பேஸ்’-ல் காணப்பட்டது. இது 2000 கதை.

ஆஸ்திரேலிய இணைய அமைப்பில் (ABC Online) இச்சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இது 2002 கதை.

‘ஃபிளிக்கர்’ தளத்தில் புகைப்படப் பகிர்வில் இச்சொல் இடம்பெற்றது 2004-ல்.

இச்சொல்லைப் பற்றி புகைப்படக்காரர் ஜிம் கிராஸ் விவாதிக்கிறார் 2005-ல்.

இளம் பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஃபிளிக்கர்’ தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவுகிறது 2009-ல்.

கொரிய மற்றும் ஜப்பானிய செல்பேசியைக் கொண்டும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலெடுக்கப்பட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இம்முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவுகிறது 2010-ல்.

மிகச் சிறந்த சொற்களில் ஒன்றாக ‘டைம்’ இதழால் இச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாளடைவில் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது 2012-ல்.

மே-நவம்பர் 2013. கரென் ந்யேபெர்க் விண்வெளியில் இருந்தபோது ‘செல்ஃபி’ எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும்போது தலைமுடியை எப்படிச் சுத்தம் செய்துகொள்வது என்றுகூட அவர் அப்போது செய்துகாட்டினார்.

ஜூலை 2013. டிசைனர் மற்றும் நடிகை ரிகன்னா தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த ‘செல்ஃபி’உலகின் மிசச்சிறந்த புகைப்படமாகக் கருதப்படுவதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் வழி அறிய முடிந்தது.

ஆகஸ்ட் 2013. இளைஞர்களுடன் போப் எடுத்துக்கொள்ளும் ‘செல்ஃபி’ உலகப் பிரபலமானது.

நவம்பர் 2013. ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ தேர்ந்தெடுக்கப்படுகிறது. “இந்த ஆண்டில் சிறந்த சொல்லாக இருக்க அச்சொல் கடந்த 12 மாதங்களுக்குள்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ, அது நீண்ட நாள்களாக இருந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை” என்கிறார் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ஆசிரிய இயக்குநர் ஜுடி பியர்சல். இச்சொல்லின் பயன்பாடு வியக்கத்தக்க வகையில் 17,000 விழுக்காடு இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 2013. நெல்சன் மண்டேலா இறுதி மரியாதைச் சடங்கின்போது, அமெரிக்க அதிபர் எடுத்துக்

கொண்ட ‘செல்ஃபி’ படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி ‘செல்ஃபி’யை உலகம் முழுக்கப் பரப்பியது.

புதிதாகப் பிறக்கும் சொற்கள்

இப்போது ‘செல்ஃபி’யைப் போல மேலும் பல சொற்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. ‘ஹெல்ஃபி’(தன் தலைமுடியை புகைப்படமெடுத்தல்), ‘பெல்ஃபி’(தன் பின் புறத்தைப் புகைப்படமெடுத்தல்), ‘லெல்ஃபி’(தன் கால்களைப் புகைப்படமெடுத்தல்), ‘வெல்ஃபி’(உடற்பயிற்சி செய்யும் நிலையில் புகைப்படமெடுத்தல்), ‘ட்ரெல்ஃபி’(குடித்த நிலையில் புகைப்படமெடுத்தல்) என்று வரிசை கட்டி நிற்கின்றன இந்தச் சொற்கள்.

தமிழில் எந்த வார்த்தை?

ஆங்கில மொழியைப் புகழும்போதோ, இகழும்போதோ, ஒப்பிடும்போதோ ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள மறக்கிறோம். ஆங்கிலம் உலகெங்கும் பரவக் காரணம், மொழியோடு அந்தச் சமூகம் கொண்டிருக்கும் இந்தப் பிணைப்புதான். ஒரு சமூகமே சேர்ந்துதான் ஒரு மொழியை வளப்படுத்த முடியும்; வெறும் பண்டிதர்களும் பாடநூல் ஆசிரியர்களும் மட்டும் அல்ல. மொழிக்கு மேல்நாட்டுச் சமூகம் கொடுக்கும் மதிப்பின் அடையாளம்தான் ‘செல்ஃபி’ என்ற ஒரு வார்த்தை கடந்திருக்கும் பயணம். தமிழில் இப்படி எல்லாம் மொழியைப் பற்றி நாம் பேசுகிறோமா, எழுதுகிறோமா, குறைந்தபட்சம் சிந்திக்கிறோமா? வாசிப்போடும் எழுத்தோடும் முக்கியமாகப் புத்தகங்களோடும் நெருக்கமான உறவைப் பராமரிக்கும் ஒரு சமூகமே மொழியை வாழ்வாங்கு வாழவைக்க முடியும்.

தமிழில் இதுவரை இப்படி எல்லாம் சிறந்த சொற்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மொழி மீது நாம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டினால், அடுத்த ஆண்டு ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படலாம்!

பா.ஜம்புலிங்கம், முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர், தொடர்புக்கு: drbjambulingam@gmail.com

Keywords: தமிழ், செல்ஃபீ, செல்ஃபி’ படம், ஆங்கில மொழி, அகராதி,

 

source::: The Hindu ….Tamil

natarajan

“பச்சை மா மணி போல் ….” !!!

இரவு வேளை.

விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

“உப்புமா”

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ? உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்குப் போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”

“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”

“இது எனக்குத் தெரியும்.”

“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினானாம். பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை ( உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்!

Source—-Mahaperiaval Dharisana Anubavankal—–vol. 7  &www.periva.proboards.com

Compiler—T.S.Kothandarama Sarma.

Publishers——Vanathi Pathippakam.

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/2934/mahaperiavas-humour#ixzz2pshvR4G2

” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!

 

மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.

பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.

பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.

உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”

என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை  இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)

“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.

ஆங்கில மூலம்:  ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி

தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.

source:::::dinamani tamil daily…Kadir

natarajan

 

“உன்னால் முடிந்தது ஓரளவே …எல்லாம் அவன் செயல் ” ….

கண்ணதாசனின் கவிதைகளில் ஒன்று

தலைப்பு : சம நோக்கு கவிதைkannadasan

காக்கை குருவியைப்போல்
கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை
யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற
சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த
மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும்
கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது
கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே
என்பதற்கு என்ன பொருள்
உன்னால் முடிந்ததெல்லாம்
ஓரளவே என்று பொருள் !!!

source:::: Dinamani.blogspot.com

natarajan

அகிலம் எல்லாம் மதுரம் ….

கோவிந்தனின் சிறப்பைக் குலசேகர ஆழ்வார், திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். செடி போல கிளைத்துக் கிளம்பும் என் வினைகளை திருமாலே நீ தீர்த்து விடுகிறாய். நெடியவன் அவன் வேங்கடவன். அவனுடைய கோயில் வாசலில் வானுலகத்தினர் இங்கும் அங்கும் நடமாடித் திரிவார்கள். இப்படியாகத் திருமாலை புகழ்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் குலசேகர ஆழ்வார். குருவினை அறியும் உத்தியையும் சொல்லித் தருகிறார். இப்பாசுரத்தின் கடைவரியில் பவளவாய் காண்பதாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

திருமாலின் அவயத்தில் அகிலம் எல்லாம் மதுரம். கால் அழகு, விரல் அழகு, இடுப்பழகு, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள் அழகு. தோள் அழகு, தொண்டையும் அழகு. இரு கன்னமும், கண்களும் அழகோ அழகு. நுதல் அழகு, சுருள் கேசமும் மகுடமும் அழகு. இவற்றையெல்லாம் இப்பாசுரத்தில் குறிப்பிடாமல், “ பவளவாய்” காண்பேனே என்று சொன்னதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும். ஆழ்வார்கள் என்றாலே எம்பெருமானை ஆழ்ந்து சிந்திப்பவர்கள்.

பகவான் இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் உய்ய வேண்டும் என்பதற்காகக் கூறியது பகவத் கீதை. அதனை வெளிப்படுத்திய திருவாய் இதுதானே. எனவே பவள வாய் காண்பேனே என்றார். திருவாய் மலர்ந்து பகவான் சொன்னது:

சர்வ தர்மான் பரித்யஜ்ய

மாமேகம் சரணம் விரஜ

அகம்த்வா சர்வ பாபேப்யோ

மோஷயிஷ்யாமி மாசுக

இதில் ‘மாசுக’ என்றால் வருந்தாதே என்று பொருள். இதோ இந்தப் பவளவாயால்தானே இதனைச் சொன்னாய். அதனால் காண்பேனே! ஏதோ நாமெல்லாம் திருமலையில் பகவானைக் கண்டும் காணாமலும் தரிசித்து வெளியேறிவிடுகிறோம். நாம் என்னத்தைக் கண்டோம் பவள வாயையும், மணக்கும் பன்னீர் வாயையும். ஆனால் குலசேகர ஆழ்வார் படியாய் கிடக்கின்றேன் என்கிறார். இவர் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், ஆண்டின் 365 நாட்களும் அங்கேயே கிடக்கிறார். அவ்வளவு நேரமும் அங்கேயே கிடந்தாலும் பவள வாய் மட்டும்தான் காண்பதாகச் சொல்கிறார்.

அவரோ ஆச்சார்யன். ஸ்ரீஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்தானே! அவருக்கு பகவான், தன் திருவாய் மலர்ந்து பொன்னும் பொருளுமா அளிக்க வேண்டும்? சாதாரண மக்களோ வீடு வேண்டும், வாசல் வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை பகவானுக்கு அனுப்பி, பதிலுக்கு அவரது வாய் பார்த்து நிற்கின்றனர். அப்படியென்றால் குலசேகர ஆழ்வாருக்கு என்ன தேவை? குருவருள்தான் தேவை. ஜோதிடத்தில் பிரபலமாகக் கூறப்படுவது, குரு பார்க்க கோடி நன்மை. அப்படியென்றால் குரு யார்?

வசுதேவ சுதம்தேவம் கம்ச சானூர மர்த்தனம்

தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

எனவே ஜகத்குருவானவன் கிருஷ்ணன். அவனே அனைவருக்கும் குல குருவாகும் தகுதி உடையவன். குலத்தைக் காக்கும் தெய்வம் எனவே குல தெய்வம். எப்படி? சந்தியாவந்தன சுலோகத்தில் ஒன்று,

ஆகாசம் பதிதம் தோயம்

யதா கச்சதி சாகரம்

சர்வ தேவ நமஸ்காரம்

கேசவம் பரிகச்சதி

கடைசி வரியைக் கவனிக்க வேண்டும். இதன் பொருள் கேசவனையே சாரும். எது கேசவனைச் சாரும். சர்வ தேவ நமஸ்காரம் – அனைத்து தேவதைகளுக்கும் செய்யப்படும் பிரார்த்தனை கேசவனைப் போய்ச் சேரும்.

அது எப்படி சுவாமி கேசவனைப் போய் சேரும் என்றால், முதல் இரு வரிகளின் பொருளைப் பார்க்க வேண்டும். அவ்வரிகளின் பொருள், வானத்திலிருந்து பெய்யும் மழையானது, பூமியில் வீழ்ந்தாலும் இறுதியில் கடலில்தான் போய் கலக்கிறது. அதுபோல, சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பரிகச்சதி.

சிலருக்கு குல தெய்வம் எது என்று தெரியாது. இவர்கள் தங்கள் இல்லத்திலேயே வேங்கடவானுக்கு மாவிளக்குப் போட்டால் அவர்களுக்கே தெரியாத அவர்களின் குல தெய்வத்திற்கு அந்த வேண்டுதலை அனுப்பிவிடுவார் பெருமாள். இதனை செய்ய முறை உண்டு. இரு நுனி வாழை இலையிட்டு மாவிளக்குப் போடுவது போல வெண்பொங்கலை உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இரு நெய் விளக்கு ஏற்றி சிறிது நேரத்திற்குப் பிறகு படைக்க வேண்டும். விளக்கொளியை மலையேற்றிய பின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெண்பொங்கலை பிரசாதமாக உட்கொள்வார்கள். இவ்வழக்கம் கிராமப்புறங்களில் இப்போதும் காணப்படுகிறது.

source::::  Article by  ராஜேஸ்வரி ஐயர்  in The Hindu ….TAMIL
NATARAJAN

போரைத் தடுத்த கவிதை !!!

அதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.

வரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, “”உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, தங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள் நன்றாக விளக்கவில்லை” என்று கூறினாள்.

வரகுணராம பாண்டியன், தன் மனைவியிடம், “”என் தம்பி அழகும் அறிவும் உள்ள பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் இன்பத்தின் எல்லை கண்ட காலத்தில் நளன் -தமயந்தியின் இல்லற வாழ்வைப் பற்றிப் பாடும்போது இன்பச் சுவையை அழகாகப் பாடியுள்ளான். இளைஞனான அவன், கலியினால் அவர்கள் துன்பம் அடைந்ததைப் பாடும்போது அவலச்சுவை குறைந்திருப்பது இயல்பே. நீயே உன் கருத்தை எழுதியனுப்பு” என்று கூறினான்.

“”நைடதத்தில் உள்ள கவிதைகளில் அழகும் சுவையும் முதற்பகுதியில் இருந்ததுபோல் இல்லாமல் போகப் போகக் குறைந்துகொண்டே போயுள்ளது. ஆதலால், வேட்டை நாய் முதலில் வேகமாக ஓடி, போகப்போக இளைத்தது போன்றும்; கரும்பை வேரிலிருந்து தின்னும்போது முதலில் சுவையாகவும் போகப்போகச் சுவை குறைந்துகொண்டே உள்ளது போன்றும் நைடதத்தின் கவிதைகள் உள்ளன” என்று அவள் எழுதி அனுப்பினாள்.

இந்த ஓலையைக் கண்ட அதிவீரராம பாண்டியன், “”அண்ணா, வரகுணராம பாண்டியா, நீ என்னைப் பழித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீ என் கவிதைகளை – என் தமிழைப் பழித்தாய்! ஆதலால் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போருக்கு வரவேண்டும்” என்று ஓலை எழுதி அனுப்பினான்.

தம்பியின் ஓலையைக் கண்ட வரகுணராம பாண்டியன், தம்பியிடம் மன்னிப்புக் கேட்டாலும் போர் தொடுத்தாலும் பழி உண்டாகும். இதற்கு என்ன பதில் எழுதுவது என்று யோசித்தான். அதைக்கண்ட அவன் மனைவி, “”ஒரு கவிதையினால் உங்கள் தம்பியின் கோபத்தைத் தணிக்கிறேன்” என்று கூறினாள்.

“”இராமாயணத்தில் சூரியன் மகனாகிய சுக்ரீவன். ராமனிடம் தன் அண்ணனான வாலியின் குற்றங்களைக்கூறி அண்ணனைக் கொல்லச் செய்தான்.

தென்னிலங்கை வேந்தனாகிய விபீஷணன் தன் அண்ணனான இராவணன் மார்பில் அம்பெய்தால்தான் அவன் உயிர் போகும் என்ற உண்மையை ராமனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்தான். மகாபாரதத்தில் அருச்சுனன் தன் அண்ணனாகிய கர்ணனைக் கொன்றான்.

அண்ணன்-தம்பிகளின் பாசத்திற்கு இந்த மூன்று தம்பிகளையும் பாராதே. அண்ணனின் பாதுகைகளை அரியணையில் ஏற்றி, “அண்ணன் ராமர் வரும் வரையிலும் அயோத்திக்குள் நுழையமாட்டேன்’ என்ற விரதத்துடன் தவக்கோலம் பூண்டு, நாட்டை ஆண்ட தம்பி பரதனையும் ராமனையும் பார்” என்ற பொருளில்,

“”செஞ்சுடரோன்  மைந்தனையும்  தென்னிலங்கை

வேந்தனையும்

பஞ்சவரில்  பார்த்தனையும்  பாராதே – மிஞ்சு

விரதமே பூண்டு மேதினி யாண்ட

பரதனையும் இராமனையும் பார்”

என்ற கவிதையை எழுதி அனுப்பினாள். ஓலையில் உள்ளதைப் படித்த அதிவீரராம பாண்டியன் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டான்.

அண்ணன்-தம்பிகளுக்குள் நடக்க இருந்த போரை ஒரு தமிழ்க் கவிதை தடுத்து நிறுத்திவிட்டது என்ற வரலாறு இக் கவிதையின் பெருமையை உணர்த்துகிறது.

 

source:::::Dinamani  …Tamil daily

natarajan