This Beautiful Film Of A Guy Surprising His Mother Will Warm Your Heart …

 

 

 

“The only love that I really believe in is a mother’s love for her children.” ~Karl Lagerfeld

This beautiful video of a man’s journey back home is shot entirely on Google Glass. The film is unique because it gives us a first person perspective of the whole journey, as if we are going home to our own mother.

The ending, where the son reveals the news of his wife’s pregnancy by showing the ultrasound, is so beautiful that it might just wet your eyes.

Thank you, Mom.  

source:::::You Tube and Story Pick

natarajan

 

” நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான் … ” !!!

“என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்
நூல் பாவைதான்’
– வாலி

 

நமக்கு நடப்பவைகளுக்கு நாம் காரணங்களை தெரிந்து கொள்ள முடியாமல் பிரமித்து நிற்கிறோம்.
அறத்தோடு வாழும் எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் இதைச் செய்தேனே, அதை செய்தேனே, எனக்கு வெகுமதி கிடைக்காமல் வேதனை அல்லவா வாய்த்திருக்கிறது.
அறத்தை ஒதுக்கி வாழும் அடுத்தவனுக்குப் பரிசா? பலவாறு எண்ணி வேதனையுறுகிறது மனம்.
நானும் பலமுறை இக்கேள்விகளை அனுபவமின்மையால் எழுப்பியதுண்டு. இவற்றிற்கும் இன்னும் பல நூறு கேள்விகளுக்கும் அமரர் வாலியின் மேற்காணும் இரண்டு வரிகளே பதில்.
திரை இசைப் பாடலின் இரண்டு வரிகட்குள் இரண்டாயிரம் கேள்விகளின் பதிலை அடக்கிய அமரர் வாலியின் புலமைக்குப் பல வணக்கங்கள்.
புட்டப்பர்த்தியில் பகவானைக் காணக் காத்திருக்கும் அறையை ஒட்டி இருக்கின்ற திண்ணைக்கு வரண்டா என்ற பெயர். அங்கே மிக மிக முக்கியமானவர்களும், வேண்டப்பட்டவர்களுமே உட்காருவதற்கு அனுமதியுண்டு. வழமையான அங்கு தொடர்ந்து அமர்ந்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலே அமர்வார்கள். ஒருமுறை அப்படிப்பட்ட ஒருவர் பக்கத்திலே நான் அமர்ந்தேன்.
அன்று பகவானின் தரிசனத்திற்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்தோம். அப்பொழுது என் பக்கத்திலிருந்தவரிடம் “மிகுந்த நேரமாகிவிட்டதே இதற்கு மேலும் பாபா வருவார்களா?’ என்று கேட்டேன்.
“பகவானுடைய எந்த நடவடிக்கையையும் நாம் நிர்ணயம் செய்ய முடியாது. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையுமு” ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும். அதை ரசிக்கும் உரிமை மாத்திரம் தான் உண்டு. ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்’ என்றார்.
“அறுபது எழுபதுகளில் நான் பகவானுக்கு ஒரு முகமையாளர் போலப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்குக் கீழே ஒரு குமாஸ்தா ஒருவன் பணிபுரிந்து வந்தான். காசோலை எழுதிப் பகவானிடம் கையொப்பம் வாங்கி, அந்தக் காசோலையை மாற்றிச் செலவுக்குக் கொடுப்பது அவனது பணிகளுள் ஒன்று.
செலவு ஐந்நூறாக இருந்தால் எண்ணூராகப் பணமெடுப்பதும், இரண்டாயிரமாக இருந்தால் மூவாயிரமாக பணமெடுப்பதுமாக இருந்த செயலை நான் கண்டுபிடித்தேன்.
எனக்குக் கோபம் ஆத்திரமுமாக வந்தது. அவனை கண்டிக்கவோ வேலையிலிருந்து நீக்கவோ எனக்கு உரிமை இருக்கவில்லை. அவன் தினமும் ஐந்நூறு ஆயிரம் எனப் பணம் கையாடல் செய்ய முற்பட்டான். இதை உடனே பகவானுக்குச் சொல்ல வேண்டுமென்று துடித்தேன். இதைப்ப ற்றிப் பகவானிடம் பேச எத்தனித்த போதெல்லாம் அவர் தள்ளிப்போட்டார். பேசவும் விடவில்லை. எனது நிலை தர்ம சங்கடமாயிற்று. விரக்தியடைந்தேன்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் இன்று கட்டாயம் பேசியே ஆக வேண்டும் என்று பகவானிடம் முரண்டு பிடித்தேன். “நாளைக் காலை வா’ என்று பகவான் சொன்னார்கள்.
பகவான் கடவுளாயிருந்தும் கூட, தன் அருகிலேயிருந்து திருடுகிறவனை ஒன்றும் செய்யாமலிருக்கிறாரே என்று நினைத்து எனது பணியிலிருந்து விலகவும் நினைத்தேன். அன்று பகவான் “நாளைக் காலை என்னுடன் உணவருந்த வா’ என்றழைத்தார்கள்.
மறுநாள் காலை அறையினுள் சென்ற பொழுது “கையாடல் பற்றி எனக்குத் தெரியும்’ என்றார்கள். நான் அசந்து போனேன். இருந்தாலும் “நீ சொல்’ என்றார்கள். எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன்.
பகவான் சிரித்துக் கொண்டே, “உனக்கொன்று சொல்கிறேன் கேள். அவன் வீட்டில் என்னை வைத்து உணவளித்தவன். அவனுடைய நேரம் வந்தவுடன் சில நாள்களில் அவனாகப் போய்விடுவான் அதற்காக நீ துன்பப்படாதே” என்றார்.
“பகவான் எதையும் ஏன்? எதற்காக? அப்படிச் செய்கிறார்கள் என்று நம்மால் நிர்ணயிக்கவே முடியாது. அதனாலே அமைதி காத்து, நீ தரிசனம் பெற்றுச் செல்’ என்றார் முதியவர்.
நமக்கு நுனிப் புல் மேயத்தான் தெரியும் எல்லா விடயங்களையும் ஆழமாகப் பார்த்து அறியும் சக்தி கிடையாது.
நான் பகவானுடைய அன்புக்கு அடிமைப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வகையான தொண்டுகளில் ஈடுபட்டேன். பணம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. ஆனாலும் பெங்களூரிலே வைட் பீல்டிலே முன் வரிசையில் இடம் பிடிக்க படாத பாடுபட்டேன்.
சாதாரண பக்தனாக மட்டும் இருந்த காலம். அப்படியே போய் முன் வரிசையில் அமர்ந்தாலும் சேவா தொண்டர்கள் “நீ யார்?’ என்று கேட்டு என்னைப் பின் வரிசைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஒருமுறை பாபா நடந்து போகிற பாதையிலே எனக்கு இடம் கிடைத்தது. பாபா விபூதி வரவழைத்து என் கையில் கொடுத்தார்கள். நான் என்னையே மறந்தேன். அந்த விபூதி பெறுவதற்கு நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். அப்பொழுது தெரிந்தது, எதற்காகப் பகவான் எனக்கு முன் வரிசையில் இடம் தராமல் காத்திருக்க வைத்தார் என்று.
அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு கனிய வேண்டும். கனிந்துவிட்டால் அருள் கிட்டிவிடும். பக்திக் கனி கனியும் காலம் அவருக்குத்தான் தெரியும். நான் அவசரப்பட்டு, பாபா உன்னை அருகில் பார்க்க வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லைஎன்று வீணாக வருந்தினேன்.
பாபாவை இன்னும் அதிகமாக நேசித்தேன். சாயி சேவா என் இரத்தத்தோடு கலந்தது. பகவான் முன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பகவான் எனக்கு மோதிரமும் அணிவித்தார்.
அநாவசியமாகப் பக்தி பழுக்கும் முன் எனக்கும் உன் அருகில் வரும் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்று அழுவது சாமான்ய பக்தர்களின் முதிர்ச்சியற்ற ஒருகுறை. எதற்கும் திருவருள் கூட்டவேண்டும். வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார்.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (குறள் 377)
பிரித்தானியாவின் சிறிய மீன்பிடித் துறைமுகம் ஹல். மீன் பிடிக்க விசைப் படகிலே ஒரு குடும்பம் அங்கிருந்து சென்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.
துறைமுகத்தின் அணையை தாண்டிக் கடலுக்குள் சென்றபோது அப்படகு சுழியினுள் சிக்கித் தடுமாறியது. துறைமுகத்தின் அவசர உயிர்காக்கும் படையினருக்குச் செய்திஅனுப்பினர்.
உயிர்க்காக்கும் படையினரும் அவசர அவசரமாகப் புறப்பட்டனர். சாதாரணமாக அந்தப் படையினரின் எண்ணிக்கை ஓட்டுனருடன் சேர்ந்து அறுவர். ஆறாவது நபர் தன்னுடைய கவசங்களை அணிந்து ஏறத் தாமதம் ஏற்பட்டதால் ஐந்து பேருடன் அந்தப் படகு புறப்பட்டது.
தத்தளித்துக் கொண்டிருக்கும் படகை உயிர்க்காக்கும் படையினர் அணுகிய நேரம் அந்தப் படகு கவிழ்ந்து விட்டது.
கடுமையாகப் போராடினர். அந்த மீன்பிடிப் படகிலிருந்த பதினொரு வயதுடைய பையன் ஒருவன் உட்பட நால்வரைக் காப்பாற்றினர் மூவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்க் காக்கும் படையினரில் இருவர் அந்தச் சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் உயிர்காக்கும் படையிலுள்ள இருவரையும் மீன் பிடிக்கச் சென்றவர்களில் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்காக்கும் படை எஞ்சியவர்களோடு துறைமுகம் திரும்பியது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியை கருவாக்கித் தலையங்கமாக எழுதிய “சைக்காலாஜிஸ்ட்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையின் ஆசிரியர், “மீன் பிடிக்கச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் மாத்திரம் ஏன் உயிர் பிழைக்க வேண்டும்? உயிர் காக்கும் படையில் ஒருவர் மட்டும் ஏற முடியாமல் போனதேன்? உயிர்காக்கும் படையில் ஒருவரை மட்டும் கரையில் விட்டு விட்டு அந்தப் படகு ஏன் செல்ல வேண்டும்? தங்கள் உயிரைச் ச்சமாக மதித்த உயிர்காக்கும் படையினரைச் சேர்ந்த இருவர் ஏன் உயிர் துறக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தார்.
ஆசிரியர் ஏன்? ஏன்? எனப் பல கேள்விகளுடன் தலையங்கத்தை முடித்துவிட்டார். அவரால் விடை சொல்ல முடியவில்லை.
இம்மாதிரியாக நமது வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமும் விடை காணமுடியாமல் ஏன்? ஏன்? எனற கேள்விகளை எழுப்புகிறோம். போட்டவன் தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான்.

– தெ. ஈஸ்வரன் in KALAIMAGAL….Tamil Monthly..

Natarajan

” அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …”

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.
ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

 

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bakthi Tamil

natarajan

“கூடையிலே வேறு என்ன கொண்டு வந்திருக்கே …” !!!

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.

ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார். பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். “கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?” “கொன்றைப் பூ மட்டும்தான்” “இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கே!”

யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு போய்,ஒரு மூங்கில் தட்டில் கவிழ்க்கச் சொன்னார்கள்.

தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.

பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள்.

பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப் பார்த்து,”இனிமேல் சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!” என்றார்கள்.

அலை அலையாய் சிரிப்பு…

source::::: www. periva.proboards.com
natarajan

“ஐஸ்க்ரீமுக்கும் இருக்குங்க ஹிஸ்டரி…” !!!

கத்தரி வெயிலில் “ஐஸ்க்ரீம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே உடலும் மனமும் சில்லிடும். வீட்டைச் சுற்றும் தள்ளுவண்டி ஐஸ் ஆகட்டும், இரவு நேர குல்ஃபி ஆகட்டும் அல்லது அடுக்குமாடி கட்டடங்களில் குளிர்சாதன அறையில் குளிரூட்டப்படும் ஐஸ்க்ரீம் ஆகட்டும் அத்தனைக்குமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அது சரி இந்த ஐஸ் க்ரீம் எப்படித் தோன்றியது?

ஐஸ்க்ரீமுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. “ஃப்ரோஸன் கஸ்டர்டு’, “ஃப்ரோஸன் யோகட்’, “சோர்பெட்’, “ஜெலடோ’ என்று பலப்பெயர்கள் இதற்கு உண்டு.

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே ஐஸ்க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கி.பி 37-68-ல் வாழ்ந்த ரோமப் பேரரசன் நீரோ மலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை வெட்டிக் கொண்டு வரச்செய்து அதன் மேல்புறத்தில் பழத்தால் அலங்காரம் செய்து சாப்பிட்டுள்ளான். கி.பி.5-ம் நூற்றாண்டில் க்ரீஸ் நாட்டு மக்கள் வெண்பனியில் தேன், பழங்கள் சேர்த்து சாப்பிடுவார்களாம்.

கி.பி. 618-197-ல் வாழ்ந்த சீன அரசன் டேங் ஐஸ்கட்டிகளையும் பாலையும் சேர்த்து ஐஸ்க்ரீமை உருவாக்கும் முறையை பின்பற்றினான். சில நூற்றாண்டுகள் கழித்து 1295-ல் மார்கோ போலோ சீனாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அங்குள்ள ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை இத்தாலிக்குக் கொண்டு சென்றார். இதனால் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஐஸ்க்ரீம் புகழ் பரவியது. அதற்கு முன்பு வரை ஐஸ்க்ரீமின் சிறப்பு விளம்பரப்படுத்தப்படவில்லை.

இந்த ஐஸ்க்ரீம் ஐரோப்பியாவுக்கும் இடம் பெயர்ந்தது. அதன் பின்பு படிப்படியாக ஐஸ்க்ரீம் ரெசிபிகள் உருவாக ஆரம்பித்தன.

பாரசீக சாம்ராஜியத்தில் பனியின் மீது திராட்சை ரசத்தை ஊற்றி விருந்துகளில் பறிமாறுவார்கள். அதுவும் கோடைக்காலத்தில்தான் இதனை விரும்பி உண்பார்கள். பாரசீகர்கள் பனியை சேமிக்க தரைக்கடியில் உள்ள பிரத்யேக அறைகளை உருவாக்கினர். அல்லது மலையின் உச்சியில் மீந்திருக்கும் பனியை சேகரித்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

1533-ம் ஆண்டு இத்தாலிய சீமாட்டி ஒருத்தி பிரஞ்சு சீமான் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். அப்போது சீரின் ஒரு பகுதியாக “ஜெலடியரி’ எனப்படும் ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்களை இத்தாலியிலிந்து பிரான்ஸூக்கு கொண்டு சென்றாள்.
100 ஆண்டுகளுக்குப் பின்பு நான்காம் ஹென்ரியின் மகள் இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லûஸ மணந்து கொண்டபோது ஐஸ்க்ரீம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. முதலாம் சார்லஸ் ஒரு ஐஸ்க்ரீம் கலைஞனின் ரெசிபியில் கவரப்பட்டு, அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று அந்தக் கலைஞனுக்கு ஆயுள் முழுவதுக்கும் பெருந்தொகையை ஊதியமாக வழங்கிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் அந்த ஐஸ்க்ரீமுக்கு தனித்துவமான புகழ் கிடைக்கும் என நினைத்தார்.

இந்தியாவில்…
இந்தியாவைப் பொருத்தவரை, 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர்கள் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானும் இடையில் 800 கி.மீ. நீளம் உள்ள ஹிந்து குஷ் என்ற மலைத்தொடரில் இருந்து குதிரை வீரர்கள் மூலமாக ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். பழச்சாறு மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் இனிப்பை ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

ஐஸ்க்ரீம் ரெசிபிகள்: ஐஸ்க்ரீமுக்கென்று தனியாக ரெசிபிக்கள் உருவாக ஆரம்பித்தது 18-ம் நூற்றாண்டில்தான். சமையல் முறைகள், குறிப்புகள் அடங்கிய ஆங்கிலத்தின் முதல் இதழான “மிசிஸ். மேரி ஏல்ஸ் ரெசிப்ட்ஸ்’-ல் 1718-ம் ஆண்டு முதல் ஐஸ்க்ரீம் ரெசிபி வெளியானது.

குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பு…
நவீன குளிரூட்டும் முறை கண்டுபிடிக்கும் முன்பு ஐஸ்க்ரீம் என்பது பெரும் செல்வந்தர்களுக்கே உரியதாக இருந்தது. பண்டிகைகளில், விருந்துகளில் மட்டுமே ஐஸ்க்ரீம் இடம்பிடிக்கும். அதனை உருவாக்குவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை உறைந்து போயிருக்கும் ஏரி, குளங்களிலிருந்து குளிர்காலத்தில் வெட்டி எடுத்து வருவார்கள். நிலத்தில் துளையிட்டு அதனை சேமித்து வைப்பார்கள். அதன் பின்பு நிலத்தில் மரத்தினாலான பெட்டிகளில் அல்லது செங்கலால் உருவாக்கப்பட்ட ஐஸ் வீடுகளில் வைக்கோல் பரப்பி அதன் மீது ஐஸ் கட்டிகளை வைப்பார்கள்.

மிகவும் புகழ் பெற்றத் தலைவர்கள், விவசாயிகள், தோட்ட முதலாளிகள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்ஸன் உள்ளிட்டோர் குளிர்காலத்தில் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து சேமித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட்டிரிக் டியடோர் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து, அதனை ஒழுங்கான வடிவங்களாக செதுக்கி, உலகம் முழுவதற்கும் கப்பலில் ஏற்றுமதி செய்து பெரும்பணம் படைத்தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் ஃப்யூசெல் என்பவர்தான் முதன் முதலில் ஐஸ்க்ரீம் விற்பனையை பெரிய அளவில் செய்யத் தொடங்கினார்.

“பாட் ஃப்ரீஸர்’ முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு மற்றும் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் ஐஸ்க்ரீம் தயாரித்தனர். இதற்கு “பாட்-ஃப்ரீஸர்’ முறை என்று பெயர். இதில் பெரிய பாத்திரத்திற்குள் இருக்கும் உப்பும், ஐஸ்கட்டியும் சிறிய பாத்திரத்தினுள் வைத்துள்ள ஐஸ்க்ரீம் செய்யத் தேவையான பொருள்களின் வெப்பத்தை குறைத்து அதனை உறைய வைக்கும்.

சில காலத்திற்குப் பிறகு ஒரு பாத்திரத்தினுள் ஐஸ்கட்டிகள் மற்றும் உப்பைப் போட்டு, ஓர் உருளைக்குள் அடைக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை அதனுள் வைப்பார்கள். அதில் ஓர் கைப்பிடியும் இருக்கும். கைப்பிடியைச் சுற்றச் சுற்றச் உருளைக்குள் உள்ள ஐஸ்க்ரீம் கெட்டியாகிவிடும். இந்த இயந்திரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 1843-ம் ஆண்டு நேன்சி ஜான்சன் என்பவர் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். “பாட் ஃப்ரீஸர்’ முறைக்குப் பின்பு இந்தப் புதிய முறை வழக்கில் இருந்தது. நேன்சி, ஐஸ்க்ரீம் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்ற பிறகு பலர் அந்த இயந்திரத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற்றனர்.

 


ஐஸ்க்ரீம்களை தொழிற்சாலையில் பதப்படுத்தும் முறையை 1870-ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். இயற்கையான ஐஸ் கட்டிகளை வெட்டியெடுத்து சேமிக்கும் முறை இதன் மூலம் கைவிடப்பட்டது. 1926-ம் ஆண்டு நவீன ஐஸ்க்ரீம்கள் தொழிற்சாலைகள் தோன்றி, செயற்கை ஐஸ்கட்டிகள் உருவாக்கப்பட்டன.

SOURCE:::   Vanishree Sivakumar in  Dinamani

natarajan

படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

” ஆமா …உனக்கு அப்போ ஒன்பது வயசு … “

மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க
அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.

பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும்
எடுத்துக் கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு “இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் …” என்றதும், “ஆமா….அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்..” என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!

45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?

அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!

மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்……..அந்தப்பையின் மேல் பக்கத்தில் “இதோ! வந்துட்டேன் பாத்தியா!..” என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
————————————————————————————
உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
———————————————————————————–

source::::: http://www.periva.proboards.com

natarajan

” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “

ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி உருவசிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டார.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு ‘எனக்கு புடவை கொடு… புடவை கொடு!’ என்று கூவினாள், ரகளை செய்தாள்.

அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது

‘பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்.

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒரு புடவையை கொண்டு வர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.

‘என்னடா… புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா’ என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மகா பெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந் சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

source:::: http://www.periva.proboards.com

natarajan

” எனக்கு கோட்டு தருகிறாயா …? ” ….

மகா பெரியவாளை தரிசிக்க செல்லும்போது ஆச்சரியமான பல நிகழ்சிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர், தான் கண்ட கனவை பெரியவாளிடம் உணர்ச்சி பொங்க விவரித்து கொண்டிருந்தார்.

அவர் கனவில் பெரியவாள் தோன்றியதாகவும், ‘எனக்கு கோட்டு தருகிறாயா?” என்று கேட்டதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.

இதை கேட்டுவிட்டு மகா சுவாமிகள் மெல்ல சிரித்தார்கள். “கோட்டு கேட்டேனா?” என்று சொல்லி விட்டு ஓர் இடைவெளி, “கேட்டிருப்பேன்… கேட்டிருப்பேன்”.

அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘பெரியவாளுக்கு கோட்டு என்னத்துக்கு?”

பெரியவாளே பேசினார்கள்:

“கோட்டுன்னா என்ன அர்த்தம் தெரியுமா?”

என்ன பதில் சொல்ல? Coat என்றால் கோட்டுதான்!

“கோட்டு என்பதற்கு சரியான தமிழ்பதம் சொலுங்களேன்..”

‘மலை’ என்றார் ஒருவர். ‘கொம்பு’ என்றார் இன்னொருவர். “மேலங்கி” என்றார் மற்றொருவர்.

எல்லோரும் பெரியவாளின் பதிலுக்காக, செவிகளை தீட்டி கொண்டு காத்திருந்தார்கள்.

“அதெல்லாம் சரி. கோட்டு என்றால் கவசம்னு ஒரு அர்த்தம் உண்டு. காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்தணும்னு ஒரு எண்ணம் வந்தது. தங்க கவசம் பண்றதுன்னா.. சின்ன காரியமா? பணம் வேணுமே… இவர் பணக்காரர்.. ஒருவேளை இவரை கேட்டால், செய்து கொடுப்பார்னு தோன்றியிருக்கும். அதனால் கனவிலே போய் கேட்டிருக்கேன். எல்லாம் எனக்கு காமாட்சிதான். அம்பாளுக்கு கவசம் சாத்தினால், நான் கோட்டு போட்டுக்கொண்ட மாதிரிதான்…”

அந்த செல்வந்தருக்கு அடித்தது யோகம் – தங்க கவசம் செய்து சமர்ப்பிக்கும் யோகம்!

எத்தனை தலைமுறை புண்ணியமோ?

source:::::www.periva.proboards.com

natarajan

” உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை …”

 



“பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்..”

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

“என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?”


பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 

“ஹி … வந்து…எப்படி உத்திரவாகிறதோ அப்படி…” என்று இழுத்தார்.

“உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம் சாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்… தேவைபட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்…”

பக்தர் “உத்திரவு” என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை – அண்டை அயலாருடன் விரோதத்தை – வளரவிடகூடாது. இது, பெரியவாளின் தீர்மானமான கொள்கை .  

source:::: http://www.periva.proboards.com

natarajan