“ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ ” !!!

ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மஹாபெரியவாளைத் தான் தெரியும்.
தினமும் வந்து வந்தனம் செய்வாள்.

பல செல்வந்தர்கள், பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, ‘தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே’ என்று ஏங்கினாள். ஒருநாள் மனமுருகி பெரிய்வாளிடம் சொல்லி விட்டாள்.

பெரியவாள் சொன்னார்கள் :
“அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவதுகூட இல்லை; நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை; என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! எனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்கிறாயா?”

பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.

“மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காய வைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உபயோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்…”

பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார் – ஒரு பாட்டியிடமிருந்து.

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5555/experience-mahaperiyavaa#ixzz2jBptfOCt

இது உங்களுக்கு தெரியுமா ?….பிரதோஷம் எத்தனை வகை !!!

மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
நித்திய பிரதோஷம்.

 

 

தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.
திவ்ய பிரதோஷம்.

 

 

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும்   சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.  அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.
தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )

 

 

சனிக்கிழமையும் திரயோதசி  திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில்  விளக்கேற்றி வணங்கலாம்.
உதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
சப்தரிஷி பிரதோஷம்.

 

 

 
பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.
அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம் 

 

 

வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை  ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
அர்த்தநாரி பிரதோஷம்.

 

 

வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்.
 
 

வருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும்.  அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.

பிரம்ம பிரதோஷம் 
 
 

பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.

 
ஆட்சரப பிரதோஷம் 
 
 
 
வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர்.
பார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார்.  தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது.  தெரிந்தே தவறுகள்  செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
கந்த பிரதோஷம். 

 

 

 
சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.  இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம் 

 

 

 
தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.
வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்

 

 

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம் 

 

 

 
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.
அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக  தோஷமும் விலகும்.  தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம் 

 

 

 
இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
source::::mahaperiavaa.wordpress.com
natarajan

” கருந்துளசி பூஜை செய் ” !!!

மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் பாகத்திலிருந்து ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….

ஸ்ரீகுரு பாதுகா சரணம்

மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.

நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.

ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.

ஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.

இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா?
மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.

‘கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆயிற்று.

என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.

நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.

கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.

ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.

துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.

இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.

கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.
பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.
பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.

“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.

பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!

அன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5500/sengalpat-smt-jeyalakshmi-ammals-experience#ixzz2iP6NY7D9

“ஐம்பது ரூபாய் அம்பது கோடிக்கு நிகர் ” !!!

 

 

ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன் பெரியவாளை தர்சிக்க வந்தார். 
“கல்கத்தால நல்ல சென்டரான எடத்ல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?”
“அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்..”
“ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த கட்டடத்தை வாங்கிடு! பஜனை ஸமாஜ்காரா அவா பாட்டுக்கு அதுல இருக்கட்டும்.”
“அதை வாங்கணும்ன்னா நெறைய ஆகும் பெரியவா….எங்கிட்ட அவ்ளவ் பணம் இல்லியே! “
“எவ்ளோவ் ஆகும்?”
“கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்தது.
“நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” புன்னகைத்தார். 
ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? பெரியவா சொல்லிவிட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி, பெரிய்..ய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசுவதற்காக அவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.
இவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!…” என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. இவருக்கோ ஒரே ஆச்சர்யம்!
“நேற்று இரவு என்னுடைய கனவில் அன்னை மஹா காளி வந்தாள்! நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின் திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன லீலை இது? “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” ….என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ…..ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார். 
உடனேயே மளமளவென்று காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்” என்ற பெயரில் பெரியவா சொன்னமாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

 

source:::::input from a friend of mine…

natarajan

தில்லி உத்தரசுவாமி மலை கோயில் உருவான பின்னணி …

தில்லி உத்தர சுவாமிமலை

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள்.1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள்.இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

கனவில் வந்த கந்தன்
1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள்.இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான், “ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?” என்று குறிப்பிட்டார்.

காஞ்சி மாமுனிவரின் அருளாசி
1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள்.” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன.அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார்,”ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்” என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ, என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான்” என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை.ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து, சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

இறைவனின் சோதனை
நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார்.தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார்.கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8. 9. 1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா.நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சிவனும் அவனே, சிவகுமரனும் அவனே!
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். ’ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல் நாட்டு விழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கந்தனை வணங்கும் கதிரவன்
மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரான சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பின்புறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு.வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7. 6. 1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார்.அவ்வாறே அமைத்தார்கள்.பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது.கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது என்பதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ.எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். ‘பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது.விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.’ என்று ஆசி அருளினார்.

‘மலாய் மந்திர்’
அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.
தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்’ என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்’ என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் ‘மலாய்’..பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன்! அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

சித்ரா மூர்த்தி, சென்னை

திரிசக்தி பொங்கல் மலரில் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய ‘தில்லி உத்தர சுவாமிமலை’ என்ற அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாலதி ஜெயராமன்.

இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி சித்ரா மூர்த்தி சிறந்த எழுத்தாளரோடு சிறந்த சொற்பொழிவாளருமாவார். அவர் பல பத்திரிகைகளில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நன்றி: திரிசக்தி, பொங்கல் மலர்

source:::: muruganbhakthi.org

natarajan