ஒப்பில்லா ஓணம்….!!!

1

 

பண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவனாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..?’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.

இந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.

இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை கொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

காலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.

எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.

Source…….www.dinamani.com

Natarajan

வாரம் ஒரு கவிதை…” என் ஓட்டம் என் இலக்கு ” …

 

என் ஓட்டம் …என்  இலக்கு
………………………
என் ஓட்டம் …ஓடும் நதியோட்டம் ..  என்  உயிரோட்டம் … என் இலக்கு… நதி நீர்
இந்த  மண்ணுக்கும் …மண்ணில்  விளையும்  பயிருக்கும் !
விதி விலக்கு இதில் எதுவும் இல்லை எனக்கு … ஓடிக்கொண்டே   இருக்கும்
நதி எனக்கு , நீயும் பிள்ளைதான் , அவனும்  பிள்ளைதான் !
மதி கெட்டு   நதி நீர் “எனக்கு”  மட்டும்தான்  என்று ஆணவக்
கூக்குரல் எதற்கு மனிதா? மமதையுடன் மண்ணுக்கும் , தண்ணீருக்கும்
உரிமைக்  குரல்  எழுப்பும்  நீ அந்த விண்ணுக்கும் , விண்ணில் உள்ள
நிலவுக்கும் ,பகலவனுக்கும்   தனி  உரிமை கோர முடியுமா சொல்லு  ?
நதி மூலம் அறியாமல் உன் மதி மயங்கி  ஒரு நதியின்  ஓட்டத்தை
தடுக்க நினைக்காதே ! உன்   அரசியல் விளையாட்டுக்கு எல்லாம்
நதி என்னை பகடைக் காயாக்காதே !
நதி என்னை என் வழியில் ஓட விடு ..என் ஓட்டத்தையும்
இலக்கையும்  குலைக்க  நினைக்காதே !
Natarajan
13 sep 2016

படித்து ரசித்தது …” என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

 

TM-6

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆவது நாள் பட்டினப்பாக்கம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பால் காய்ச்சிக் குடியேறினோம். அடிப்படையில் நானோர் ஓவியன் என்பதால், இல்லத்தின் வரவேற்பறையில் என்னுடைய ஓவியங்கள் அழகுற அமைகின்றன. நான் ஓவியன் என்பதோடு கவிஞனும் என்பதால், வீட்டின் முகப்பில் மகாகவி பாரதியாரின் படத்தை மாட்டுகிறேன்.
புது வீட்டில் குடியேறிய மூன்றாம் நாள் எனக்கோர் வியப்பு! ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன! அசந்து போனேன் நான்! “”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடிய கவிஞனின் படத்தின் பின்புற இடைவெளியில் குருவிக்கூடு! அடடா என்ன பொருத்தம்!
இன்னொரு நிகழ்ச்சி… தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று கடிதம் கொடுக்க முடியாததால் அஞ்சல் துறையினர், அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் ஓர் அறிவிப்பினைச் செய்திருந்தார்கள்:
“குடியிருப்பாளர்கள் அனைவரும் தரைத்தளத்தில், படியேறும் முன்பாகவே, சுவரில் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைப் பொருத்துதல் நலம் பயக்கும்’ என நயமாகவும் அழுத்தமாகவும் அறிவித்திருந்தார்கள். அதன்படி எங்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைச் சுவரில் பொருத்தி விட்டோம்.
ஆச்சரியம் பாருங்கள்! மூன்றாம் நாள். மற்றவர்களின் அஞ்சல் பெட்டிகளை விட்டுவிட்டு, எமது அஞ்சல் பெட்டியில் மட்டும் குருவிகள் கூடு கட்டிவிட்டன! அடடே! எனது பெயரில் “பாரதி’யாரின் பெயரும் இணைந்திருக்கிறதல்லவா! பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும்! எனக்குச் சிலிர்ப்பாயிற்று. உடனே நான் ஒரு செயலைச் செய்தேன்.
அஞ்சல் பெட்டியின் குருவிக் கூட்டுக்குத் தொல்லை நேராமல் இருக்கவும், அஞ்சல்காரருக்கு வசதியாகவும், அஞ்சல் பெட்டியின் கீழே, ஒரு பையைக் கட்டித் தொங்கவிட்டேன். பெட்டியின் மேற்பகுதியில், ஓர் அட்டையில், “”பெட்டியில் குருவிக் கூடு; அஞ்சலைப் பையில் போடு” என எழுதி மாட்டிவிட்டேன். அதனைப் படித்த அஞ்சல்காரரும் ரசித்துப் புன்னகைத்தார்.
“மகாகவி பாரதி என்னுடன் இருக்கிறார்’ என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நானும் என் துணைவியார் திருமதி ராணியும் காசி நகர்ப் பயணம் செல்ல வாய்த்தது. பல இடங்களைப் பார்த்துவிட்டு, 19ஆம் தேதி காலை காசி நகர் போய்ச் சேர்ந்தோம். சுற்றுப் பயணக் குழுவில் எங்கள் பகுதியினர் தங்க வேண்டிய இடம் வேறு. ஆனால், நாங்கள் “அனுமன் காட்’ எனும் தெருவில் உள்ள விடுதியில் வந்து தங்கிவிட்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் “”பரவாயில்லை, இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மேல் கங்கையில் நீராடக் கிளம்பினோம்.
வெளியே பக்கத்து வீட்டுத் திண்ணையில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், “”அம்மா! பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பொதுவாகக் கேட்டேன்.
“”தெரியுமே! இதோ, இந்த எதிர்வீட்டில்தான் அவர் இருந்தார். அவரோட ஒன்றுவிட்ட மருமகன்கூட அங்க இருக்கார். டி.என்.கிருஷ்ணன்னு பேரு, போய்ப் பாருங்க” என்று அந்த அம்மையார் கூறியதைக் கேட்டதும் அசந்து போனேன் நான்!
எதேச்சையாக எங்கள் குழு இடம் மாறித் தங்கிடப் போக, அந்த இடத்தின் எதிர் வீடுதான் பாரதியார் தங்கியிருந்த “சிவமடம்’ என்கிற வீடு என்றால்… எப்படி இருக்கும் எனக்கு? “இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியில்லை; ஆத்மார்த்தமாக பாரதியாரை நேசிக்கும் எனக்கு அப்படிக் கருத முடியவில்லை.
அருவமாக முன்னின்று அவரே எம்மை, அவர் வாழ்ந்த சிவமடத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆமாம், “”என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

Source……….ஓவியக் கவிஞர் அமுதபாரதி in http://www.dinamani.com on Sep 11 2016

Natarajan