வாரம் ஒரு கவிதை…” தீ தின்ற உயிர் “

 

தீ தின்ற உயிர்
—————-
மகனே நீ உண்ணும் உணவு மணக்க.. தீ நான்
என் உயிர் கொடுக்கிறேன் தினமும் !
நீ உயிர் வாழ என் உயிர் தேவை உனக்கு நாளும் !
நான் உயிர் பிழைக்க நீ எதற்கு எனக்கு ?
மகனே … நீ ஏற்றி வைத்திருக்கிறாயே   சாதி மதத் தீ
அது … உன் அரசியல்  விளையாட்டில் நீ குளிர் காய !
பெட்டி பெட்டியாய் நீ பணம் சேர்க்க வட்டிக்கு
வட்டி , வட்டி மேல் வட்டி  என்னும் கந்து வட்டி
தீயும் நீ ஏற்றி வளர்க்கும் தீயே !  ஆனால்
மகனே ..கந்து வட்டி தீ ஒரு ஆட்கொல்லி தீ !
சாதி மத பேதம் இல்லாத கந்து வட்டி  கலாச்சாரம்
வட்டிக்கு கடன் வாங்கிய பலரை  உன் முன்னால்
முட்டி போட வைக்கும் … தட்டி கேட்க முடியாது உன்னை !
வட்டி கட்ட முடியாமல் புழுங்கி புகைந்து துடிக்கும்
ஒரு ஏழையின் குடும்பத்தை துடிக்க துடிக்க
பொசுக்குமே  உன் கந்து வட்டி தீ !
அவர் உயிரைப் பறித்து தின்றது உன்னுள் எரியும்
பணம் பணம் என்னும் பேராசை  தீ !
உன் பேராசை தீ தின்ற உயிரை,…  அக்னி நான்
தின்றேன் என்று மாற்றி சொல்லி விடாதே
மனிதா !
My Kavithai as appeared in http://www.dinamani.com dated 29th Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை …” வான வேடிக்கை “

வான  வேடிக்கை ….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இடி மின்னல் வேடிக்கை காட்டி வானம்
நான் தப்பாமல் நனைக்கிறேன் உன் மண்ணை !
வேடிக்கை காட்டியே  இந்த உலகுக்கு  உயிர்
கொடுப்பது  என்  வாடிக்கை !
உயிர் கொடுக்கும்  எனக்கு நீ கொடுக்கும் பரிசு
என்ன தெரியுமா உனக்கு ?..மகனே !
வான வேடிக்கை என்னும் பெயரில் வானம்
என் நாடித்  துடிப்பையே அடக்க நினைக்கிறாயே !
மகனே …இது நியாயமா ?
நீல வானம் வேண்டும்,  மாசில்லா காற்று
வேண்டும் எனக்கு என்று மேடையேறி பேசி விட்டு
எந்த ஒரு வெற்றி விழாவுக்கும் வேண்டும் ஒரு
வான வேடிக்கை என்று நீ கேட்பது வேடிக்கையிலும்
வேடிக்கை மகனே !
கரி எடுத்து என் முகத்தில் பூசி விட்டு ,வேண்டாம்
எனக்கு கரு வானம் …வேணும் எனக்கு
ஒரு நீல வானம் என்னும் உன் வாதம் ஒரு
ஒரு வேடிக்கை வினோதம் , மகனே !
My Kavithai in http://www.dinamani.com dated 23rd Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை… ” நிசப்த வெளியில் …”

 

நிசப்த வெளியில் …
———————
கருவறை வாசம் மட்டுமே   நிசப்த வாசம் ஒரு சிசுவுக்கு
இந்த மண்ணில் வந்து பிறந்த  நேரம் முதல் சத்தம்
சத்தமே எங்கும்  எதிலும் !
சப்தம் தவிர்த்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
வாழ்வில் ஒலியும்  சப்தமும்  தேவைதான்
ஆனால் வாழ்வே சப்தமாகலாமா ?
ஒளி மயமான எதிர் காலம் தேடும்  குழந்தைக்கு
கிடைப்பது ஒலி மயமான இரைச்சலும் அலைச்சலும்தான் !
அண்ட வெளியிலும் இல்லையே இன்று நிசப்தவெளி !
நாளும் பல  விண்கலம் அண்டவெளியில் சுற்றி சுற்றி
நிசப்த வெளியின் தனித்துவமே தகர்ந்து விட்டதே !
சப்தம் மறந்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
நிசப்தம் தேடி நாம் ஓடிட வேண்டாமே  …நம் வீட்டைத்
தேடி ஓடி வரும் நிசப்த வெளி நாம் நினைத்தால் !
வாரம் ஒரு நாள் …ஒரே ஒரு நாள் …கொடுப்போம்
விடுமுறை நம் வீட்டு தொலைக் காட்சிப் பெட்டிக்கு !
எப்போதும் சிணுங்கும் கைபேசிக் குழந்தைக்கும்
தப்பாமல் தர வேண்டும் ஒரு நாள் ஓய்வு !
இரைச்சல் இல்லாத ஒரு ஒரு வீடும்  நிசப்த
வெளியே !  அலைச்சல் இல்லாத வழியும்
இதுதான் நிசப்தம் தேடி ஓடுவோருக்கு !
My Kavithai in http://www.dinamani.com dated 16th oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை….” காந்திக்கு ஒரு கடிதம் “

 

காந்திக்கு ஒரு கடிதம்
———————-
விடுதலை பெற்று தந்தாய் என் தாய்
நாட்டுக்கு …உன்னையே விலையாகவும்
கொடுத்தாய் மத பேதம் இல்லா புதிய
பாரதம் ஒன்று படைக்க !
ஆனால் …
விடுதலை பெற்ற என் தேசம் இன்னும்
புது விடியலை தேடுதே …அது ஏன் ?
மதவாத அரசியலில் ஆதாயம் தேடுதே
ஒரு பெரும் கூட்டம் !
அது ஏன் ?
மூலைக்கு மூலை உன் சிலை
வைத்து காந்தி ஒரு பொம்மைதான் எங்கள்
அரசியல் விளையாட்டுக்கு என்று சொல்லாமல்
சொல்லுது ஒரு கூட்டம் !
காந்தியா …அது  யார் என்று கேக்குது
இன்னொரு கூட்டம் …காந்தி உன்னையே
மறந்த கூட்டம் காந்தீயக் கொள்கை கிடைக்குமா
ஒரு விலைக்கு என்று அலைவதும் உண்மை இன்று !
வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் பேச்சு
மட்டுமா ?  ஒளிமயமான வலுவான பாரதம்
பிறப்பது எப்போது ?  என் தேசம் புது விடியல்
காண்பது எப்போது ?
சிலையாய் இருக்கும் காந்தி நீ இப்போது
எடுக்க வேண்டும் மீண்டும் ஒரு பிறவி !
காந்தி சிலைகள் எல்லாம்  உயிர் பெற்று
பல நூறு புதிய காந்திகளாய் என் மண்ணில்
பிறக்க வேண்டும் இப்போதே !
என் மண்ணின் விடுதலைக்கு ஒரே ஒரு
காந்தி நீ இருந்தாய்.. இன்று
இந்த  மண்ணின் புது விடியலுக்கு  பல  நூறு
காந்தி வேண்டுமே  அய்யா !
மறுக்காமல் நீ பிறப்பாயா அய்யா மீண்டும்
என் மண்ணில் ? ஒரு புதிய பாரதமும்
மலர்ந்து ஒளிருமா என் கண் முன்னால் ?
My kavithai as published in http://www.dinamani.com on 8th Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…. ” புதிய ஓட்டம் ” …

 

புதிய ஓட்டம்
—————
ஓட்டமாய் ஓடுது வாழ்க்கை …தினம் தினம்
ஒரு ஓட்டம் …புதிய ஓட்டம் !
என் தாத்தாவின் கை பிடித்து ஓடிய நான்
இன்று என் பேரனின் பின்னால் ஓடுகிறேன் !
பேரன் குரல் கேட்டு ஓடுகிறேன்  அவன்
சொல்லும்படி  ஆடுகிறேன் … இது புதிய
ஆட்டம்  நான் ஓடும் ஓட்டத்தில் !
இந்த புதிய ஓட்டமும் ஆட்டமும் சலிக்கவில்லையே
எனக்கு…தினம் தினம் நான் புதியதாய் பிறப்பதால் !
புதிய ரத்தம் என்னுள்ளே புது வேகத்தில் சுரப்பதால் !
புதிய ஓட்டம் ஓடும் நான் ஒரு வட்டத்துக்குள் சுற்றவில்லை
குட்டிப் பயல்  என்னை கட்டிப் போடவும் இல்லை !
நான் ஓடிக் கொண்டே இருப்பேன் அவன் பின்னால் !
என் ஓட்டம்  நிற்காது அந்த சுட்டிப் பயல் ஒரு
சிகரத்தை எட்டி தொடும் வரையில் !
My Tamil Kavithai in http://www.dinamani.com  dated 1st Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை….” பறவையின் மனசு “

 

பறவையின் மனசு
——————–
பறவைக்கும் உண்டு மனசு ..
சிறகு கட்டிப் பறக்கும் அதன்
மனசும்… ஆசையும் பாசமும்
பறவைக்கும் சொந்தமே !
ஆனால் இலக்கு  ஒன்று மட்டுமே
பறவைக்கு குறி ! விதி விலக்கு
இல்லையே இதில் எந்த ஒரு பறவைக்கும் !
கண்டம் விட்டு கண்டம் பறக்கும்
பறவை எந்த பள்ளியில் படித்தது ?
எங்கே பாடம் கற்றது விண் வெளியில்
தன் பயண  வழி தேட ?
மனிதன் கற்க வேண்டும் பாடம்
ஒரு பறவையிடம் இன்று
தன்  இலக்கு நோக்கி சரியான
வழியில் பயணிக்க !
இங்கும் அங்கும் அலையாமல்
ஒரு  வழி அதுவும் நேர் வழியில்
பயணித்து  தன் வாழ்வின்  சிகரம்
தொட  இன்று மனிதனுக்கு  தேவை
பறவை சொல்லும் பாடம் !
Natarajan
in http://www.dinamani.com dated 25th Sep 2017

வாரம் ஒரு கவிதை… ” பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் “

 

பிஞ்சு மனங்களும்  செல்ல மழையும் 
…………………………………………………………………
 
என் பிஞ்சு கைகளை ஆட்டி  கொஞ்சும்
மழலையில் நான் சொல்லிவிடுவேன் என்ன
வேண்டும் எனக்கு என்று !
எந்த மொழி பேசினாலும்  என் மழலை
மொழி புரியனுமே    என் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் !
என் மழலை கேட்டு அம்மா  அப்பா கொட்டும்
செல்ல மழையில்  நனையனும் நான் எப்போதும் !
என் மழலை வயதில் உங்க செல்ல மழை
மட்டுமே  வேண்டும் எனக்கு அம்மா …. அது ஒரு
இனிய தூறல் மழை ! பாசத்தின் சாரல் மழை !
இடி  மழை  எனக்கு வேண்டவே வேண்டாமே
இந்த பிஞ்சு வயதில் …தாங்க முடியுமா நான்
ஒரு இடி முழக்கத்தை இந்த வயதில் ?
புரிஞ்சுக்கணும் ஒரு பிஞ்சின் மனதை நீங்க
செல்ல மழை  பெய்ய வேண்டிய நேரத்தில்
தப்பாமல் பெய்ய வேண்டும் செல்ல மழை !
உங்க மனசு நான் புரிஞ்சு நடக்கும் காலம்
மலரும் நேரம்…. சொல்லாமல்
கொள்ளாமல்  ஓய்ந்து விடும் செல்ல மழை !
My Kavithai in http://www.dinamani.com  on 17th Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” சேர்த்து வைத்த கனவு “

 

சேர்த்து வைத்த கனவு…
———————–
காணலாம் கனவு …நீ ..தம்பி.! சேர்த்து வைக்க மட்டும் அல்ல
உன் கனவு ! கனவு நனவாக நீ கட்ட வேண்டும் ஒரு
படிக்கட்டு ..திட்டமிட்டு நீ தாண்டவேண்டும் படிகள் அத்தனையும் !
பெரிதாக யோசி என்று சும்மாவா சொன்னார்கள் நம்
ஆன்றோர்  சான்றோர் ! வானமே உனக்கு எல்லை !
விண்ணில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டிய  நீ
இந்த மண்ணில் ஒரு வட்டத்தில் மட்டும் சுழல வேண்டுமா ?
தன் கூடுதான் தன் உலகம் என்று ஒரு பறவை நினைத்தால்
இந்த மண்ணிலிருந்து விண்ணில்  அது பறப்பது எப்படி ?
சிறகடித்து பறக்கும் அந்த பறவையைப் பார்த்து நீ
கற்றுக்கொள்  தம்பி..இந்த மண்ணில் மட்டும் அல்ல
விண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டப் பிறந்தவன் நீ என்று !
உன் கனவு எல்லாம் நனவாக வேண்டுமே அல்லாமல்
சேர்த்து வைத்து மறக்க அல்ல  உன் கனவு !  பார்த்து
நடக்க வேண்டும் தம்பி நீ ! கடக்க வேண்டும் தடைக்
கற்களையும் உன் வெற்றிப் படிகளாக்கி !
வானமே உனக்கு எல்லை …இல்லை உனக்கு
எதுவும் தொல்லை என்று நடுவில் !
My Tamilkavithi in www. dinamani.com  dated 10th Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” நிலைக்கும் என்றே ….”

 

நிலைக்கும் என்றே …
———————
மாற்றம்  ஒன்றே நிரந்தரம் …அது ஒன்றே
நிலைக்கும் என்றென்றும் என்ற ஆன்றோர்
வாக்கு பொய்க்காதே தம்பி …
ஆன்றோர் சான்றோர் சொல் மறந்து என்றும்
நிலைக்கும் என் பதவியும் பணமும் என்று
நீ நினைக்க வேண்டாம் தம்பி !
மாற்றம் கொடுக்கும் ஏற்றம் ஒருவனுக்கு !
அதே மாற்றம் ஒருவனுக்கு ஏமாற்றம் !
இது உலக நியதி !  விதி விலக்கு ஏதும்
இல்லையே இதில் !
வாழ்வில் சுகமும் துக்கமும் என்றும் உன் வாழ்வில்
நிலைக்கும் என்றே எண்ணி விடாதே தம்பி !
“இதுவும் எதுவும்  கடந்து போகும்” என்று சொல்லி
நீ நேர்  வழி நடந்தால் உன் பெயர் மற்றவர்
மனதில் நிலைத்து நிற்கும் இன்றும் என்றும்
என்றென்றும் !
My Kavithai in http://www.dinamani.com dated 3rd Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” கண்ணால் காண்பதும் …”

 

கண்ணால் காண்பதும் …
——————–
கண்ணால் காண்பதும் பொய் …காதால்
கேட்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய் !
இது சான்றோர் வாக்கு !
பதவியும் பணமும் இருக்கும் வரை உன்னை சுற்றி
ஒரு கூட்டம் இருக்கும் எப்போதும் !…நீ உன் கண்ணால்
பார்த்தாலும்  அந்த கூட்டம் ஒரு பொய் !
நீ உன் காதால் கேட்டாலும் உன் புகழ் பாடும்
அந்த கூட்டத்தின் பாட்டும் ஒரு பொய்தான் !
மயங்கி விடாதே தம்பி  நீ …ஒரு பொய்யின்
அழகில் ! மதி மயங்கி உன்னை இழந்து விடாதே
ஒரு மாய வலையில் சிக்கி !
கண் கொண்டு எதை நீ பார்த்தாலும் , உன்
காதால் எதை நீ கேட்டாலும்
உன் கண்ணுக்கு தெரியாத உன் மனம் மட்டும்
சொல்லும் நீ செய்வது சரியா இல்லை தவறா என்று !
உன் மனது சொல்லும் வாக்கே மெய் வாக்கு !
கண்ணுக்கு தெரியாத உன் மனத்தின் மெய் வாக்கை
நீ காது கொடுத்து கேட்கவேண்டும் தம்பி …
கேட்டு உன் மனம் காட்டும் நல் வழியில் நீ நடந்தால்
கூட்டத்தில் ஒருவனாய் நீ இருக்க மாட்டாய் தம்பி !
உன் வீட்டையும்  நாட்டையும் நல்  வழி நடத்தும்
ஒரு நல்ல தலைவனாய் நீ மிளிர்வாய்  தம்பி !
உன் மனம் சொல்லும் மெய் வாக்கு  கேட்டு  நீ நடந்தால்
நீ சொல்லும் ஓவ்வொரு சொல்லும் ஒரு
வேத வாக்கு …அதுவே உன் செல்வாக்கு !
K.Natarajan
as appeared in http://www.dinamani.com dated 27th august 2017