” இந்த தங்க கிண்ணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு…”

அந்த அம்மாள் காஞ்சிமாமுனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். தாம் கண்ட ஆச்சர்யமான கனவு ஒன்றை ஸ்வாமிகளிடம் விவரித்தார். “நான் ஒரு தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும் திராட்சைப் பழமும் சமர்ப்பித்துத் தங்களிடம் ஆசியைப் பெறுவதுபோல் கனவு கண்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்படியா, அதுமாதிரி செய்ய உனக்கு விருப்பம் இருந்தா அப்படியே செய்” என்றார் ஸ்வாமிகள்.

“இந்த ஏழையிடம் அதற்கான மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லையே!” என்று ஏக்கத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.

“சௌகரியப்படும்போது செய்யலாம்” என்றார்கள்.

சிறிது காலம் சென்றது. அந்த அம்மாளின் பெரிய தகப்பனார் தம் சொத்தில் ஒரு பங்கை அந்தப் பெண்மணி பேருக்கு எழுதி வைத்து இறந்து போனார். அதன் பிறகு அந்த அம்மாள் சுமார் ரூபாய் நான்காயிரம் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் வந்தார். ஒரு தட்டில் பணத்தைச் சமர்ப்பித்தார்.

“எதுக்கு இந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கிறாய்!” என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மாள் தாம் முன்பு கூறியபடி தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும், திராட்சையும் சேர்த்துக் கொடுப்பதற்குப் பதில் பணமாகவே சமர்ப்பித்து விடலாம் என்று எண்ணியதாகக் கூறினார்.

“உன் சொப்பனத்தில் நீ எப்படிச் செய்கிறதாகக் கண்டாயோ அதுமாதிரி விருப்பமானால் செய்யலாம். அதுக்குப் பதில் பணமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் ஆசார்ய ஸ்வாமிகள்.

அந்தப் பெண்மணி பணத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார். தங்கத்தினால் சிறிய கிண்ணம் ஒன்றைச் செய்வித்து, அதில் நிறைய கற்கண்டும், திராட்சைப் பழமும் வைத்து மறுபடியும் ஸ்வாமிகளிடம் கொணர்ந்தார். அந்தச் சமயம் அவர்கள் காட்டுப்பள்ளியில் எழுந்தருளி இருந்தார்கள். தங்கக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள் அந்தப் பெண்மணிக்கு ஆசி வழங்கினார்கள். அந்த அம்மாள் தன் கனவு நிறைவேறியதனால் மிக்க மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.

பிறகு ஸ்வாமிகள் மடத்து அதிகாரியிடம், “இதைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில் ஆக்ஷேபம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அதிகாரி சற்றுத் தயங்கினார். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த சமயம் அது. அவருடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டார்கள் ஸ்வாமிகள். “இதை இப்படியே மடத்துக் கணக்கில் சேர்த்துவிட்டால் நான் ஒரு பொய்க்கு உடந்தையாக இருந்ததாக முடியும். நான் உங்களுக்கெல்லாம் வழி காட்டுகிற பீடத்தில் இருந்து கொண்டு ஒரு பொய் சொன்னால், அப்புறம் நீங்களெல்லாம் அதுபோல் ஒன்பது மடங்கு பொய்யைக் கூசாமல் சொல்லலாம் அல்லவா? எனவே எது நியாயமோ அதையே செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

சரி. அப்படியானால் ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் அதிகாரி திகைத்தார். “இந்தக் கிண்ணத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்று முதல் மந்திரியிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி உடனே அதை அனுப்பி விட்டார்கள்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் – (1965). சென்னை சென்றிருந்தவர்கள் அப்பொழுதிருந்த முதல்வர் மூலமாக அந்த தங்கக் கிண்ணத்தை யுத்தத்தின் முன்னணியில் நின்ற நம் வீரர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்த பிரசாதம் போர்முனையில் நின்ற நம் பாரத வீரர்களுக்கு விநியோகிக்கப் பெற்றது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும்படி வேண்டுங்கள்.


* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.

ஓவியமா இல்லை காவியமா … !!!

 

 

 

 

 

 

 

 

 

 

கோவை நண்பர் விஜயகுமார் ஒரு அழகான ஓவியத்தை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தா

பார்த்த உடனேயே இது ஒரு புகைப்படமோ என நினைக்கத்தோன்றும் வகையில் தத்ரூபமாக அந்த ஓவியம் அமைந்திருந்தது.

ஓவியம் வரைந்தவர் யார் என்பது தெரிந்தால் அவரை படத்துடன் கவுரப்படுத்தாலாமே என விசாரித்தேன்

கள்ளம் கபடமில்லாத ஒரு அழகான கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்தியது அந்த ஓவியத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, அதன் மேலான லயிப்பு காரணமாக படத்தை பகிர்ந்து கொண்டேன்; (ஷேர்) அதைத்தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை என்றார் நண்பர்.

வாசகர்கள் கண்டு பிடித்த ஓவியர்:

இன்னும் கொஞ்சம் தேடலை ஆழப்படுத்தியபோது ஓவியர் பற்றிய விவரங்கள் கிடைத்தது.(விவரங்கள் கொடுத்து உதவிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி.)

எஸ்.இளையராஜா என்ற அந்த இளம் ஓவியர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்தவர். ஆயில் பெயின்ட், வாட்டர் கலர், மற்றும் அக்ரிலிக்கில் ஓவியம் வரைவதில் இவர் சிறந்தவர். ஓவியம் வரைவதற்கு அவர் என்ன பாணியை கடைபிடிக்கிறார் என்பதைவிட ஓவியங்களில் உள்ள பெண்களிடம் காட்டிய கண்ணியம், அழகு ஆகியவைதான் கவித்துவம் பெறுகின்றன. மிகப்பெரிய புகழை இந்த ஓவியர் நிச்சயம் அடைவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது தொடர்பு எண்: 9841170866.
ஓவியங்களில் கிராமத்து மண் மணம் மணக்கிறது, வெள்ளந்தியான பெண்களின் இயல்பான அழகுடன் காணப்படுகின்றனர். குடிசை வீடுகளும் வீடுகளுக்குள் காணப்படும் விறகு அடுப்பும், அதன் மீது விழும் வெளிச்ச கோடுகளும் அழகோ அழகு.அழுத்தந்திருத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ள இந்த ஓவியங்களை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

இயற்கையோடு இணைந்த பொற்காலம்:

பாஸ் பண்ணுவதற்கு மட்டும் கொஞ்சமாய் படித்து, நிறைய விளையாடி, தண்ணீர் சேருமோ சேராதோ என்ற சந்தேகம் இல்லாமல் கிடைத்த தண்ணீரை தாகம் தீரகுடித்து, கலோரி பார்க்காமல் சாப்பிட்டு,அது செரிக்க செரிக்க சிரிக்க சிரிக்க பேசி, படுத்தவுடன் தூங்கி, சைக்கிளோடு உறவாடி, பாண்டி, கபடி என விளையாடி இனிமையாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பொற்காலத்திற்கே இந்த ஓவியங்கள் இழுத்துச்செல்வது மட்டும் நிஜம் ….

Source:::: எல்.முருகராஜ்  in DINAMALAR…TAMIL DAILY

Natarajan

Great Moments…. Memorable Ones…

sweet moments in photos

 

sweet moments in photos

sweet moments in photos

 

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

The human experience is an incredibly complex one, full of an endless series of moments, emotions, thoughts and connections. In all of these, there is good and bad, sweet and sour, ups and downs. We all know the downs, but what are some of the best moments about being alive? Well,  above  are some

Source::::ba-ba mail site

Natarajan

” Hug of the Century … ” !!!

 

 

>  The woman in the video found this injured lion in the forest, about to
> die.  She nursed the lion back to health, and when the lion was better, she
> made arrangements with a zoo to take the lion and give it a new and happy
> home.
>
> This video was taken when the woman, after five years, went to visit the
> lion to see how he was doing. Watch the lion’s reaction when he sees her.
> AMAZING!!!
Source ::::You Tube & input from a friend of mine
Natarajan

“காணாமல் போன கடிதங்கள்…” !!!

 

தமக்கு வந்த கடிதங்களை

இன்றும் பெட்டியில்

பாதுகாத்து வைத்திருக்கிறார் அப்பா..

ஒரு காலை நீட்டியும் மற்றதை மடித்துக் கொண்டும்

தரையில் அமர்ந்து

வாழ்க்கைப் போராட்டங்களை முணுமுணுத்தபடி

கல் எந்திரத்தில் மாவு அரைக்கையில்

ஓரங்களை வழித்துப் போட

அஞ்சலட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வாள் பாட்டி

மரண சேதியைக் கொண்டுவந்தவை

வாசித்த மாத்திரத்தில் கிழிபட்டுப்போக

எஞ்சிய கடுதாசிகள்

குத்தியிருக்கும் கம்பியை

எரவாணத்தில் செருகி வைத்திருந்த தாத்தா

ஒருபோதும் அவற்றை

மீண்டும் எடுத்துப் பிரித்ததில்லை

கடிதம் எழுதுதலைப்

பள்ளிக்கூடத் தேர்வோடு

கழற்றி வீசும் காலத்தில்

மின்னஞ்சல்களில் நிரம்புவதையும்

அலைபேசியில் நெரிபட்டு

உறுத்தும் குறுஞ்செய்திகளையும்

படிக்கவோ

பதில் போடவோ

அசை போடவோ

சேமித்து வைக்கவோ – ஏன்

அழித்துப் போடவோ கூட

நேரமற்றுத் திரிகின்றன

நட்பும் உறவும் தொலைத்துத்

தேடிக் கொண்டிருக்கும் தலைமுறைகள்.

Source:::: எஸ் வி வேணுகோபாலன்  in The Hindu…Tamil

Natarajan

“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

” கப்பி காரில் சவாரி …” மலரும் நினைவுகள் !!!

 

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க” என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது – அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…” என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு” என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்” என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்” என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு” என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்” என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

– மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan