” தொகை ரொம்ப பெரிசு …நீ எப்பிடி பண்ணுவே…” ?

பகவானே தன் பக்தர்களோட நேர்லவந்து பேசின சம்பவம் எல்லாம் புராண காலத்துல நிறைய நடந்திருக்கு.
மகாபெரியவாளோட வாழ்க்கைலயும் அப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒரு ஆச்சர்யமான சம்பவத்தையும், ஸ்ரீரங்கம் கோயிலைப் பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் இப்போ சொல்றேன்.


1983ம் வருஷம் வாக்குல நடந்த சம்பவம் இது. அப்போ மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கற சதாராவுக்கு விஜயம் பண்ணியிருந்த மகாபெரியவா, அங்கே மஹாகாவ் என்கிற கிராமத்துல தங்கியிருந்தார்.
ரொம்ப எளிமையான இடத்துல ஒரு சின்ன அறை பெரியவா நித்யபடி பூஜை. அனுஷ்டானங்களை செய்யறதுக்கு ஒதுக்கப்பட்டிருந்துது. அதுக்கு கதவுகூடக் கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மாத்திரம் இருந்தது. மத்தபடி எல்லாருக்கும் தரிசனம் தரவும் மத்தவா தங்கிக்கவும் மாட்டுக் கொட்டகை ஒண்ணுதான் சுத்தப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.
அங்கே ஒருநாள் மகாபெரியவா தினசரி அனுஷ்டான பூஜையை ஆரம்பிச்ச சமயத்துல எங்கே இருந்தோ ஒரு பெரிய கருநாகம் வேகவேகமா வந்து, பெரியவா தங்கியிருந்த அறை வாசலை மறைச்சமாதிரி படத்தை விரிச்சுகிட்டு நின்னு ஆட ஆரம்பிச்சது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி! கூடவே பயம்!
உள்ளே பெரியவா மெய்மறந்து பூஜை பண்ணின்டு இருக்கார். கூப்பிட்டுச் சொல்லவும் முடியாது. பாம்பை விரட்டலாம்னா, அதோட உருவமே கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரமா இருந்துது. என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்சுண்டு இருந்த சமயத்துல அந்த பாம்பு மெல்ல நகர்ந்து ஜன்னல்ல ஏறி உள்ளே நுழைங்சு பூஜை பண்ணின்டு இருந்த பெரியவா பக்கத்துல போய் கொஞ்ச நேரம் அப்படியே ஆடாம அசையாம நின்னுது. “புஸ்.. புஸ்’னு அது எழுப்பின் சத்தம் எதிரொலி மாதிரி கேட்டுது. சுத்தி நின்னவாளோட இதயம் லப்டப்னு அதுக்கு ஈக்வலா அதிர்ந்துது. இத்தனை ஆரவாரத்துலயும் பெரியவா முகத்துல துளி சலனம் இல்லை. கருமமே கண்ணா, பூஜை பண்ணிண்டு இருந்தார் அவர்.
எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். வந்த வேலை முடிஞ்சுதுங்கற மாதிரி அந்தப் பாம்பு சரசரன்னு வெளியில வந்து சட்டுன்னு எங்கேயோ போய் மறைஞ்சுடுத்து.
அதுக்கு அப்புறம் ரொம்பநேரம் கழிச்சு, பூஜையை முடிச்சுட்டு எழுந்தார் ஆச்சார்யா. எல்லாரும் பதட்டமும் பரபரப்புமா பாம்பு வந்துட்டு போன விஷயத்தை அவர்கிட்ட சொன்னாங்க. ஆனா, கொஞ்சம்கூட ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லாம எல்லாம் தெரியும்கிற மாதிரி அமைதியா கேட்டுண்டு ஒரு புன்னகை மட்டும் செஞ்சார் பெரியவா.
அவரோட அந்த தெய்வீகச் சிரிப்புக்கு என்ன காரணம்னு அடுத்த நாள் தெரியவந்துது. அன்னிக்கு மத்தியானம் பெரியவாளை தரிசிக்க வந்தவாள்ல இருந்த ரெண்டுபேர் ரொம்பவே பரபரப்பா இருந்தாங்க. அந்த ரெண்டுபேர்ல ஒருத்தர், ரொம்ப பிரபலமான இசையமைப்பாளர், இன்னொருத்தர் தெய்வீக ஓவியர். இசையமைப்பாளர், ஓவியர்கிட்டே பேசறச்சே, பரமாசார்யார்கிட்டே இருந்து ஏதோ உத்தரவு கிடைச்சிருக்கிறதாகவும், அதை நிறைவேத்தறதா வாக்குறுதி தரவே வந்திருக்கிறதாகவும் சொல்லிண்டு இருந்தார். யார் அவங்க, என்ன வாக்குறுதின்னு சொல்றதுக்கு முன்னால ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிடறேன்.
ஸ்ரீரங்கத்துக்கு ராஜகோபுரத் திருப்பணி நடந்துண்டிருந்த காலகட்டம் அது. பதிமூணு நிலைகளோட கம்பீரமா அமைக்கத் திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, அதுக்கான செலவு ரொம்பவே அதிகமா இருந்துது. ஒவவொரு நிலையையும் கட்ட ஒவ்வொருத்தர் பொறுப்பு ஏற்றுக்கிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல ஒர நிலைக்கான செலவை ஏத்துண்டிருந்தவர்கஙளால தவிர்க்க முடியாத காரணத்தால அதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுது. அதனால, அந்தப் பொறுப்பை வேறயாருக்காவது தரவேண்டிய கட்டாயம் வந்துது. இதையெல்லாம் விளக்கி அப்போ இருந்த ஜீயர் சுவாமிகள் மகாபெரியவாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். லெட்டர் வந்ததுமே, அந்தப் பொறுப்பை யார்கிட்டே ஒப்படைக்கிறதுன்னு யோசிச்சார் மகாபெரியவா. மடத்துல இருந்தவங்க ஆளுக்கு ஒரு பெரிய மனுஷா பெயரைச் சொன்னாங்க. ஆனா, பெரியவா சினிமாவுல இசைத்துறையில பிரபலமான ஒருத்தர் பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்.
சரி, ஆளை தேர்ந்தெடுத்தாச்சு, அவர்கிட்டே எப்படிச் சொல்றது? அவர் சம்மதிப்பாரா மாட்டாரா? இப்படி எதுவுமே தெரியாத நிலையில தான், எங்கேயோ ஒரு கிராமத்துல போக்குவரத்துக்கே கஷ்டமான பகுதியில தங்கியிருந்த பெரியவளை தரிசிக்க வந்திருந்தார் மகாபெரியவா தேர்ந்தெடுத்த அதே பிரபலமான இசையமைப்பாளர். வரிசையில் வந்த அவர், பெரியவாளை தரிசிச்சு, நமஸ்காரம் பண்ணினார். எதுவும் சொல்லாம அவரை ஆசிர்வதிச்ச ஆசார்யா, “ராத்திரி நேரமாகப் போறது, இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் புறப்படுங்கோ!’ அப்படின்னு சொன்னார்.
அன்னிக்கு ராத்திரி வழக்கமான தரிசனமெல்லாம் முடிங்சப்புறம் பெரியவா அந்த ரெண்டு பேரோடயும் பேசிண்டு இருந்தார். அப்போ இசைத்துறை சம்பந்தமா, ஓவியம் சார்ந்ததா, வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை பத்தின்னு ஏராளமான விஷயங்களை அவாகூட பேசிண்டு இருந்தார் ஆசார்யா. ஆனா, கோபுரம் கட்டவேண்டிய விஷயத்தைப்பத்தி பெரியவா எதுவமே அப்போ சொல்லலை.
மறுநாள், நித்யகர்மா எல்லாம் முடிங்சுது. அந்த ரெண்டுபேரும் பெரியவாளை தரிசிக்க வந்தாங்க. “பெரியவா, என்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்போறதா ஒரு தகவல் கிடைச்சது. இது என்னோட பாரம் இல்லை. உங்க பாரம்! இதை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நீங்களாவே நடத்திப்பீங்கன்னு தெரியும். உங்க கட்டளையை நான் ஏத்துக்கறேன்’ அப்படின்னார், இசையமைப்பாளர்.
“கிட்டத்தட்ட எட்டுலட்சம் ஆகும்கறா. தொகை ரொம்ப பெரிசு. நீ எப்படிப் பண்ணுவே?’ கேட்டரா ஆசார்யா.
“இதுக்குன்னே தனியா ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன். வர்றதை அப்படியே குடுத்துடறேன். நிச்சயமா முடியும்?’
சொன்ன இசையமைப்பாளருக்கு ஆசிர்வாதம் பண்ணி ஒரு மாம்பழத்தைப் பிரசாதமா குடுத்துனுப்பினார் ஆசார்யா.
ரொம்ப சந்தோஷமா புறப்பட்டாங்க அவங்க ரெண்டு பேரும். சொன்னபடியே செஞ்சு முடிச்சார். அந்த இசையமைப்பாளர். ஸ்ரீரங்கம் கோபுரத்தோட ஆறாவது நிலை, அவரோட கைங்கரியமா கட்டப்பட்டுது.
எல்லாம் முடிஞ்சு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடந்த சமயத்துல மடத்துக்கு பிரசாதம் வந்துது. அன்னிக்கும் ஒரு பாம்போட நடமாட்டம் கண்ணுல பட்டதா எல்லாரும் சொல்லிண்டாங்க. அப்போதான் புரிஞ்சுது, மஹாகாவ்ல பெரியவா பூஜை பண்ணின சமயத்துல பெரிய பாம்பு வந்தது. ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவாகிட்டே பேசியிருக்கலாங்கறது.
எல்லாம் சரி, ஸ்ரீரங்கம் கோபுரத்துல ஒரு நிலையை மகாபெரியவா ஆணைப்படி கட்டித்தந்த அந்த இசையமைப்பாளர் யார்? அவர்கூட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்த ஓவியர் யாருன்னு சொல்லவே இல்லையேன்னுதானே கேட்கறீங்க?
இசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியும்தான் அவங்க.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bhakthi 

Natarajan

” உனக்கு ஒன்றுமில்லை … போ …” !!!

Source: Email message forwarded by our respected member Sri Ramanathan

சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கடவுள் நம்பிக்கையுடையவராயிருந்தாலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே.

வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார்.

அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி “உன் மாங்கல்யத்தைத் தருகிறாயா?” என்று கேட்டார்கள். விடிந்தவுடன், அப்போது உடனடியாக ஒரு மஞ்சள் கயிறு கூட இல்லாத நிலையில் ஒரு சணற் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அணிந்து கொண்டு, மாங்கல்யத்தைப் பெரியவாளுக்காக எடுத்து வைத்துவிட்டாள்.

பின் மௌளியிடம் போனில் விஷயத்தைச் சொன்னார்கள். மௌளி அவர்களை உடனே வந்து பெரியவாளை தரிசனம் செய்யச் சொன்னார். ஆனால், அவர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் காஞ்சி மடத்திற்கு வர முடிந்தது.

உள்ளே படுத்துக் கொண்டிருந்த பெரியவாள் மௌளியிடம், “யாராவது தரிசனத்திற்கு வந்திருக்கிறார்களா” என்று வினவினார்கள். மௌளி, “பெரியவாளுக்குச் சிரமம் வேண்டாம்; வெளியில் வரும்போது தரிசனம் கொடுக்கலாம்” என்று சொன்னார்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தம்பதிகளை உள்ளேயே அழைத்து வரும்படி உத்திரவிட்டார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் மௌளியின் மாமா பெண்ணைப் பார்த்து. “அதைக் கொண்டு வந்திருக்கிறாயா? தா, தா .. ” என்று கேட்டு மாங்கல்யத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு பக்கத்திலிருந்த பாலுவிடம் ஒரு பழம் கொண்டுவரச் சொன்னார்கள். அவர் சாத்துக்குடி கொண்டு வந்ததும், “இந்த புளிப்புப் பழம் வேண்டாம்; வேறு நல்ல பழம் கொண்டுவா” என்றார்கள்.

ஒரு நல்ல ஆப்பிள் வந்தது. அதை நகத்தால் கிள்ளிக் கொண்டே வெகு நேரம் கேப்டன் மாப்பிள்ளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அந்த ஆப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, “உனக்கு ஒன்றுமில்லை, போ” என்று கூறினார்கள்.

வேலூர் சென்றவுடன் மாப்பிள்ளையை மறுபடியும் பரிசோதனை செய்த சிறு நீரக சிறப்பு மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.

கிட்னி இரண்டும் ஒரு குறையுமில்லாமல் நன்றாக வேலை செய்தன.

“என்ன நடந்தது?” என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் அந்த டாக்டர், “Oh, he is God; He can do anything” என்று வியப்புடன் சொன்னார்.

20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை [2006] எந்தத் தொந்திரவும் இல்லாமல் இருக்கிறார்.

முன்பு பெரியவாள் என்றாலே உதாசீன, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4812/#ixzz3Jh1hMo8T

“எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர் …” ?

‘கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.

Author: கவிஞர் நெமிலி எழில்மணி.

பெரியவாள் போர்த்திய துப்பட்டா.

கருணை பொழியும் காமாட்சி வாழும் காஞ்சி
காமகோடி பீடம் விளங்கும் எழிலான காஞ்சி.
க்ஷேமத்தினை அளிக்க வல்ல ஏகம்பனின் காஞ்சி
சம்பத்தை அளிக்கின்ற வரதனின் காஞ்சி.

அந்தக் காஞ்சீபுரத்தில் இரவுப் பூக்களை மெல்ல உதிர்த்து விட்டு சூரியன் தன் விடியல் வெளிச்சத்தோடு பிரவேசித்தான்.

வழக்கம்போல் காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும் காமகோடிப் பெரியவாளின் கண்கொள்ளா தரிசனம் காண திரளான கூட்டம். ஏக்கத்தைத் தேக்கியுள்ள ஏழை மக்களின் கவலை முகங்கள் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகத்தைக் கண்டவுடன் ஏக்கத்தை மறந்தன. கவலைகள் பறந்தன. பரமாச்சார்யாள் வழங்கும் ஆசியிலே மெய்ம்மறந்து நீங்காத சுகம் பெற்றன. அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் அருகினிலே நான்கைந்து மூக்குக் கண்ணாடிகள்.

அன்று மின்னொளி இல்லாமையால் அன்பர் ஒருவர் ‘டார்ச்’ விளக்கொளியைக் காட்டத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமாச்சார்யாள்.

அதில் ஒன்றில் நான்கைந்து பக்கங்கள் அடங்கிய சம்ஸ்கிருத ஸ்லோகங்கள். யாரோ ஒரு அன்பர் தமது இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கான பத்திரிகையை உடன் வைத்து அதனுடன் காணிக்கையாக அந்த ஸ்லோகங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

மெல்லப் படித்துக் கொண்டிருந்த கருணை மேகம் தம் முகத்தை மேல் நோக்கியவாறு பார்த்து விழிகளாலே ஒரு வினாவை எழுப்பியது.

ஆம்! “இந்த ஸ்லோகங்களைப் படிக்கிறவா இங்கே யாராவது இருக்காளா ?” என்ற வினாதான் அது.

அனைவரும் அமைதியாயிருந்தனர். பெரியவர் விடவில்லை.

தமது திருவாய் மலர்ந்து வாய்மொழியாகவே, “இங்கே சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவா யாராவது இருக்காளா? இந்த ஸ்லோகத்தைப் படிக்கணும் !” என்று கேட்டார்.

அப்போது அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஓர் ஏழைப் பிராம்மணர் பெரியவாள் அருகே வந்து, “நான் படிக்கலாமா?” என பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

உடனே காஞ்சி மாமுனிவர் அந்தக் கடிதங்களைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

மெல்ல அவற்றை எடுத்து பிரித்து வைத்துக்கொண்டு கம்பீரமாகப் படிக்கலானார் அந்தப் பிராம்மணர்.

அந்த ஸ்லோகங்களைக் கேட்கக் கேட்க பெரியவாள் முகத்திலே பூரிப்பு மலர்ந்தது. கேட்கக் கேட்க பிரம்மானந்தமாக அதனைப் பெரியவாள் அனுபவித்தார்,

அந்த ஸ்லோகங்களை எழுதிய அன்பருக்கு புடவை வேஷ்டிகளை அனுப்ப உத்தரவிட்டார். திருமணத்திற்கு, நான்கு வேதங்களும் அறிந்த வேத விற்பன்னர்களை அனுப்பிவைக்கவும் ஆணைகள் பிறப்பித்தார்.

அந்த ஸ்லோகங்களைப் படித்து முடிக்கவும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் அவர்களின் P.A. அவர்கள் வரவும் சரியாயிருந்தது. ஸ்லோகங்களைப் படித்த அந்த அன்பர் மெல்ல நகர்ந்து ஓரமாக வந்துவிட்டார்.

உடனே அமைச்சரின் P.A. அவர்கள் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

பெரியவாள் புன்சிரிப்புடன் ஆசி செய்துவிட்டு, “சிதம்பரம் எந்த டிபார்ட்மெண்ட் பார்க்கறார் ?” என்று கேட்டார்.

P.A. அவர்கள் பதில் கூறுவதற்குள், “முன்னாலே வெங்கடசுப்பையா பாத்துண்டிருந்தாரே அந்த டிபார்ட்மெண்ட்தானே ?” என்றாரே பார்க்கலாம் ! சுமார் அரை மணி நேரம் மிகவும் அன்புடன் சம்பாஷித்த பெரியவாள் துப்பட்டா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அழகான சால்வை வந்து சேர்ந்தது.

“பெரியவா கூட மினிஸ்டர் P.A. வந்தவுடன் துப்பட்டா கொண்டுவரச் சொல்லிவிட்டாரே ?” என்று ஒரு கணம் நினைத்தேன்.

மறுகணம் பளீரென்று எனக்கு ஒரு சாட்டை அடி விழுந்தது.

ஆம்! அந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டே, “எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர்?” என்று ஸ்வாமிகள் கேட்டாரே பார்க்கலாம்!

தூரத்திலிருந்த அன்பர் பெரியவாள் அருகே ஓடி வந்தார்.

“இந்த துப்பட்டாவை அவருக்குப் போர்த்து!” என்று எடுத்துத் தந்ததும் அந்த அன்பர் துடித்துப் போய்விட்டார்.

“பெரியவா தரிசனத்துக்குத்தான் நான் வந்தேன். இப்படிப் பெரியவா பண்ணுவான்னு நன் நினைக்கல்லே! எனக்குப் போய்…… “ என்று அந்த அன்பர் பேசமுடியாமல் திணறினார்.

“உனக்கா போர்த்தறேன்? உன்னோட வித்வத்துக்குத்தானே போத்தறேன்! தைரியமா நான் படிக்கறேன்னு சொல்லி படிச்சுக் காண்பிச்சயே ! அதுக்குத்தான் இந்த மரியாதை !” என்றார் பெரியவர்.

ஒரு கணத்தில் பெரியவாளைப் பற்றித் தப்பாக நினைத்த நான் மனம் வருந்தி கன்னங்களில் போட்டுக் கொண்டேன். எல்லோரையும் போல் அவரையும் நினைக்க இந்தக் குட்டிச்சுவரான மனத்திற்கு எப்படித்தான் முடிந்ததோ? “மன்னிக்கணும் ! மன்னிக்கணும்!” என்று பரமாச்சார்யாளின் பாதங்களில் மானசீகமாக விழுந்து அரற்றிக் கொண்டிருந்தேன்.

அரைமணி நேரத்துக்கும் மேலாக வேறு திசையில் பேச்சு திரும்பிவிட்ட போதிலும் அந்த ஸ்லோகம் படித்த அன்பரை அல்லவா அந்த தெய்வத்தின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தது !

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனம் ‘சரஸ்வதி’ கடாட்சம் பெற்ற அந்த அன்பருக்கு மயங்கி அவரது வித்தைக்கு சால்வை போர்த்தியுள்ளது.

சரஸ்வதியே சரஸ்வதிக்கு சால்வை போர்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேது?

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்.

SOURCE:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8288/#ixzz3J7iAU7K5

“அப்ப எங்களுக்கும் குரு நீங்கதானே …” !!!

1939 ஜூனில் காசி யாத்திரையின் முடிவாக ஸ்ரீசரணாள் வடபுலத்திலிருந்து திரும்பி தென்கோடியான ராமேஸ்வரம் சென்றுகொண்டிருக்கறார். ஏறக்குறைய இறுதிக்கட்டம். திருப்புனவாயிலைக் கடந்து தேவிபட்டணம் போகும் வழி..

சுக்ரவார பூஜை பொருத்தமாக தேவிபட்டணத்தில் ஏற்பாடாகியிருந்தத. அதற்குத்தான் விரைகிறார்..

ஆயின் தேவி அங்கே காளிரூபம் கொண்டிருப்பதாக அல்லவோ தோன்றுகிறது?

அங்கு ஊராட்சி முக்யஸ்தர் ஒரு முஸ்லீம் மரைக்காயர்.. வெளிப்படவே ஐக்கிய இந்தியக் கொள்கையிலும், ஹிந்து மதத்தாரிடமும் முஸ்லீம் லீக் பகமை பாராட்டி வந்த அந்நாளில் அவர் அங்கு ஒரு பெரிய கட்சிக்கூட்டத்திறகு ஏற்பாடு செய்திருந்தார். அதன் தொண்டர்கள் ஹிந்து சமுதாயத்தின் விஷயமாக குண்டர்களே ஆகித் தெருக்களில் ஆயுதமும் கையுமாக அன்று செய்த தர்பாரில் ஊரே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்கள் நடுநடுங்கிக்கொண்டருந்தனர்.

செல்லும் வழியில் ஸ்ரீசரணாளுக்குச் செய்தி வந்தது. பயணத்தைத் தொடராமல், இருந்த இடத்திலேயே அப்போதைக்கு ‘நிப்பாட்டி’ விடலாம்; தேவிபட்டணத்தில் கூட்டம் முடிந்து, ஊர் அமைதிக்குத் திரும்பியபின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம்; வேறு வழியில்லை என்று அனைவரும் கருதினர்.

அந்த அனைவர் கருத்தும் எந்த ஒருவரின் அங்கீகாரத்தில்தான காரியமாகுமோ, அவர் ஏதும் சொல்லாமலே மோன சாந்த விக்ரஹமாக, ஆயினும் உத்ஸவ விக்ரஹமாக மேலே சென்று கொண்டேயிருந்தார்.

அதே வழியில் அந்த மரைக்காயரே எதிர்ப்படும்படி நேர்ந்தது! கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சுற்றுப்பிரதேசங்கலும் செய்து விட்டு அவர் திரும்புகையில் ஸ்ரீசரணாரின் பரிவாரம் வருவதைக் கண்டார்!

பரிவாரத்திடை வந்த பரமரையும் கண்டார்.

எப்படிக் கண்டார்? மைத்ரீ தேவதையாகவேதான் கண்டிருக்கவேண்டும

பெரியவாளிடம் நெருங்கி வந்து பெரிதாகக் கும்பிட்டு நின்றார். அவர் நெஞ்சமெல்லாம் பக்தி பூரிக்க உருகியிருந்தது வெளிப்பார்வைக்கே தெரிந்தது.

முதல் தரிசன மாத்திரத்தில் முழு மனமாற்றம்! மாறு நினைத்த மனம் அன்பிலே கொண்ட அதிசய மாற்றம்!

தற்செயலாகக் கிடைத்த தரிசனம் தாம் எதிர்பார்க்காத அமைதியையும், இன்பத்தையும் ஊட்டியதை அவருக்குத் தெரிந்த மொழிநடையில் உணர்ச்சியுடன் பெரியவாளிடம் தெரிவித்தார்.

“நம்ம ஊர்ல சாமி வந்து பூசை பண்றது பாக்கியங்க! எங்களைச் சேர்ந்தவங்களுக்கு சொல்றேங்க! என்ன பணியானாலும் செஞ்சு குடுப்பாங்க. சாமி நல்லா நம்ம ஊர்ல இருந்து, எங்களுக்கெல்லாம் அருளு பண்ணிட்டுப் போகணுங்க” என்று வேண்டிக் கொண்டார்.

“உங்க மனஸுப்படியே ஆகட்டும்!” என்று ஸ்ரீசரணர் நெகிழ்ந்து கூறி ஆசி வழங்கினார்.

ஒருபுறம் லீக் கூட்டம் அமைதியாகவே நடக்க, மறுபுறம் தேவியின்—காளி ரூபத்தில் அல்ல; ஸௌம்ய லலிதா ரூபத்திலேயே உள்ள தேவியின்——பூஜையும் கோலாஹலமாக நடந்தேறியது.

அன்னையன்பின் வடிவான அவதார அன்னைக்குச் செய்யும் பூஜை மணிக்கணக்கில் நீள்வதுண்டுதானே? அப்படித்தான் அன்றும் நடந்தது.

கூட்டம் முடிந்த பின்னும், பூஜை நடப்பதறிந்த மரைக்காயர் தம் முஸ்லீம் பரிவாரத்துடன் முகாமுக்கு வந்து, அவர்களோடு வெளியே காத்திருந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த ஏராளமான பழக்கூடைகள், பூக்கூடைகள், கட்டுக்கட்டாக ஊதுபத்தி, புட்டி புட்டியாக அத்தர், பன்னீர் முதலானவற்றை உள்ளே அனுப்பி வைத்தார்.

பூஜை முடிந்ததும் நேரே பெரியவாள் அவர்களுக்குத் தரிசனம் வழங்கத்தான் வந்தார். எப்போதுமே அன்னையன்புக்கு மூர்த்தமான அவரது திருவுருவம் இதுபோன்ற அன்னை வழிபாட்டிற்குப் பின்னோ முன்னிலும் அன்பு மெருகேறி ஜ்வலிப்பது வழக்கம். இன்றோ அந்த வழக்கத்திற்கும் அதிகமான அன்பொளி வீச வந்து நின்று, திருநயனத்தால் அதனை அவர்களுக்கு அள்ளித் தெளித்தார்.

அப்போதும், அன்னிய மதத்தினர், அன்று சில மணிகள் முன்பு கூட, என்ன அநியாயம் செய்வரோ என்று அஞ்ச வைத்தவர்கள், கனிந்த மனத்தோடு, கனியும் மலரும், மணமிகு மற்ற கையுறைகளும் கொண்டுவந்து கொட்டிப் பணிந்தவாறிருந்தனர

‘அன்னியோன்னியம்’ என்று ஒரு அழகான சொல். அன்னியம் என்பது அன்னியமாகிவிடும் ஆரன்பைக் காட்டும் சொல். அதற்கு அற்புதச் சான்றாயிருந்தது அந்த நிகழ்ச்சி.

“இத்தனை அன்பா நீங்க செய்யறதை நான் ஸந்தோஷமா ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் இவ்வளவு தாங்குமா’ன்னு இருக்கு!” என்று உள்ளத்திலிருந்து கூறினார் ஸ்ரீசரணர்.

“ஏங்க தாங்காம?” என்றார் மரைக்காயர், பரம பவ்யமாக. “ சாமியை செகத்து குரு—வுன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கும் குருதானுங்களே! நாங்க என்னதான் செய்யக் கூடாது?” என்றார் அந்த முஸ்லீம் அன்பர் !!
SOURCE:::::www.periva.proboards.com

Natarajan


Read more: http://periva.proboards.com/thread/3928/grace-love-muslim-brethern#ixzz3J3GBZZGy

” அதுதான்…அவனிடம் சொல்லு …” !!!

Source: Maha Periyavaal Darisana Anubhavangal – Part 4
As narrated by Sri V.Sundaram, Cuddalore

Contributed by Forum Member Shri Sankara Narayanan

மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும் பிரும்மபுரீஸ்வர்ரையும் நிச்சயமாகத் தரிசனம் செய்தார்கள்.

நாங்கள் பெரியவாளைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தோம். அன்றைக்குப் பெரியவா, மௌனம் ! ஆனால். அவர்களுடைய அருட்பாரிவையே பக்தர்களுக்குப் போதுமானதாக இருந்த்து.

அந்த்ச் சமயம் பார்த்து, இந்தோனேஷியாவிலிருந்து ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் தரிசனத்துக்கும், சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும் வந்தார்.

நல்லகாலமாக, அன்றைக்குக் காஷ்ட மௌனம் இல்லை; கைகளால் ஜாடைகள் காட்டினார். அதை விவரித்துச் சொன்னார், அணுக்கத் தொண்டர்.

அவருக்குச் சரித்திர ஞானம் – அதுவும், இந்தோனேஷிய சரித்திரம் ! – இல்லவேயில்லை.

நான் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராதலால், தொண்டர் கூறியதை மேலும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறி வந்தேன்.

இந்தோனேஷியா என்பது அநேகம் தீவுகளின் தொகுதி. அவற்றில், ஒரு தீவில், ஒரு இந்து மன்னர் நட்த்திய யாகத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினார், அந்த ஆராய்ச்சியாளர்.

“யாகம் நடந்த தீவின் பெயர் என்ன?” என்று ஜாடை மூலமாகவே பெரியவா கேட்டார்கள்.

ஆராய்ச்சியாளருக்குத் தெரியவில்லை, நூற்றுக்கணக்கான தீவுகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், சில முக்கியமான் தீவுகளின் பெயர்களைக் கூறத் தொடங்கினார். அவர் ஒன்றொன்றாகத் தீவின் பெர்யரைச் சொன்னதும், ‘அது இல்லை’ என்ற பாவனையில் பெரியவா தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆராய்ச்சியாளருக்கே அலுப்பு வந்துவிட்ட்து. “நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கும்போது, அவைகளின் பெயர்கள் பெரியவாளுக்கு மட்டும் தெரிந்திருக்கப் போகிறதா என்ன?” என்ற எண்ணமும் தோன்றியிருக்க்க் கூடும்.

பெரியவா, பக்தர்களின் கூட்ட்த்தில் பார்வையைச் செலுத்தினார். பின், தன் செவியின் கீழே, கைவிரல்களை வட்டமாக வைத்து, ‘என்ன பெயர்?’ என்று கேட்பது போல ஜாடை காட்டினார்கள்.

ஒருவர், “குண்டலம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.

பெரியவா, ‘அதுதான்! .. அவனிடம் சொல்லு …’ என்று ஜாடை காட்டினார்கள்.

அங்கு நடப்பதையெல்லாம் விந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேஷிய ஆராய்ச்சியாளரிடம், ‘குண்டலம்..” என்ற சொல் இரைந்து கூறப்பட்ட்து.

ஒரு துள்ளு துள்ளினார், அவர்.

“ஆமாம்! அந்த யாகம் நடந்த தீவின் முதற்சொல் குண்டலம் தான்!” என்று பக்தர்களிடம் கூறிவிட்டு, பெரியவாளிடம் முழுப் பெயரையும் தெரிவித்தார்.

பெரியவா புன்னகைத்தார். ஆராய்ச்சியாளருக்கு மகா ஆச்சரியம் ! தன்னுடன் வந்திருந்தவர்களிடம், அவர்கள் மொழியில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பேசி, பெரியவாளின் பூகோள ஞானத்தைப் பெரிதும் போற்றினார்.

ஆனால் பக்தர்களுக்கெல்லாம் உண்மை தெரியும். பெரியவா, ஞானக் களஞ்சியம்; ஞான ஊற்று; அனைத்து ஞான்ங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ரத்தினப் பெட்டகம்.

ஆசிரியனான எனக்கு நன்றாகவே புரிந்த்து – ‘இது, வெறும் படிப்பு அறிவு அல்ல !”

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தபோது நாங்களும் அதைக் காணக் கிடைத்த்து, எங்கள் பாக்கியம்.

SOURCE:::::www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/3472/name-island#ixzz3Ix2Zq58I

” பக்தர்கள் எல்லாம் நல்லா இருக்கணும் …”


Source: DInamalar dated 11 Nov-14

ஒரு சமயம், மகாபெரியவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கத்தில் முகாமிட்டுஇருந்தார். பெரியவருக்கு நெருக்கமான தொண்டர்களான திருவட்டீஸ்வரன் பேட்டை வெங்கட்ராம அய்யர், பாணாம்பட்டு கண்ணன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

அன்று மகாபெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்). பெரியவர் அன்று காலையில், அனுஷ்டானம், ஸ்நானம் முடித்துக் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வெளியே வந்தார். ஏராளமான கூட்டம் இருந்தது.

எத்தனையோ ஊர்களில் இருந்து பெரியவருக்காக ஹோமம் செய்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள், ஹோம பஸ்மா, கோயில் தண்டு மாலைகள், வில்வம், துளசி மாலைகள், பரிவட்டங்கள், திருப்பதி லட்டு,

திருநீறு, குங்குமம் என அனைத்தையும் ஏந்தி வந்தனர் பக்தர்கள்.

வந்தவர்கள் எல்லாரது நோக்கமும் பெரியவர் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இருந்தது. அதற்காக, பெரியவர் பெயரில் அவரவர் இஷ்ட தெய்வக் கோயில்களில் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டு வந்திருந்தனர். அதை ஏற்றுக்கொள்ளுமாறு எல்லாரும் வேண்டிக் கொண்டிருந்தனர்.

பெரியவர் கூட்டத்தினரை நோக்கி மனம் நெகிழும்படியான பதில் சொன்னார்.

“”நீங்க எல்லாரும் நான் (குரு) நல்லா இருக்கணும்னு ஹோமம், அர்ச்சனை செஞ்சு பிரசாதம் கொண்டு வந்திருக்கீங்க! சரி…ஆனா, எனக்கு என்ன ஆசை தெரியுமா! காஞ்சி மடத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லாரும் சவுக்கியமா இருக்கணுமேனு ஆசை! ஹோமப்பிரசாதம் எல்லாம் தெய்வ அனுக்கிரகத்தைக் கொடுக்கும் இல்லையா! பக்தர்கள் பல கவலைகளோடு என்னிடம் வருகிறார்கள். சுவாமி பிரசாதங்களை அவர்கள் பெற்றுக்கொண்டு சவுக்கியம் அடையட்டுமேனு நான் நெனக்கிறேன்!” என்று சொல்லியபடியே, அந்த பிரசாதங்களைத் தொட்டார். அதன்பின், பெரியவரின் விருப்பப்படி அவை பக்தர்களுக்கே விநியோகம் செய்யப்பட்டன.

பெரியவர் ஜெயந்தியன்று பிரசாதம் பெற்ற பக்தர்கள் எல்லாரும், தங்கள் நோய்கள், கஷ்டங்கள் எல்லாமே தீர்ந்து விட்டதாக மகிழ்ந்தார்கள்.

“பக்தர்களுக்காக நான் இருக்கிறேன்’ என்று அருள்பாலித்த மகாபெரியவரை தினமும் மனதில் நினைத்து வணங்குவோருக்கு எந்தக்குறையும் வராது.

Read more: http://periva.proboards.com/thread/8283/#ixzz3IsFIRpso

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

“புத்தகம் படித்த வித்தகர் …”

‘கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.

Author: கவிஞர் நெமிலி எழில்மணி.

புத்தகம் படித்த வித்தகர்.

 

Bala_Tripurasundari

“திரிபுரசுந்தரி திருவிளையாடல்” என்ற நூலை எழுதிட அன்னை எனக்கு ஒரு வாய்ப்புத் தந்தாள். அதனை வானதி பதிப்பகத்தார் அழகாக அச்சிட்டனர். அந்தப் புத்தகம் நெமிலியில் அருள் கொடுக்கும் அன்னை பாலதிரிபுரசுந்தரியின் சன்னதியில் பத்மஸ்ரீ இசைமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதனைப் பெரியவாள் திருக்கரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பேராவல் எனக்கு.

அதன்படி ஒருநாள் அன்னையை வணங்கிவிட்டு கருணைபொழியும் காஞ்சி முனிவரைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றேன்.

சாந்தியளிக்கும் சங்கரமடம் எழில் பூத்து விளங்கியது. ஆதவன் மெல்ல எழுந்து தனது பொன்னிறக் கதிர்களால் சங்கர மடத்தைப் பொன்னிற மண்டபமாக மாற்றிக் கொண்டிருந்தான்.

புன்முறுவல் பூத்த முகத்தோடு காஞ்சித் தெய்வம் அனைவருடனும் கனிவாக சம்பாஷித்துக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அருகே செல்ல இயலவில்லை. எனவே தூரத்தில் இருந்தவாறே அந்த இருள் நீக்கும் ஞானச் சூரியனை தரிசித்துக் கொண்டிருந்தேன்.

அனைவரும் ஒரு தட்டில் மலர், கனிகள், துளசி மற்றும் பூஜா திரவியங்களை வைத்துப் பெரியவாள் பாத கமலங்களில் சமர்ப்பித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். குருவையும், குழந்தையையும் தெய்வத்தையும் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்பது மரபு. ஆனால் நானோ வெறுங்கையுடன் ‘திரிபுரசுந்தரி திருவிளையாடல்’ புத்தகம் மட்டும் ஏந்தி நிற்கிறேன். ஒருவொருக்கொருவர் நேரே சந்தித்து, “சார் ! என்னோட புத்தகம் ரிலீசாயிருக்கு பாருங்க சார் !” என்று சொல்வோமே அந்தப் பாங்கினில் அல்லவோ நான் நின்று கொண்டுள்ளேன். எனக்கே வெட்கமாக இருந்தது.

அதுமட்டுமல்ல. எங்கேஜ்மென்ட் பட்டியல் போட்டுக்கொண்டல்லவா சென்றிருக்கிறேன். 7=30 மணி முதல் 8=30 வரை தரிசனம், 8=30 முதல் 9=00 வரை சிற்றுண்டி, 9=00 முதல் 10=00 வரை காஞ்சியில் உள்ள எனது நண்பர் வீட்டிற்குச் செல்லவேண்டும், 10=00 முதல் 12=00 வரை சென்னைக்குப் பயணம் அங்கு 1=00 மணிக்கு நண்பர் ஒருவரை சந்திக்கவேண்டும், அங்கிருந்து 2=00 மணிக்குக் கிளம்பி 5=00 மணிக்கு நெமிலி வரவேண்டும். இதுதான் எனது எங்கேஜ்மென்ட் விவரம். “நாம் வந்திருக்கிற இடம் என்ன இடம், எதிரே உள்ள தெய்வம் என்ன ஆசி வழங்குகிறது “ இதையெல்லாம் பாழும் மனது யோசிக்கிறதா என்ன? மனதைத்தான் கம்ப்யூடர் ஆக்கி விட்டோமே! அதுவோ ‘மணி எட்டாகி விட்டது என்று குத்திக் கொண்டிருந்தது.

எனக்கோ இருப்பு கொள்ளவில்லை. புத்தகத்தை பெரியவாள் ஒருமுறை தொட்டுவிட்டால்கூட போதும், அது என் ஜன்ம சாபல்யமாக ஆகிவிடும். எப்படி நெருங்குவது ? எப்படிக் கொடுப்பது?

வந்தவர்கள் அனைவருக்கும் தனது அருளாசியை வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடியதே தவிரக் குறையவில்லை. எனக்கோ இருப்புக் கொள்ளவில்லை. உடனே பெரியவாளைத் தரிசித்து விட்டு புத்தகத்தை வைத்துவிட்டு ஓடிவிட வேண்டும். எனது புத்தி அதுபோல, என்ன செய்வது ?

ஓட்டலுக்குச் சென்றால் சர்வர் முதலில் நம்மைக் கவனித்து அனுப்பிவிட வேண்டும்,

தியேட்டருக்குப் போனால் நாம் போனவுடனேயே படத்தைத் தொடங்கிவிட வேண்டும்,

பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் உடனே நாம் செல்லவேண்டிய பஸ் வந்துவிட வேண்டும்,

கோவிலுக்குப் போனால் அர்ச்சகர் உடனே நமக்கு அர்ச்சனை செய்து அனுப்பி விடவேண்டும்.

பொறுமை என்பது கடல் என்பார்கள். அந்தக் கடலின் ஒரு துளிகூட என்னிடம் இல்லையே !

அப்போது வயதான பெரியவர் ஒருவர் அங்கே வந்தார். அவர் ஒரு தட்டில் புஷ்பங்கள், கனிகள் வைத்திருந்தார். அவரிடம் நயமாக நான் வந்த விவரம் கூறி, “அந்தத் தட்டில் இந்தப் புத்தகத்தை வைத்து விடுகிறேன். பெரியவாள் தொட்டுவிட்டால் போதும்” என்று கேட்டுக்கொண்டேன்.

அம்பாளின் புத்தகமாக அது இருந்தபடியால் அவரும் மறுப்பேதும் கூறாமல் அதைத் தம் தட்டில் வைத்துக்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு தரிசனம் ஆயிற்று. திருமண சம்பந்தமாக பெரியவாளிடம் தம் ஏக்கத்தைக் கூறி தனது மகளுக்கோ அன்றி மகனுக்கோ திருமணப் பிராப்தம் செய்யுமாறு வேண்டினார். பெரியவரும் தன் மென்மையான குரலில் தமது ஆசியை வழங்கினார்.

நான் மணியைப் பார்த்தேன். ஒன்பது ஆகிவிட்டது. “சரி பெரியவா சன்னதியில் புத்தகம் வைத்தாயிற்று, கிளம்ப வேண்டியதுதான்.”

இது மனதின் ஒரு பாதியின் அறிவுரை.

மறுபாதியோ, “வந்ததுதான் வந்துவிட்டோம். பெரியவர் அந்தப் புத்தகத்தைத் தொட்டுவிடுகிறாரா என்பதைப் பார்த்து விட்டால் எவ்வளவு பெரிய நிம்மதி” என்று புத்திமதி கூறியது.

‘பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ‘

என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள்தான் எத்தனை அனுபவபூர்வமானவை !

“இருந்து பொறுமையாக தரிசனம் செய்யலாம்’ என்பது ஒரு நினைவு.

‘சரி சரி’ பெரியவாள் தரிசனம் ஆயிற்று ! கிளம்பலாம்’ என்பது மறு நினைவு.

‘புத்தகத்தைத் தொட்டுவிட்டால் கூட போதும், சென்று விடலாம்’ என்று ஒரு காம்ப்ரமைசஸ்.

அப்போதுதான் தட்டில் உள்ள புத்தகத்தை மலரை எடுப்பது போன்று மென்மையாகப் பெரியவர் எடுத்தார்.

அவ்வளவுதான்! “அப்பா! எவ்வளவு பெரிய ஆசி ! என்னையே பரமாச்சார்யாள் தொட்டு விட்டது போன்ற இன்ப உணர்வு” என்னால் மகிழ்ச்சியைத் தாள இயலவில்லை.

அந்தப் புத்தகத்தை எடுத்து வழவழப்பாக உள்ள அட்டைகளைத் தடவிக் கொடுத்தாரே பார்க்கலாம்! பிறகு மெல்லப் பிரித்தும் விட்டார். எனக்கோ ஆனந்தம் எல்லையைத் தாண்டியது. மிக அருகில் சென்று அந்த தெய்வீகக் காட்சியை அணு அணுவாக ரசித்தேன். எங்கேஜ்மென்ட் மனது எங்கேயோ போய் விட்டது.

மூக்குக் கண்ணாடியை சரிசெய்து கொண்டு அன்னையின் வரலாறு தொடங்கும் முதலிரண்டு பக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். எங்கும் நிசப்தம்.

‘நெமிலியில் வாழும் சிவம் பெருக்கும் சீலர் ஸ்ரீ டி.கே.சுப்ரமண்ய ஐயர் கனவில் அன்னை தோன்றியமையும், ஆற்றிலேயிருந்து அன்னையை எடுத்து வந்து வீட்டில் ஆராதனை செய்தமையும், வீட்டையே கோயில் போல் அமைத்துப் பூஜைகளைத் தொடர்ந்து நடத்தியமையும்’ அடங்கிய அந்த இரண்டு பக்கங்களை மிகவும் உன்னிப்பாகப் படித்தார்.

அன்னை கனவில் தோன்றும் அற்புதக் காட்சியினைப் படமாக வரையப் பட்டிருந்ததை ஆர்வத்தோடு பார்த்தார். பின்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதனை மென்மையாக மீண்டும் ஒரு தடவை தடவிக் கொடுத்தார். அழகான பொம்மையை ஒரு சின்ன பாப்பா எத்தனை ஆர்வத்துடன் மெல்ல மெல்ல தடவுமோ அதே போன்று அந்த தெய்வக் குழந்தையும் செய்தது.

மெல்ல மேல் நோக்கியவாறு “இந்தப் புஸ்தகத்தை யார் வெச்சது?” என்று கேட்டாரே பார்க்கலாம்.

‘ஆஹா! புஸ்தகத்தைத் தொட்டுவிட்டாலே போதும்’ என்றிருந்த எனக்கு போனஸ் அளிப்பதைப் போன்று பேசவும் செய்கிறாரே என்ற பேரானந்தத்துடன் “நான்தான் வெச்சது” என்று கூறினேன்.

“நீதான் நெமிலி எழில்மணியா?”

எனக்கோ கண்கள் குளமாகிவிட்டன.

“ஆமாம்” என்றேன்.

பெரியவர் என்னைக் கூர்ந்து நோக்கவும் எனக்கோ மின்சார அதிர்ச்சிபோல் ஆகிவிட்டது.

“நீதான் எழுதினையா/”—இது பரமாச்சார்யள் கேள்வி. மெல்லத் தலையசைத்தேன்.

“இதை யார் ரிலீஸ் பண்ணா?”

நான் பதட்டத்துடன், “வானதி பதிப்பகத்தார் ரிலீஸ் பண்ணியிருக்கா” என்றேன்.

பெரியவர் சிரித்தார்.

“புஸ்தகத்தை யார் ரிலீஸ் பண்ணா?”

உடனே நான் அவசர அவசரமாக, “சீர்காழி சார்தான் இதை அம்பாளோட நவராத்திரி விழாவிலே ரிலீஸ் பண்ணினார்” என்றேன்.

மீண்டும் ஒருமுறை புத்தகத்தின் தலைப்பைப் படித்தார். “திரிபுர சுந்தரி திருவிளையாடல்” என மெல்ல உச்சரித்தார். பின்பு கையால், கேள்வி கேட்பது போன்று, “ஆமா! என்ன திருவிளையாடல் பண்ணியிருக்கா சொல்லேன்” என்று கூறவும் என் தைரியம் என்னை விட்டகன்றது.

பரமாச்சார்யாள் பேசுகிறார். எத்தனையோ லட்சக் கணக்கான மக்களுக்கு அருள்மழை பொழியும் அந்த தெய்வம் ஏதுமே தெரியாத இந்தப் பேதையை—சின்னஞ்சிறுவனை—–ஆசீர்வதித்துப் பேசச் சொல்கிறாரே ! இது என்ன விளையாட்டு ! இதுவும் திரிபுர சுந்தரியின் திருவிளையாடல்தானோ ?

இமய மலையின் முன்னே ஒரு சின்னஞ்சிறிய கூழாங்கல் என்ன பேசும்? ஆயிரங்கோடி சூரிய வெளிச்சத்துக்கு முன்னே ஸீரோ வாட் பல்பு எப்படி ஒளி வீசும் ?

“வந்து சார்…….வந்து……..வர்றவாளுக்கெல்லாம் க்ஷேமம் உண்டாறது. நெறையப்பேர் கல்யாணப் பிராப்தம் பண்ணி வைக்கறா ! பல பேர் டிரான்ஸ்ஃபர், ப்ரமோஷன்னு கேட்டதையெல்லாம் அம்மா பண்ணி வைக்கறா…..” இன்னமும் ஏதோ சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துக் கொட்டியது.

தெய்வத்தை வேண்டுகிறோம்—பாடுகிறோம். வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். அந்தத் தெய்வம் திடீரென எதிரில் காட்சி கொடுத்தால் எப்படி இருக்கும் ?

“உனக்கு என்ன வேண்டும் ?” எனக் கேட்டால் எப்படி இருக்கும் ? என்ன கேட்கத் தோன்றும் ? திக்பிரமை பிடித்தது போலல்லவா ஆகி விடும் ? அந்த நிலையில்தான் நான் இருந்தேன்.

தரிசனம் செய்துவிட்டு மட்டும் சென்று விடலாம் என்று நினைத்தது என்ன?

புத்தகத்தை மட்டும் தொட்டுவிட்டால் போதும் என்று நினைத்தது என்ன?

அதற்கும் மேலாக தெய்வமே என்னைப் “பேசு” என்று கூறிய பேரருள் என்ன?

ஓ! எந்த வார்த்தைகளைக் கொண்டு எப்படிச் சொல்லி என் மனநிலையை விவரிக்க இயலும் ?

காமாட்சிச் செல்வரின் கண்களிலிருந்து வீசும் அந்தக் காந்தக் கதிர்களைச் சந்திக்க இயலாமல் எனது உடலும் உள்ளமும் பதறிக்கொண்டிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?

நான் குழறுவதைப் பார்த்து அந்தப் பெரும் தெய்வம் புன்னகைத்தவாறே, “உன் தாய் பாஷை என்ன?” என்று கேட்கவும் பிரமித்தேன்.

தெலுங்கு என்று கூறவும் திருவாய் மலர்ந்து சிரித்தது அந்தத் தெய்வம்.

“உன் வீட்டுக்குப் பக்கத்திலே ஓர் ஆறு போறதா?” என்று கேட்டாரே பார்க்கலாம் ! அசந்து போனேன் நான். என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது! “ஆமாம்” என்றேன்.

“நாப்பது வருஷத்துக்கு முன்னே உன்னோட வீட்டுக்கு நான் வந்திருக்கேனே” என்று சொல்லவும் அப்படியே கதறி விடலாம் போல் இருந்தது எனக்கு.

ஆம் ! அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கும். 1945—ஆம் ஆண்டுஎன்று நினைவு. என்னுடைய தந்தையார் நெமிலி ஹெட்மாஸ்டர் டி.கே.ஜானகிராமையர் அவர்கள் பெரியவாளுக்குப் பாதபூஜை செய்தது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

பல்லக்கு, யானை, குதிரைகள் மற்றும் காஞ்சி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழுமியிருந்தது மறக்க இயலுமோ?

என் முகத்தைப் பார்த்துவிட்டு என் ஜாதகத்தையே கூறும் அந்த தெய்வத்திற்கு முன்னால் நிற்கக்கூட இயலுமோ ?

நான் மிக மிகப் பணிவுடன், “நினைவிருக்கு” என்கிறேன்.

அது மட்டுமா?

அடுத்துக் கேட்டாரே ஒரு கேள்வி!

“இங்கேயிருக்கிற பாடசாலை வெங்கட்ராமன் உங்களுக்கு சம்பந்தி அல்லவா?”

ஓ! என்ன இது ? நடப்பது கனவா அல்லது நினைவா ? என் மனைவியின் அண்ணா கோதண்டராமனுக்கு பாடசாலை வெங்கட்ராமய்யரின் புதல்வி சந்திராவைத்தான் மணமுடித்தார்.காஞ்சியில் நடந்த அந்தத் திருமணத்திற்கு கல்கி அதிபர் சதாசிவம் அவர்களும் இசையரசி திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களும் வந்திருந்தனர்.

“கோதண்டராமா!—ரகுராமா!” என்று ராம நாமமே வரக்க்கூடிய ஒரு பாடலைப் பாடி திருமதி எம்.எஸ் அவர்கள் திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இசை விருந்து அளித்தார்கள். எத்தனை வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி அது! பெரியவாளின் அருளாசியோடு நடந்த திருமணமல்லவா அது!

“ஆமாம் ! ஆமாம் ! சம்பந்திதான்!” என்று என்று பரபரப்புடன் கூறுகிறேன்.

பெரியவர் மீண்டும் புன்னகை பூக்கிறார்.

மீண்டும் ஒரு தடவை அந்தப் புத்தகத்தைத் தடவிக் கொடுத்தார். இரு கரங்களாலும் ஆசியை அள்ளி வழங்கினார்.

ஆஹா! பிறவிப்பயனையே நான் பெற்றேன். நவமணிகள் நிறைந்து வானுயர விளங்கும் நவரத்னச் சிகரம் ஒரு சின்னஞ்சிறு கூழாங்கல்லை எடுத்து அதன் பளபளப்பை வியந்தால் அந்தக் கூழாங்கல்லுக்கு எப்படி இருக்கும் ? அந்தக் கூழாங்கல் நிலையில்தான் நான் இருந்தேன்.

இப்படியொரு அற்புதம் விளைவித்த அந்தப் பெரியவரை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து நிம்மதியாக வணங்கினேன். அவரைத் தொடக்கூடாது என்பார்கள். நான் மானசீகமாக அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு என் நெஞ்சிலே சேர்த்துக் கொண்டேனே, அதை யார் தடுக்க முடியும் ?

செண்பகப் பாண்டியன் சமஸ்தானத்தில் விரிசடை சிவனின் திருவிளையாடலால் வறுமைப் புலவன் தருமிக்குப் பொற்கிழி கிடைத்தது அன்று.

காஞ்சிப்பெரியவாள் சமஸ்தானத்தில் திரிபுரசுந்தரி திருவிளையாடலால் இந்த ஏழைக் கவிஞனுக்குக் கிடைத்து விட்டது பரமாச்சார்யாளின் அருட்கடாட்சம் என்கிற பொற்கிழி.

இதனை என்றும் என் இதயம் மறக்காது.

Read more: http://periva.proboards.com/thread/8267/#ixzz3INP0YiPB

SOURCE::::www.periva.proboards.com

Natarajan

” குல தெய்வமே கட்டளை இட்டதா …? “

காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க கிராமப்பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் வந்திருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவர் முன் பணிவுடன் நின்ற அவர் “”சுவாமி! உங்க உத்தரவுப்படி நான் நடக்கத் தயாரா இருக்கேன். நீங்க சொல்ற தர்ம காரியங்களுக்கு செலவு பண்ணவும் விரும்பறேன்,” என்று தெரிவித்தார்.

அதற்கு பெரியவர், “”உன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பக்தி சிரத்தையுடன் பழகு. உன் மனைவி, பிள்ளைகளிடம் அன்பாக இரு. கூடிய வரையில் தப்பு, தண்டான்னு வேண்டாத விஷயங்களில் ஈடுபடாதே. உண்மையைப் பேசி நல்வழியில் நட. அதுவே போதுமானது,” என்று அறிவுரை கூறினார்.

இதைக் கேட்ட பணக்காரருக்கு ஆச்சரியமாகிப் போனது. பெரியவர் மடத்திற்கு ஏதாவது நன்கொடை கேட்பார் என்று எதிர்பார்த்தால் இப்படி நேர்மாறாகப் பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டார்.

இருந்தாலும், அவருடைய எண்ணத்தை மீண்டும் அவருக்குத் தெரிவிக்கும் விதத்தில், “”சுவாமி! நீங்க சொன்னபடி பேச்சைக் கேட்பேன். எதிர்காலத்திலும் நீங்க காட்டுன வழியில் நடந்து கொள்வேன். மேற்கொண்டு நீங்க என்ன உத்தரவு போட்டாலும் அதைக் கேட்கவும் தயாரா இருக்கேன்,” என்று சொல்லி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.

அவரை உற்றுப் பார்த்த பெரியவர், “”உங்க குலதெய்வம் அய்யனார். அவரோட கோயில் வாசலில் குதிரை சிலை இருக்கு. அதெல்லாம் பராமரிப்பு இல்லாமல் பழுதாகிட்டுது. அதையெல்லாம் சரி பண்ணி, வர்ணம் பூசி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வை,” என்று உத்தரவிட்டார்.

இதைச் சொன்னதும் பணக்காரர் பிரமித்துப் போனார். “”ஆமாங்க சாமி! எங்க ஐயாவும்(தந்தை) அந்திம காலத்தில இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி விட்டுப் போனார். இருந்தாலும் அதை நான் கண்டுக்காம விட்டுட்டேன். தகப்பனார் சொன்ன அதே விஷயத்தை நீங்களும் சொல்றதைக் கேட்டா அந்த அய்யனாரே வந்து கட்டளையிட்டது போல இருக்கு. நிச்சயம் உங்க ஆசியோடு திருப்பணியை இப்பவே ஆரம்பிக்கறேன்” என்று சொல்லி புறப்பட்டார்.

வந்த பணக்காரரின் குலதெய்வம் அய்யனார் என்பதையும், அந்தக் கோயில் பாழ்பட்டு கிடப்பதையும் மகாபெரியவர் எப்படித்தான் உணர்ந்தாரோ என்று அந்தப் பணக்காரர் ஆச்சரியப்பட்டது போல, நமக்கும் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. அவருக்கு அய்யனார் குலதெய்வம் என்றாலும், மகாபெரியவரையும் குலதெய்வமாய்த் தான் கருதியிருப்பார்!

Read more: http://periva.proboards.com/thread/8254/#ixzz3IGxz38qO

source::::www.periva.proboards.com

Natarajan

” ஐப்பசி 20…இன்று அன்னாபிஷேகம்…ஒரு பிடி அரிசி ஆனாலும் …”

இன்று அன்னாபிஷேகம்-பெரியவா போஸ்ட்
சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

Source::::www.periva.proboards.com

Natarajan

கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு

என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா.

அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர்,

கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று,

காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.

1234201_315112848661397_4724600860700186658_n.jpg

ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக அன்னாபிஷேக

தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்

கருணை துணை நின்றது.

ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு,

ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டை

அனுப்பிவிட்டார்.

“அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக்

கொள்ளலாமா?” என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.

“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி

வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன்.

போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம்

அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ”

என்றார்கள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால்,

முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.

“உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு”

என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்று

மகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.

“அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்?

அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க்

டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை.”

இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு

டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப்

பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன்

ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம்

கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான்

மகாசுவாமிகள்.

நடராஜன்
Read more: http://periva.proboards.com/thread/8260/#ixzz3IGv4CfqN

” அந்த மாதிரி வரம் கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை …”

ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில்

கவலை தெரிந்தது.

“என்ன சமாசாரம்னு கேளு” என்று தொண்டரிடம்

சொன்னார்கள் பெரியவா.

1f22d-1கூர்கா சொன்னார்.

“நான் பிறந்ததிலிருந்தே கஷ்டங்களைத்தான்

அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஏதோ

புண்ணிய வசத்தால் தெய்வ ஸ்வரூபமான பெரியவா

தரிசனம் கிடைச்சிருக்கு….இனி எனக்கு ஜன்மாவே

வரக் கூடாது என்று அனுக்ரஹம் பண்ணணும்…”

“ஆகா,அப்படியே ஆகுக! உனக்கு இனி ஜன்மாவே கிடையாது!”

என்று பெரியவாள் சொல்லி விடவில்லை.

பின் மெதுவாகச் சொன்னார்கள்.

“அந்த மாதிரி வரம் கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை.

நான் தினந்தோறும் பூஜை செய்யும் சந்த்ரமௌளீஸ்வரரையும்

த்ரிபுர சுந்தரியையும் உனக்காகப் பிரார்த்தனை செய்து

கொள்கிறேன்….”

கூர்காவுக்கு இந்தப் பதில் நியாயமாகப்பட்டது போலும்.

ஒரே குதூகலம் அவருக்கு.

பிரசாதம் பெற்றுக் கொண்டு;,

“எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது….ஈசுவராக்ஞை”

என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே போனார்.

“ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி, எனக்கு ஜன்மா

வரக் கூடாதுன்னு கேட்டு, இவன் ஒருத்தன் தான்

வந்திருக்கான்!” என்று கண்களில் ஞானஒளி வீசக்

கூறினார்கள் பெரியவா.

“மனுஷ்யனாக அவதாரம் பண்ணிய ராமன், எந்தத்

தைரியத்தில் ஜடாயுவுக்கு ஸ்வர்க்க லோகத்தைக்

கொடுத்தான்? அவனறியாமல் நாராயணத்வம்

வெளிப்பட்டு விட்டது” என்று ஒரு பௌராணிகர்

கூறியது நினைவுக்கு வந்தது.

பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த

கிங்கரர்களுக்குப் புரியவில்லை.

கூர்காவுக்குத் தெரிந்திருந்தது !!!!

SOURCE:::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8233/#ixzz3ICgX2QEG